Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 28, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 04

                                                   
அச்சுப்பிச்சு அப்புமணி !
கோவிலில் ஸ்வாமி தரிசனத்தை முடித்து விட்டு அப்புமணியும் அம்மாவும் வீடு திரும்பினார்கள். சாப்பிட்டு முடித்தபின் கட்டிலில் ஏறிப் படுத்த அப்புமணி, "அம்மா, நீ இங்கே வாயேன் " என்றான்.
"இதோ அடுப்படி வேலையை அஞ்சே அஞ்சு நிமிஷத்தில் முடிச்சிட்டு வந்துடறேன் " என்று சொன்ன அம்மா, சிறிது நேரத்தில் வாசல் கதவை மூடித்  தாள் போட்டு விட்டு எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு அப்புமணி அருகில் வந்து, "இப்போ சொல்லுடா செல்லம். ஏன் கூப்பிட்டே ?" என்று கேட்டாள். 
"அம்மா, நீ இனிமே அழவே கூடாது. நீ அழுதால் எனக்கு இங்கே என்னவோ செய்யுது " என்று நெஞ்சில் கை வைத்துக் காட்டினான். அதைக் கண்டு நெகிழ்ந்து போன அம்மா, "எல்லாப் பிள்ளைகளையும் போல நீ சமர்த்தா இருந்தால், நான் ஏண்டா அழுகிறேன் ?" என்றாள்.
"சமர்த்தாகணும்னா என்னம்மா செய்யணும் ?"
"மத்தவங்க மாதிரி நீயும் இருக்கப் பழகிக்கணும் "
"நான் யாரைப் பார்த்துப் பழகிக்கணும் ?"
"உன் வயசுப் பிள்ளைங்க, உன்னோட கூடப் படிக்கிற பிள்ளைங்க எப்படிப் பேசறாங்க ... எப்படி நடந்துக்கறாங்கனு கவனிச்சுப் பார் .. நீயும் அந்த மாதிரி பேசப் பழக முயற்சி பண்ணு. உன்னோட படிக்கிற பிள்ளைகளில் யாரை எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் ? "
"ராமு , சோமுனு  ரெண்டு பேர் இருக்கிறாங்களே.. ரெட்டைப் பிள்ளைங்க அவங்களைத்தான்  எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும். அவங்க ரொம்ப புத்திசாலிங்கனு எங்க டீச்சரே சொல்லுவாங்க. "
"நீ அவங்களோடு சேர்ந்து பழகு ... அவங்களோட பழக்க வழக்கத்தை நீயும் கத்துக்கோ" என்று அம்மா சொல்ல , அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்ட அப்புமணி, "சரிம்மா" என்று சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்து விட்டான். 
மறுநாள் ஸ்கூலில் :::: - " டேய் ... ராமு .. சோமு ... என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க.  என்னையும் உங்களைப் போல புத்திசாலி ஆக்குங்க   " என்று அப்புமணி கேட்க , "என்னடா இவன் ... இப்படிக் கேட்கிறான்" என்று வியப்புடன் சோமுவைக் கேட்டான் ராமு .
"நீ சும்மா இரு ... இப்போ பாரு வேடிக்கையை " என்ற சோமு,"அடே .. அச்சுப் பிச்சு .. அடுத்த வாரம் நம்ம ஊர்லே சந்தை கூடும். அங்கே புத்தியைக் கூரு  கட்டி விப்பாங்க. அதிலே ரெண்டு கூரு புத்தி வாங்கி உன் மண்டையிலே திணிச்சிடலாம்." என்றான் .
"டேய் .. வாங்கிறது வாங்குறோம். ரெண்டுன்னு இல்லாமே, நிறைய கூரு வாங்கி என் தலையில் வையுங்கடா .. நான் உடனே புத்திசாலி ஆகணும் " என்று அப்பாவித் தனமாக சொன்னான் அப்புமணி 
"டேய் .. சோமு ... வேண்டாம்டா.. நீ சொல்றதை அவன் நிஜம்னு நம்பறான் .. பாவம்டா ...அவனை கோமாளியாக்காதே " என்றான் ராமு.
"நீ சொல்றதும் சரிதான் .. நம்ம கூட படிக்கிற ஒருத்தனை நாமளே முட்டாள் ஆக்கக் கூடாது ... ஆனா இவன் ஆபத்தான ஆளாச்சேடா . சமய சந்தர்ப்பம் தெரியாமே நம்மளே இவன் வம்பில் மாட்டிடுவானே "
