Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, May 30, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 116 )

                பணம் இருந்தால் இந்த உலகத்திலே ....?!

ராஜசேகரால் நம்பவே முடியவில்லை. தனக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா ? கடவுள் கண்ணைத் திறந்து விட்டார். வேலையிலிருந்து ரிடைர் ஆனதும் செட்டில்மெண்ட்டாக கைக்கு  வந்த பணம் பெண்ணின் கல்யாண செலவுக்காகவும் பையனின் படிப்புக்காக வாங்கிய கடனுக்காகவும் கரைந்து விட மீதமுள்ள வாழ்நாளை கையில் காசில்லாமல் எப்படித் தள்ள முடியும் என்று நினைத்து தவித்துக் கொண்டிருந்த தனக்கு இப்படியொரு யோகமா ? கோயில் கோயிலாகப் போய்க் கும்பிட்டதெல்லாம் வீண் போகவில்லை என்று நினைத்துக் கொண்டார்.
கிட்டத்தட்ட முப்பத்து நான்கு வருடம் நேரம் காலம் பார்க்காமல் ஓடியோடி உழைத்து விட்டு ரிடைர்மென்ட் என்ற பெயரில் கைகால் களைக் கட்டிக் கொண்டு வீட்டில் சும்மா இருப்பது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. எங்காவது வேலைக்குப் போகலாமானு நினைக்கிறேன்னு மகனிடம்அவர் சொன்னபோது "அட, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா ? டே டைமில் உங்க ப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போய் அரட்டை அடிச்சிட்டு வாங்க " என்றான்.
"அதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத ஒன்றாச்சே " என்று ராஜசேகர் அங்கலாய்த்த போது, " அதனாலென்ன ? இனிமே பழகிட்டாப் போச்சு " என்று அசால்ட்டாகப் பதில் சொன்னான் பாலாஜி 
"ஏம்ப்பா... நீங்க இந்த ஜெனரேஷன் .. பச்சோந்தி அடிக்கடி தன்னோட நிறத்தை மாத்திக்கிறாப்ப்லே இடம், சூழ்நிலைக்குத் தக்க உங்களை மாத்திக்க உங்களாலே முடியும். ஆனா என்னாலே அப்படி முடியாதுப்பா"
"அப்படின்னா பகல் முழுக்க டீவீ பாருங்க .. ராத்திரியில் கோயில் குளம்னு போயிட்டு வாங்க "
"டீவீதானே ? அதைத்தான் நான் விரும்பாமலே பார்த்துட்டு இருக்கிறேனே ? டீவீ சீரியல் பார்க்க உட்காருற உங்க அம்மா விளம்பர இடைவேளை வரும் போதுதானே அக்கம்பக்கம் என்ன நடக்குன்னு திரும்பியே பார்க்கிறா ? ஐயோ ..ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு வில்லி வர்றாங்கடா ... அவங்க பண்ற ஒவ்வொண்ணும் .... அப்பப்பா ... அல்கொய்தா தீவிரவாதிங்க இவங்க கிட்டே ட்ரைனிங் எடுக்கணும் . இதை தொடர்ந்து பார்த்தால்  மனசும் மூளையும் கெட்டுப் போயிடும்.. சில கதைகளில் அழுதே நேரத்தைப் போக்குறாங்க . ஆனா ஒண்ணு, அவங்க கண்ணீர் விட்டாலும் செம  காமெடியா இருக்குது. வில்லித் தனம்கிற  பேரில் கோமாளித்தனம் பண்ணினாலும் செம  காமெடியா இருக்குடா .. "
"படக்காட்சிகளைக் காமெடியா பார்க்கறீங்கதானே?அப்படித்தான் எல்லா  ஆங்கிளிலும் வாழ்க்கையை ரசிக்கக் கத்துக்கணும் "
"ஆமாம் எனக்கொரு சந்தேகம் .."
"என்னப்பா ?"
"டீவீ சீரியல்க்கு டைரெக்ட் பண்ற அத்தனை பேரையும் ஒரு இடத்தில் உட்கார வச்சு ஏதாவது ஒரு  கதையை பொதுவாக  ஒருத்தன் சொல்ல, சீரியல் எடுக்கிறவங்க, டைரெக்ட் பண்றவங்க அதை தங்களோட டேஸ்ட்க்கு ஏத்த மாதிரி மாத்திக்குவாங்களோ ?"
