"நான் நினைச்சது நடக்கலே; கேட்டது கிடைக்கலே" என்றெல்லாம் சொல்லி, அற்பமான விஷயத்துக்கெல்லாம் தற்கொலைதான் முடிவு என்று தவறாக முடிவெடுக்கும் வக்ர புத்தி மாணவ சமுதாயத்திடையே வெகு அதிகமாக பரவி வருகிறது.
இளைய சமுதாயமே உங்களிடம் ஒரு விண்ணப்பம். இவர்களையெல்லாம் உங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கையில் கிடைக்கும் வாய்ப்பை பற்றிக்கொண்டு, அதை மற்றவர்கள் வியக்கும் வண்ணம் சாதனை செய்து காட்டுவதுதான் அறிவுடைமை. விவேகம்.
இயற்கை பேரழிவினால், தனி மனிதனின் மூர்க்கத்தனத்தால் உறவுகளை உடமைகளை இழந்து எதிர்நீச்சல் போடுகிறவர்கள் எத்தனையோ பேர்.
எந்த நேரம் எது நடக்குமோ என்பது தெரியாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சொந்த நாட்டிலேயே செத்துச் செத்துப் பிழைக்கும் ஆப்கன் மக்கள் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் விடவா நீங்கள் பரிதாப நிலையில் இருக்கிறீர்கள். யோசியுங்கள்
"எந்த மனிதர் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்?" என்று கேள்வி கேட்கும் சினிமாப் பாடல் வரி எவ்வளவு பெரிய நிதர்சனத்தை ஒரே ஒரு வரியில் சொல்லி இதயமாக இதயத்தை வருடி விடுகிறது.
மீண்டும் சொல்கிறேன். இளைய சமுதாயமே உங்களிடம் ஒரு விண்ணப்பம். 22.09.2021 தேதியிட்ட ஆனந்த விகடனில் பக்கம் 80ல் வெளியாகியுள்ள "இது ஆண்டவன் படைப்பு.. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?' என்று தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து கேட்கும் திரு.நாகமுத்துவின் மனத்துணிவை. உழைப்பை அறிந்துகொள்ளுங்கள். இவர் போன்றவர்களை உங்கள் ரோல் மாடலாக மனதுக்குள் வழிபடுங்கள். வாழ்வில் முன்னேறுங்கள்.
விரும்பிய ஒன்றை தேடி தோற்று உயிரை விடுவதை தவிர்த்துவிட்டு, கிடைத்த ஒன்றில் உங்கள் திறமையை, தனித்தன்மையை வெளிப்படுத்துங்கள்.