"ச்சே .. அவன் அப்பாவிடா ... வேணும்னு எதுவும் செய்ய மாட்டான். நாம அவனுக்கு ஒரு சான்ஸ் குடுத்துப் பார்ப்போமே" என்று ராமு சொன்னதும் , அதற்கு ஒத்துக் கொண்ட சோமு, "அச்சுப்பிச்சு .. நாங்க உன்னை எங்க கூட சேர்த்துக்குறோம். ஆனால் நாங்க உன்னை ஏதாவது கேட்டால் தான் நீ வாயைத் திறந்து பதில் சொல்லணுமே தவிர, மத்தவங்க கூட நாங்க பேசிட்டு இருக்கிறப்போ முந்திரிக் கொட்டை  மாதிரி ஏதாது உளறி வச்சா ... மவனே ... நீ தொலைஞ்சே " என்றான் .
"சரி .. சரி ... ஸ்கூல் பெல் அடிக்கிற சத்தம் கேட்குது .. ஓடி வாங்கடா " என்று ராமு சொன்னதும் மூவரும் வெகு வேகமாக பள்ளியை நோக்கி ஓட்டமெடுத்தார்கள்.  அப்போது சோமுவின் பேனா அவன் பையிலிருந்து விழுந்ததை அப்புமணி கவனித்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை.
சிறிது நேரத்துக்குப் பின் வகுப்பறையில் .... "அய்யய்யோ என் பேனாவைக் காணலே .. யார் எடுத்தது ?" என்று சோமு அலறினான். "நாங்க  யாரும் உன் பக்கத்திலேயே இது வரை வரலியே " என்று அவனது நண்பர்கள் சொன்னார்கள் .
"டேய் .. அச்சுப்ப்பிச்சு ... என் பேனாவை நீ பார்த்தியா ?" என்று சோமு கேட்க, "ஸ்கூல் பெல் அடிக்கிற சத்தம் கேட்டு நாம மூணு பேரும் ஓடி வந்தோம்தானே. அப்போ உன்னோட பேனா தெருவிலே விழுந்துடுச்சுது " என்று அப்புமணி சொல்ல, "விழுந்ததைப் பார்த்தே தானே.. எடுத்துட்டு வர்றதுதானே " என்று கோபமாகக் கேட்டான் சோமு.
"மத்தவங்க பொருளை எடுக்கக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க "
"விழுந்ததைப் பார்த்ததும் எங்கிட்டே சொல்றதுதானே ?" 
"நீ தானே சொன்னே, 'நான் ஏதாது கேட்டால்தான் வாயைத் திறந்து பதில் சொல்லணும்னு" என்று அப்புமணி சொல்ல, "டேய் ... ராமு, இவனை நம்ம கூட கூட்டு சேர்த்துக்கிறதும் நம்ம கழுத்தை நாமே அறுத்துக்கிறதும் ஒண்ணுதான். இவன் நம்ம கூட்டணிக்கு வேண்டாம்டா " என்று சோமு சொன்னான் .
"அப்படியெல்லாம் சொல்லாதீங்கடா.. நான் புத்திசாலி ஆகணும்டா .. எங்க அம்மா சிரிக்கணும்டா" என்று அப்புமணி கெஞ்ச, " சரி .. போகட்டும்.. இந்த ஒரே ஒரு தடவை இவனை மன்னிச்சு விட்டுடலாம்டா " என்று ராமு சொன்னான் .
அந்த சமயத்தில் , டீச்சர் உள்ளே வர மாணவர்கள் அமைதியாக எழுந்து நின்றார்கள் .
"எல்லாரும் ஹோம் வொர்க் நோட்டை என் டேபிள் மேலே கொண்டு வந்து வையுங்க " என்று டீச்சர் சொல்ல, மற்ற மாணவர்களுடன் சேர்ந்து அப்புமணியும் அவனது நோட்டைக் கொண்டு போய்  வைத்தான் .
"அடடே .. அச்சுப்பிச்சு நீ ஹோம் வொர்க் கூட செஞ்சிருக்கிறியா ?" என்று டீச்சர் ஆச்சரியமாகக் கேட்க, "இல்லை" என்று பதில் சொன்னான் அப்பு மணி.  
"ஹோம் வொர்க் பண்ணாட்டா ஏன் நோட்டைக் கொண்டு வந்து இங்கே வைக்கிறே ?" 
"ஹோம் வொர்க் எழுதினவங்க மட்டுந்தான் நோட்டை வைக்கணும்னு நீங்க சொல்லலியே  " என்றான் அப்புமணி 
"பிள்ளைகளா ... இந்த ஏரியாவில் நல்ல இரும்புத் தூண் எங்கே இருக்குனு உங்க யாருக்காவது தெரியுமா ?" என்று டீச்சர் கேட்க, " ஏன் டீச்சர் இதைக் கேட்கிறீங்க ?" என்று கோரஸாகக் கேட்டார்கள் மாணவர்கள்.
"இந்த அச்சுப்பிச்சுக்கு டீச்சரா இருக்கிறதை நினைச்சு அந்த தூணில் நான் முட்டிக்கணும்" என்று டீச்சர் சொல்ல  வகுப்பறையிலிருந்த அத்தனை மாணவர்களும் சிரித்தார்கள். அது ஏன் என்பது தெரியாத அப்புமணி திருதிருவென விழிக்க மற்றவர்களின் சிரிப்பு இன்னும் அதிகமானது.
-------------------------------------------------------- தொடரும் ............. 