"எதை வச்சு அப்படி கேட்கறீங்க ?"
"ஒரு தொடரில் வரும் ஒரு சில சம்பவங்களே எல்லா தொடரிலும் வருது."
"டீவீ பார்க்கிறது போராக இருந்தால் கம்ப்யூட்டர் கேம்ல் டைம் பாஸ் பண்ணுங்க "
"வேலை பார்த்துட்டு இருந்த காலத்தில், எங்க ஆபீஸ் ப்ரோக்ராமர், ஆபீஸ் வொர்க் எல்லாத்தையும் செட் பண்ணித் தருவார். அதில் நான் வெறுமனே டைப் மட்டும் பண்ணுவேன். என்னைப் பொறுத்தவரை அது ஒரு டைப் ரைட்டர்.  அதில் வேறு எதுவும் எனக்குப் பண்ணத் தெரியாதே  " என்றார் பரிதாபமாக 
"அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை " என்ற பாலாஜி, அவருக்குக் கம்ப்யூட்டர் கேம் விளையாடக் கற்றுக் கொடுத்தான். நெட் ஓபன் பண்ணுவதில் அவர் வெல் வெர்ஸ்டு ஆனதும் ஈமெயில் கிரியேட் பண்ண, அதை ஓபன் பண்ண கற்றுக் கொடுத்தான். அதில்தான் அதிர்ஷ்ட லக்ஷ்மி  அவர் பக்கம் தனது பார்வையை ஓட விட்டாள். வெளிநாட்டு லாட்டரியில் அவருக்கு ஆறு கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது.
இனிமேல்தான் ரொம்ப உஷாரா இருக்கணும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் ராஜசேகர். பணம் கையில் இல்லாதவரை ரத்த சம்பந்த உறவுகளே நம்மை யாரோ மூன்றாவது மனுஷன் மாதிரி நடத்துவாங்க. பணம் கையிலிருந்தால், பக்கத்து வீட்டுக்காரன்  கூட நம்மள அவனுக்கு நெருங்கின சொந்தம்னு சொல்லிக்குவான்.  அவங்க கிட்டே உஷாராக இருக்கணும். மாலாவைக் கட்டின புண்ணியவாளன் சும்மாவே பணம் பணம்ன்னு பறப்பான். இவ்வளவு பணம் கையில் இருப்பது தெரிஞ்சா வீட்டோடு வந்து உட்கார்ந்துகிட்டு போகமாட்டேன்னு அடம் பிடிப்பானே . கோடிகோடியா பணம் இருக்கறச்சே, மாப்பிள்ளை நம்ம வீட்டோடு வந்து இருக்கிறது தப்பில்லே. ஆனா இதுக்கு பாலாஜி ஒத்துக்க மாட்டானே. பண விஷயமா அவங்களுக்குள்ளே தகராறு வந்து அடிதடி வெட்டுக் குத்து கோர்ட் கேஸ்ன்னு  ஆயிடுமோ என்ற பயம் வந்தது. அப்படி எதுவும் ஆகாமே முதலிலேயே செட்டில் பண்ணிடணும். கூட வேலை பார்த்தவனுக சொந்தக்காரனுகனு இனிமே அவனவன் அவனுக தேவைக்காக இனிமே பணத்துக்காக நம்மகிட்டே தான் ஓடி வருவானுக . கடன் கொடுத்தாலும் தலைவலி , அதைத் திரும்பி வாங்கறதுக்குள் உயிர் போயிடும். கடன் குடுக்கும்போது அவனுக கண்ணுக்கு நாம தெய்வமா தெரிவோம். குடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால் சைத்தான் மாதிரித் தெரிவோம். கடன் கொடுக்காட்டா பகையாளியாயிடுவோம் . கடன்விஷயத்தில் குடுத்தாலும் பிரச்சினை.குடுக்காட்டாலும் பிரச்னை . சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி கடன் கொடுக்கும் விஷயத்தில்  முடிவெடுக்க வேண்டியதுதான் . பணத்துக்காக குழந்தைகளைக் கடத்துறது இப்போ அதிகமாயிடுச்சு. அதுங்களை ஸ்கூலில் கொண்டுபோய் விட்டுட்டுக் கூட்டிட்டு வர நல்ல கார் டிரைவர் ஒருத்தனைத் தேடியாகணும். கையில் பணமில்லாத ஒரே ஒரு காரணத்தால் இதுவரை   இஷ்டப்பட்ட இடங்களுக்குப் போக முடியலே வர முடியலே. வீடு முழுக்கப் பணம் கொட்டிக் கிடக்கும்போது வீட்டை விட்டுட்டுப் போகவும் பயமா இருக்குதே. முழிச்சுகிட்டு இருக்கும்போதே திருடுற கூட்டம் நிறைய இருக்கே.  