Friday, August 21, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 03

                                                       
அச்சுப்பிச்சு அப்புமணி !
சிறிதுநேரத்துக்குப்பின் கண்களைத் துடைத்து க் கொண்ட அம்மா, பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அப்புமணியிடம் கொடுத்தாள் .    அவன் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு, "அப்பு, நீ போய் குடைராட்டினத்தில் சுத்திட்டு வா. அம்மா   இங்கே இருக்கிறேன் " என்று சொல்ல, பணத்தைக் கையில் வாங்கிக் கொண்ட அப்புமணி  குடை ராட்டினத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா மீண்டும் அழ ஆரம்பித் தாள்.  அதைக் கண்ட பெரியவர், "நீ என்னோட பொண்ணு மாதிரி .. நீ அழுவதை என்னாலே பொறுத்துக்க முடியலே . எல்லாருமே கஷ்டத்துக்கு விடிவு தேடித்தான் கோவிலுக்கு வர்றாங்க. சந்தோசமா இருக்கும்போது சர்க்கஸ் சினிமா டிராமான்னு சுத்துவாங்க. கோவிலுக்கு உள்ளே கூடப் போகாமல் வெளியில் உக்காந்து அழும் அளவுக்கு உனக்கு அப்படி என்னம்மா மனக் கஷ்டம் ?" என்று கனிவான குரலில் பெரியவர் கேட்டார். 
"சாமி , எனக்கு என் பிள்ளையாலே மன நிம்மதியே இல்லே " என்று அம்மா  சொல்ல, " என்னம்மா சொல்றே ? இந்தப் பையனாலே உனக்கு மனக்கஷ்டமா ? இவனுக்கு என்ன குறை ? ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி மாதிரி அழகா இருக்கிறான் " என்றார் பெரியவர்.
"சரியா சொன்னீங்க .. கன்னுக்குட்டிக்கு இருக்கிற அளவுக்குத்தான் இவனுக்கு மூளை இருக்கிறது. கொஞ்ச நேரம் முன்னாடி இவன் கிட்டே 'உன் பேர் என்ன'னு  நீங்க கேட்டதுக்கு "அச்சுப்பிச்சு அப்புமணி"ன்னு சொன்னான். என்னவோ 'அச்சுப்பிச்சு'ங்கிறது இவன் படிச்சு வாங்கின பட்டம் மாதிரி பெருமையா சொன்னான். இவனோட படிக்கிற பிள்ளைங்க இவனைக் கிண்டல் பண்ணி "அச்சுப்பிச்சு"ன்னு பேர் வச்சிருக்கிறாங்க. அதைக் கூட தெரிஞ்சுக்காத அளவுக்கு அசடா இருக்கிறான்"
"ஏம்மா பிறவியிலேயே ஏதாது கோளாறா ?"
"இல்லே சாமி .. நான் செஞ்ச பாவம் .. இவன் ஆள் வளர்ந்திருக்கிற அளவு மூளை  வளரலே . எதை செய்யணும் ... எதை செய்யக்கூடாது .. எதைப் பேசணும் .. எதைப் பேசக் கூடாதுன்னு தெரியாமே எதையாது பேசி மத்தவங்க  கேலிக்கும் சாபத்துக்கும் ஆளாகி நிக்கிறான் சாமி ."
"படிக்கிறானா ?"
"ஆறாவது படிக்கிறான் ?"
"அறிவில்லாத ஒருத்தன் எப்படிம்மா ஆறாங்கிளாஸ் வரை படிச்சிருக்க முடியும்?"
"கிராமத்திலே நாங்க ரொம்ப வசதியான குடும்பம் .. எங்க குடும்பத்தைப் பத்தி என் பிள்ளையைப் பத்தி இங்கே எல்லாருக்குமே தெரியும் . இவன் படிச்சு முடிச்சு எந்த நாட்டையும் ஆளப் போறதில்லேங்கிறது தெரிஞ்சு இவன் திறமையைப் பத்திக் கவலைப் படாமே  ஒவ்வொரு வருஷமும் இவனை  ஒவ்வொரு வகுப்புலே தூக்கிப் போடறாங்க. இப்பல்லாம் சின்ன பிள்ளைங்களுக்கு பாஸ் பெயில் இதெல்லாம் கிடையாதே. அதனாலே இவன் ஆறாம் வகுப்பு வரை வந்து சேர்ந்துட்டான்" என்று சொன்ன அம்மா வீட்டிலிருந்து கோவிலுக்கு வரும் வழியில் நடந்த சம்பவத்தை பெரியவரிடம் சொன்னாள். 
"வீட்டில் தண்ணி நிறைஞ்சு வழியறப்போ குழாயை மூட சொன்னேன். அதை வேத வாக்கா எடுத்துகிட்டு , திறந்திருக்கிற குழாயை எல்லாம் மூட ஆரம்பிச்சிட்டான். இப்படியொரு பிள்ளையை வச்சுகிட்டு  எப்படி நான் அழாமே  இருக்கமுடியும் ?"
"பச்சப்புள்ளைங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க. சில விஷயங்களை பார்த்து நாம் ரசிக்கணும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கணும். சின்னப் புள்ளைங்களோட விளையாட்டுத் தனமான செய்கைகளைப் பார்த்து நாம மனசு உடைஞ்சு போயிடக் கூடாது . தைரியமா இரும்மா . குழந்தைகளே ஒரு புரியாத புதிர்தான். குழந்தைப் பருவத்தில் முட்டாளாக இருந்தவங்க, கெட்டு அலைஞ்சவங்களில்  எத்தனையோ பேர், பிற்காலத்தில் அறிவாளியா ஞானியா மாறி நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது பண்ணி இருக்காங்க. ஆண்டவன் கருணை இருந்தால் அசடு கூட அறிவாளியா மஹா கவியா மாறுவான். ஆடுமாடு மேய்ச்சு கிட்டிருந்த ஒரு அறிவிலி பிற்காலத்தில் மஹா கவி காளி தாஸாக மாறலையா? மனசைத் தேத்திக்கோ. கடவுள் நல்லவங்களை சோதிப்பான் . ஆனால்  கைவிட மாட்டான். நீ சந்தோசப் படற அளவுக்கு அவன் பெரிய ஆளா வருவான் . நீ கடவுளை நம்பும்மா" என்று பெரியவர் சொல்ல, " அந்த நம்பிக்கையில் தான் சாமி நான் இங்கே வந்தேன் " என்று சொல்லும்போதே  அம்மா  அழ ஆரம்பித்து விட்டாள்.
"அம்மா, நான் ராட்டினம் சுத்தி முடிச்சிட்டேன் " என்று கத்தியபடி அங்கே வந்த அப்புமணி, அம்மா அழுவதைப் பார்த்ததும், " ஏய் தாத்தா, எங்க அம்மா  வீட்டிலிருந்து கிளம்பும்போது நல்லா சிரிச்சு பேசிட்டு   வந்தாங்க . நீ வந்து எதையோ பேசி எங்க அம்மாவை அழ வைக்கிறே ? எங்க அம்மா கிட்டே என்ன சொன்னே ?" என்று கோபமாகக் கேட்டான்.
"  ஆடுமாடு மேய்ச்சு கிட்டிருந்த ஒரு அறிவிலி பிற்காலத்தில் மஹா கவி காளி தாஸாக மாறின கதையை உங்க அம்மாவுக்கு சொன்னேன் " என்று பெரியவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே," அவ்வளவுதானே . அம்மா  இதோ பாரு ... நாளைக்கே நான் காளிதாஸ் ஆயிடுவேன் " என்றான் .
"எப்படிடா ?!" என்று அம்மா ஆச்சரியத்துடன் கேட்க , " என்னோட பேரை நான் 'அச்சுப்பிச்சு காளிதாஸ்'ன்னு மாத்திடுவேன் " என்று அப்புமணி சொன்னதைக் கேட்டு அம்மாவும் பெரியவரும் சிரித்தார்கள்.
"தாத்தா .. நான் எங்க அம்மாவை சிரிக்க வச்சிட்டேன் " என்று கைதட்டி சிரித்தான் அப்புமணி.
"நீ கவலைப் படற அளவுக்கு உன் புள்ளை முட்டாளோ பைத்தியமோ இல்லை. அவன் விளையாட்டுப் பாலகன். பொறுமையை கைவிடாதே . நீ கடவுளை நம்பு. நீ மனசு சந்தோசப் படற அளவு, நாலு பேர் மதிக்கிற அளவு  நல்ல நிலைக்கு வருவான். நீ சாமி தரிசனத்தை முடிச்சிட்டு நேரத்தோடு வீடு போய் சேரும்மா " என்று பெரியவர் சொல்ல, அவரை வணங்கிவிட்டு அம்மாவும் அப்புமணியும் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் . 

-------------------------------------------------------- தொடரும் 

Friday, August 14, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 02

                                           
  அச்சுப் பிச்சு அப்புமணி !
அன்று மத்தியானம் மூன்று மணி வரை அப்புமணி வீடு வந்து சேரவில்லை. என்ன  காரணம் என்பது தெரியாத அம்மா வீட்டு வாசலில் தவம் கிடந்தாள். அவனோடு சேர்ந்து ஸ்கூல் சென்ற மற்ற குழந்தைகளும் திரும்பி வராததால், ' வழியில் ஏதாவது பிரச்சினை வந்திருக்கலாம்.பிள்ளைங்க வந்து சேர்ந்துடுவாங்க' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். சிறிது நேரங் கழித்து தெருமுனையில் அப்புமணி வருவது தெரிந்து 'பிள்ளையாரப்பா, நல்லபடியா வந்து சேர்ந்துட்டான். உனக்கு நமஸ்காரம் ப்பா' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட அம்மா, வீட்டை விட்டு வெளியில் வந்து , அப்புமணி  தோளிலிருந்த புத்தகப் பையை வாங்கிக் கொண்டு , " ஏன் கண்ணு , இன்னிக்கு ஸ்கூல் அரை நாள் மட்டுந் தானே . பிறகு ஏன் இவ்வளவு லேட் ? " என்றாள். 
"கள்ளு குடிக்கக்கூடாதாம். டவுணில் சாலை மறியல் ...  அதை பார்த்துட்டு நின்னோமா ...அதான் லேட் " என்ற அப்புமணி வீட்டுக்குள் வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்தான். அவன் முன்பாக பால் டம்ப்ளரை நீட்டிய அம்மா " என்னடா குழந்தே யோசனை ? " என்றாள்.
"இருபத்தேழு கோடிக்கு எத்தனை சைபர் போடணும். அத்தனை சைபரையும் நோட்டு புத்தகத்தில் ஒரே லைனில் போட முடியுமான்னு யோசனை  பண்ணிட்டு இருக்கேன்" என்று பதில் சொன்னான் அப்புமணி . 
"இப்போ இதைப் பத்தி ஏன் கண்ணு யோசிக்கிறே ?"
"நாங்க போராட்டத்தை வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறப்போ, அங்கே நின்னுட்டுருந்த ஒரு தாத்தா, "அரசாங்கத்துக்கு வருமானம் வேணும்னா திரும்பவும் லாட்டரி சீட்டை நடத்தட்டும். முதல் குலுக்கலில்  முதல் பரிசு இருபத்தேழு கோடின்னு அறிவிப்பு வைக்கட்டும். அப்புறம் பாரு கவரு மெண்ட்டுக்கு பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்"னு சொல்லிட்டு இருந்தார். இருபத்தேழு கோடிக்கு எத்தனை சைபர்னு நான் குழம்பிட்டு இருக்கிறேன்" என்று பதில் சொன்னான் அப்புமணி.
"ஒரு கோடிக்கு எத்தனை சைபர். அதை சொல்லு " என்று அம்மா கேட்க , "அது தெரிஞ்சா இருபத்தேழு கோடிக்கு எத்தனை சைபர்னு நான் கண்டு பிடிச்சிட மாட்டேனா " என்று பரிதாபமாக சொன்னான் அப்புமணி.  
"ஏழு சைபர் "
"ஏழு சைபர் போட்டு பிறகு இருபத்தேழு சைபர் போடணுமா ?"
"உனக்கு எத்தனை சைபர் போடணும்னு தோணுதோ, அத்தனையையும் போடு. இப்போ யூனிபார்மை மாத்திட்டு முகம் அலம்பிட்டு கோவிலுக்குக் கிளம்பு " என்று அம்மா சொன்னாள் .
இருவரும் டவுணில் உள்ள கோவிலுக்கு திருவிழா பார்க்கக் கிளம்பி போனார்கள்.
"அப்புமணி , கடைவீதி முழுக்க ஒரே கூட்டமா இருக்குது . நீ  இப்படி ஒரு ஓரமா நின்னுக்கோ. நான் போய் பூஜை சாமான் வாங்கிட்டு வந்துடறேன் " என்று சொல்லிவிட்டு கடைக்குக் கிளம்பினாள் அம்மா.
தெருவோரமுள்ள தண்ணீர்க் குழாய் ஒன்று அப்புமணியின் கண்களில் பட்டது. அதிலிருந்து தண்ணீர் நூல் போல ஒழுகிக் கொண்டிருந்ததைக் கண்ட அப்புமணி ஓடி சென்று குழாயை மூடினான். சிறிது நேரத்தில் அங்கு வந்த அம்மா, " அப்பு, குழாயடியில் என்ன பண்றே ?  திருவிழான்னு கடைவீதியெல்லாம் ஒரே கூட்டம். உள்ளே நுழைஞ்சு பூஜை சாமானை வாங்கிட்டு வர்றதுக்குள் போதும் போதும்னு ஆயிட்டுது . பரவாயில்லை . சமர்த்தா நிக்கிறியே . இந்த சாக்லேட் என் செல்லத்துக்கு " என்ற அம்மா அவனிடம் அதைக் கொடுத்தாள் .
அப்போது அங்கு வேகமாக ஓடிவந்த ஒரு பெண், "அடடா .. தண்ணி அதுக்குள்ளே நின்னுட்டா  ?" என்று பரபரப்புடன் கேட்டாள். 
"தண்ணி சொட்டுதுன்னு நான் குழாயை இறுக்க மூடினேன் " என்றான்  அப்புமணி. 
"அடப் பாவி ... குழாயை ஏன் மூடினே? . ஒரு நாளைக்குக் கிடைக்கிறதே ரெண்டு குடம் தண்ணிதான். அதைப் பிடிக்கத்தான் நாலுதெரு கடந்து இங்கே ஓடி வர்றேன். இன்னிக்கு எல்லாம் ஜனமும் திருவிழா பார்க்கப் போயிட்டுது. கூட ரெண்டு கூடம் தண்ணி பிடிக்கலாம்னு நினைச்சு, இந்த குடத்தில் தண்ணி நிறையட்டும். அதுக்குள்ளே வீட்டுக்குப்போய் இன்னும் ரெண்டு குடத்தை எடுத்துட்டு வரலாம்னு போனேன். இந்தக் குடத்தை நிறைய விடாமே பண்ணிட்டியேடா பாவி. உன் கையில் பாம்பு கடிக்க " என்று சொல்லி கூச்சல் போட்டாள். 
"ஏம்மா குழந்தையைத் திட்டறே ?" என்று அம்மா கேட்டாள்.
"குழந்தையா இது ? குட்டி சாத்தான். இந்தக் குழாயில் தண்ணி நூல் மாதிரி வழியும். அதையும் இவன் நிறுத்திட்டான். இனிமே தண்ணி வராது. என் நினைப்பில் மண்ணைப் போட்டுட்டான்.. மண்டையில் மூளைன்னு ஒண்ணு இருந்திருந்தா இப்படியொரு வேலையை செஞ்சிருப்பானா பைத்தியம்..இப்படி ஒரு பைத்தியத்தை பிள்ளையா பெற நீ  என்னதான் புண்ணியம் செஞ்சியோ?" என்று திட்டியபடி காலிக் குடத்தை எடுத்துக் கொண்டு போனாள் அந்தப் பெண். 
"குழாயை ஏண்டா மூடினே ?"
"நீங்கதானே சொல்லியிருக்கீங்க, தண்ணி நிரம்பி வழியாமே இருக்க குழாயை மூடணும்னு "
"அப்படின்னா குடம் நிறைஞ்ச பிறகுதானே நீ மூடியிருக்கணும் "
"நீங்க கடையிலிருந்து வந்ததும் நாம இந்த இடத்தை விட்டுப் போயிடு வோம். நாம போயிட்டா யார் மூடுவாங்கனு நினைச்சு நான் முதல்லேயே மூடினேன்" என்று அப்புமணி விளக்கம் சொல்ல,"கடவுளே இப்படியொரு முட்டாள் பிள்ளையை எனக்குக் குடுத்து என்னை ஏன் சோதிக்கிறே  ?" என்று தனக்குள் நொந்து கொண்டாள் .
"என்னம்மா முணுமுணுக்கிறீங்க ?"
"உன்னைப் பிள்ளையா பெற என்ன புண்ணியம் செஞ்சேனோன்னு  சொல்லிக்கிறேன்."
"சொல்லு .. சொல்லு.. நல்லா சொல்லு "
கோவில் அருகில் வந்தார்கள். அம்மாவிற்கு ரொம்பவும் மனவருத்தம், தண்ணீர் பிடிக்க வந்த பெண் அப்புமணியை திட்டியதை நினைத்து . அங்குள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்தாள் அம்மா .
அப்போது அவர்கள் அருகில் ஒரு பெரியவர் வருகிறார்.  
"சன்னிதியில் கூட்டம் "ஜே ஜே"ன்னு அலை மோதுது. நீங்க அதைப் பார்க்கப் போகாமே பூஜை தட்டோட இங்கே உட்கார்ந்திருக்கீங்க .. அம்மா உங்களைப் பார்த்தா ஏதோ மனவருத்தத்தில் இருக்கிறாப்லே தோணுது. உடம்புக்கு முடியலியா ... இல்லாட்டா கொண்டு வந்த துட்டு எதையாவது தொலைச்சிட்டீங்களா ?" என்று கனிவுடன் கேட்டார் .
"அதெல்லாம் எதுவுமில்லே "
"பையன் யாரு ? உங்க பிள்ளையா ? பையனோட அப்பா வரலியா?"
"அவர் வரலே. எப்பவும் வெளியூர், வியாபாரம்னு சுத்தறவர் " என்று அம்மா சொன்னாள்.
"உன் பேரென்ன தம்பி?" என்று பெரியவர் கேட்க, "அச்சுப்பிச்சு அப்புமணி" என்று சிறிதும் தயங்காமல் அப்புமணி சொல்ல, தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் அம்மா.
"ஏம்மா அழறே?" என்று ஆதரவான குரலில் பெரியவர் கேட்க அம்மாவின் அழுகை மேலும் அதிகரித்தது .         

                                                                                                   ------------------- தொடரும் 

Saturday, August 08, 2015

ANSWER OF TAMIL WORD PUZZLES - 011 - 015

விடை எண்   : 011 

வா ச கி 
அ நீ தி 
ச த் ரு நீ ண் ட 
கி ரு பை தி ட ம் 

ம ர பு 
ர த் து 
பு து மை 
போ கா தே 
ப த வி 
கா க் க த வி ர 
தே க ம் வி ர ல் 

1 நீண்ட  2 கிருபை  3 தவிர   4 புதுமை   5 தேகம்   6 பதவி  7 ரத்து  8 திடம்
9  காக்க   10 வாசகி   11 சத்ரு   12  போகாதே   13 மரபு  14  விரல்   15 அநீதி  

 விடை எண்  : 012 

ம த கு 
பா து கை 
த வ று து ய் ய 
கு று வை கை ய சை 

பு தி து 
தி ண் ணை 
து ணை வி 
ப த வி 
கோ ப மா 
த க டு ப ள் ளி 
வி டு வி மா ளி கை 

1 துய்ய  2 தகடு  3 குறுவை  4 விடுவி   5 துணைவி   6 பள்ளி   7 மாளிகை 
8 புதிது  9  கையசை  10 பதவி  11 தவறு  12  திண்ணை  13 மதகு   
14  கோபமா  15 பாதுகை 

 விடை எண்  : 013

பா து கை 
த கா த 
து ய ர கா த ம் 
கை ர ளி த ம் பி 

சா க ச 
க ச டு 
ச டு தி 
அ மு து 
ஆ சா மி 
மு று கி சா ய ல் 
து கி ல் மி ல் லி 

1 சடுதி   2 காதம்  3  கைரளி  4 துகில்  5  சாயல்  6  அமுது  7  மில்லி   8  கசடு  
9  பாதுகை   10  தம்பி  11 துயர   12 தகாத   13 ஆசாமி   14 முறுகி  15 சாகச 

 விடை : 014

அ தீ த 
அ க தி 
தீ வி ர க ற் ற 
த ர ம் தி ற ம் 

உ த வி 
த வ ழு 
வி ழு து 
போ கா த 
பு தி து 
கா சோ லை தி ண ற 
த லை வி து ற வி 

1 திறமை  2 தீவிர  3  தவழு   4  திணற  5  தலைவி   6  தரம்  7 புதிது  8 கற்ற   
9 போகாத  10 துறவி  11 உதவி 12 காசோலை  13 அதீத  14 விழுது  15 அகதி 

 விடை : 015

த கா து 
த கு தி 
கா ல ணி கு ற் ற 
து ணி வு தி ற மை 

தீ வி ர 
வி ற் க 
ர க ளை 
ச மா தி 
ம த கு 
மா ண வ த  ட் டை 
தி வ லை கு டை வு 

1 குற்ற 2 ரகளை  3  திவலை 4  துணிவு  5 குடைவு  6 மதகு 7  சமாதி 
8 தகாது  9  தகுதி  10 விற்க   11 மாணவ   12 திறமை   13 தீவிர   14 தட்டை   
15  காலணி 


Friday, August 07, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 01

                                               
   அச்சுப்பிச்சு அப்புமணி !
ஹாய்  குட்டீஸ், இப்போ நாம வயல்வெளி கிராமத்துக்குப் போகப் போகிறோம். அது ரொம்பவுமே  சிறிய கிராமம். அந்த கிராமத்தை சுற்றி வளைந்தோடும் ஓடும் நீரோடை-கோடைகாலத்தில் கூட வற்றாத அந்த நீரோடை வயல்வெளி கிராமத்துக்கு பசுமையை வாரி வழங்கி யிருந்தது. ஆனால் மற்றகிராமங்களிலிருந்து வயல்வெளியைப் பிரித்து வைத்திருந்தது. காரணம்,அந்த நீரோடையைக் கடந்துதான் அக்கம்பக்கத்து ஊர்களுக்கோ, பள்ளிக்கூடம் அல்லது கடைவீதிகளுக்கோ செல்ல முடியும் . பெயருக்கு ஏற்ற மாதிரி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல் சூழ்ந்த சிறிய கிராமம் வயல்வெளி.  அந்த கிராமத்தில்   அறுபதுக்கும் குறைவான வீடுகளே உள்ளன. தெருமுனையில் ஒரு பிள்ளையார் கோயில். அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நடக்கும் சம்பவங்களை நாம் வெளியில் நின்று வேடிக்கை பார்ப்போமா ?

"என்னடா அப்புமணி, இன்னும் தூங்கறே ! எப்போ எழும்பி எப்போ ஸ்கூலுக்குப் போகப் போறே? லேட்டா போனா டீச்சர் திட்டுவாங்க தானே"என்று அம்மா சொல்ல பதிலேதும் சொல்லாமல் படுக்கையில் புரண்டு படுத்தான் அப்புமணி.
"சூரிய உதயத்துக்கு முன்னமே படுக்கையை விட்டு எழுந்திருக்கணும்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். காலையிலே எழுந்திருச்சு  பல் தேய்ச்சு முகம் கழுவிட்டு படிக்க உட்காரு. "காலை எழுந்தவுடன் படிப்பு; பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு"ன்னு பாரதியார்  சொல்லியிருக்கார்தானே "
"காலையில் எழுந்ததும் காப்பியை குடிச்சிட்டு கவுந்தடிச்சுப் படுத்துக்கணும் " என்று பாடினான் அப்புமணி.
"என்னடா பாட்டு இது ! இதை உனக்கு சொல்லித் தந்தது யாரு ?" என்று அம்மா கேட்க, "நானே தான் படிச்சேன். நீ டீவீ யிலே தெய்வமகள் சீரியல் பார்ப்பேதானே. அதிலே முதலில் ஒரு பாட்டு வருமே. அதைத்தான் நான் மாத்திப் படிச்சேன் " என்று பெருமையுடன் சொன்னான் அப்புமணி.
"அடடா .. பாட்டு கட்டுற அளவுக்கு நீ பெரிய ஆளா ஆயிட்டியா ? இப்போ படுக்கையை விட்டு எழுந்திருச்சு ஸ்கூலுக்கு ரெடியாகு கண்ணா " என்று கெஞ்சலான குரலில் சொன்னாள்  அம்மா.
"அம்மா ... இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன் "
"ஏன் செல்லம் ?"
"அங்கே எல்லாரும் என்னை " அச்சுப்பிச்சு அப்புமணி "ன்னு கூப்பிட்டு கேலி பண்றாங்க "
"மத்தவங்க கேலி பண்ற மாதிரிதானே நீ நடந்துக்கறே "
"அச்சுப்பிச்சுன்னு சொன்னா அதுக்கு என்னம்மா அர்த்தம் ? கோமாளினு அர்த்தமா  ?"
"என்ன சொல்றே ?"
"அன்னிக்கு பக்கத்து டவுணுக்குப் போய் சர்க்கஸ் பார்த்தோமே, அங்கே வேடிக்கை காட்டின கோமாளியைப் பார்த்து நாம கைதட்டி சிரிச்சோமே. அந்த மாதிரி நானும் ஒரு கோமாளினு சொல்றாங்களா?" என்று சந்தேகம் கேட்டான் அப்புமணி .
"அங்கே கோமாளித்தனம் பண்ணி நம்மள சிரிக்க வைச்சவங்க யாருமே உண்மையில் முட்டாள் இல்லே. முட்டாள் மாதிரி ஏதாவது விஷமத் தனம் பண்ணி நம்மள சிரிக்க வச்சாங்க அவ்வளவுதான். உன்னை கோமாளி லிஸ்டில் சேர்க்க முடியாது "
"அம்மா,  அச்சுப்பிச்சுன்னு சொன்னா அதுக்கு என்னம்மா அர்த்தம்? அதை சொல்லு நீ முதல்லே "
"அப்பு, நீ ஸ்கூலில் ஆறாங் கிளாஸ் படிக்கிறியே தவிர உனக்கு உன்னோட படிக்கிற மத்த பிள்ளைங்க மாதிரி சூட்சுமம்  புத்திசாலித்தனம் கிடையாது. சமயசந்தர்ப்பம் தெரியாமே எதையாவது "தத்துப் பித்து"ன்னு உளர்றே "  
"தத்துப் பித்து"ன்னா என்ன ?"
"ஏடாகூடமா எதையாவது சொல்றது , செய்றது , பேசறது "
"ஏடாகூடம்னா என்னம்மா ?"
"என் பிராணன் போச்சுடா ராமா! இப்படி "குண்டக்க மண்டக்க"ன்னு  எதையாவது கேட்கிறதுக்குப் பேர்தான் ஏடாகூடம்  " 
"குண்டக்க மண்டக்க"ன்னா என்ன ?"
"போதும்டா சாமி. இதுக்கு மேலே உனக்குப் புரியவைக்க என்னாலே முடியாது. உனக்கு உடம்பு வளர்ந்த அளவுக்கு மூளை வளரலே. போதுமா ? " என்று அம்மா சொன்னதும் அப்புமணியின் முகம் வாடிப் போனது .
"சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் .. நீ போய் பல் தேய்ச்சு குளிச்சு முடிச்சிட்டு வா  " என்று சொல்லி அவனது கன்னத்தில் முத்தமிட்டதும் படுக்கையை விட்டு எழும்பி குளிக்கப் போனான் அப்புமணி.
சிறிது நேரத்துக்குப் பிறகு ...
"அப்புமணி, வாளியில் தண்ணி நிறைஞ்சு கீழே வழியிற சத்தம் கேட்குதே  . என்ன செய்ற நீ ?"
"வழியிற தண்ணிய எடுத்து வைக்க ஒரு பெரிய வாளியா தேடிட்டு இருக்கேன்" என்று குளியலறையிலிருந்து பதில் சொன்னான் அப்புமணி.  "மண்டு .. மண்டு .. உனக்கு சரியாத்தான் பேர் வச்சிருக்காங்க அச்சுப்பிச்சு ன்னு. ஒரு சின்ன ரூமுக்குள் நீ பெரிய வாளியை தேடறியா ? குழாயை மூடினா தண்ணி கொட்டறது நின்னுடுங்கிறதுகூட தெரியாத முட்டாளா இருக்கிறியேடா" என்று கோபமாக சொன்னாள் அம்மா.
"அட .. ஆமாம் ... குழாயை மூடினா தண்ணி கொட்டறது நின்னுடுமே. இது எனக்குத் தோணவே இல்லையே " என்று வியப்புடன் சொன்னான் அப்புமணி .
"உனக்கு தோணலைங்கிறதை மட்டுமாவது சரியா புரிஞ்சு வச்சிருக்கியே. ஈரத் தலையைத் துவட்டிட்டு சீக்கிரம் வா. ஸ்கூலுக்கு நேரமாச்சு.. கரெக்ட் டைம்க்கு ஸ்கூல் போகனும்தானே ?"
"ஸ்கூலுக்குப் போக மாட்டேன். டீச்சரே சொல்றாங்க, "அப்புமணி , நீ ஒப்புக்கு சப்பாணியா இந்த கிளாஸில் உக்காந்திருக்கே"ன்னு. எனக்கு ஸ்கூல் வேண்டாம்மா  "
"அப்படியெல்லாம் சொல்லக் கூடாதுடா குழந்தே.. இன்னிக்கு சனிக் கிழமை . அதனாலே காலையில் மட்டுந்தான் ஸ்கூல் .. மத்தியானம் லீவ் . ஸ்கூல் முடிஞ்சு நீ வீட்டுக்கு வந்த பிறகு, சாயங்காலம் ஒரு மூணு மணிக்குக் கிளம்பி நாம ரெண்டு பேரும்  டவுணுக்குப் போகலாம் . "
"எதுக்கு ?"
"கோவிலில் திருவிழா .. சாமி கும்பிடலாம் ..நீ ராட்டினம் ஏறி சுத்தலாம் . அது உனக்கு ரொம்ப பிடிக்கும்தானே. உனக்கு பலகாரம் வாங்கி தர்றேன் . சீக்கிரம் கிளம்புடா செல்லம்  "
"அப்ப சரி ..   அம்மா ... யோசனை பண்ணிப் பார்த்தா அச்சுப்பிச்சுங்கிற பேர் நல்லாவே இருக்குது. இந்தப் பேரையே நான் வச்சுக்கிறேன்ம்மா இப்போ நான் ஸ்கூலுக்கு கிளம்பறேன்.. " என்று அப்புமணி சொல்ல, தனது தலையில் தானே அடித்துக் கொண்ட அம்மா "நீ யூனிபார்ம் போட்டுட்டு, சாப்பிட்டுட்டு சீக்கிரம் கிளம்புடா கண்ணா  " என்றாள். 
பிறகு  ஐந்து நிமிட நேரத்தில் சாப்பிட்டு விட்டு  அம்மாவுக்கு டாட்டா சொல்லி விட்டு ஸ்கூலை  நோக்கி நடக்க ஆரம்பித்தான் அப்புமணி .
---------------------------------------------------------------------------------------------------- ( தொடரும் )