சரி ... யாராவது காவலாளியைப் போட்டுடலாம்... போடலாம் ...அதிலும் பிரச்சினை இருக்கே, அவனுக நேர்மையா இருப்பானுகனு எப்படி நம்ப முடியும் ? காவல்காரனும் களவாணிப் பயலும் கூட்டு சேர்ந்தால், விடிய விடியத் திருடலாம்னு நம்ம முன்னவங்க சொல்லி யிருக்காங்களே. அது தெரிஞ்ச எந்தக் களவாணிப் பயலாவது நம்ம வீட்டுக் காவல்காரன் கூட கூட்டு சேர்ந்துட்டா என்ன பண்றது ? திருடிட்டுப் போறதோடு நின்னுட்டாப் பரவாயில்லே. ஆள் கடத்தல் கொலை அதுஇதுன்னு போயிட்டா என்ன செய்றது ? பணம் இருக்குனு தெரிஞ்சா 'அந்தக் காப்பகம்', 'இந்தக் காப்பகம்',அனாதைக் குழந்தைங்க காப்பகம்'னு இல்லாத காப்பகத்துக்குக் கூட டொனேசன் கலெக்ட் பண்ண வருவாங்க. அதுவாவது பரவாயில்லே. எலெக்சன் வரும்போதெல்லாம் நிதியுதவி கேட்டு  வந்து நிப்பாங்களே.. இவனுக எலெக்சனில் நிக்கவும் மொய் அழணும். இவனுக ஜெயிச்சு பதவியில் போய் உட்கார்ந்த பிறகு  நமக்கு ஒரு காரியம் ஆகணும்னு இவனுகளைத் தேடிப் போனா அதுக்கும் இவனுகளுக்கு மொய் எழுதணும்.. ச்சே இப்படி எல்லா வகையிலும் பிரச்சினை வருதே .. இதை எப்படி சரி பண்ணலாம் ? முன்னே போனா கடிக்கிற, பின்னே போனா உதைக்கிற விவகாரமா இருக்கே ... இதை எப்படி சரி பண்றதுன்னு நல்லா யோசிக்கணும்.
"அப்பா .. நான் வீட்டுக்குள் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. வழக்கமா நான் வந்ததும் "வா பாலா"ன்னு எதோ விருந்தாளியை வரவேற்க்கிற மாதிரி தினமும்  வரவேற்ப்பீங்க .. இன்னிக்கு என்ன ஆச்சு ? உடம்பு ஏதாவது சரியில்லையா ?" என்று அக்கறையாக கேட்டான் பாலாஜி 
"தெரியலேடா பாலா .. மத்தியானமும் சரியா சாப்பிடலே..எதோ யோசனையில் இருக்கிறார். என்ன கேட்டாலும் பதில் சொல்லலே . நாம பேசறது அவருக்குக் காதில் விழுதா என்கிறதே எனக்கு சந்தேகமா இருக்கு" என்றாள் அவர் மனைவி லஷ்மி 
"பாலா .. எனக்கு வெளிநாட்டு லாட்டரியில் ஆறு கோடி ரூபா கிடைச்சிருக்கிறதா  செய்தி வந்திருக்கு "
இதைக்கேட்டு சிரித்தான் பாலா 
"அப்பாடா, இப்படி சிரித்த முகத்தோட உன்னைப் பார்க்கிறது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா ?"
"அப்பா .. பணம் கிடைக்கிறதை நினைச்சு நான் சிரிக்கலே. உங்க ஏமாளித் தனத்தை நினைச்சு சிரிச்சேன்"
"என்னப்பா சொல்றே ?"
"நாட்டுலே எல்லா இடத்திலும் சில பிராட் கும்பல் இருக்குது. நமக்குப் பணம் தர்றதாக சொல்லி நம்ம கிட்டே இருக்கிற காசைப் பறிக்கிற கும்பல் அது. அது பொய் நியூஸ் .  பிராட் "
இதைக் கேட்டு அமைதியாக நின்றார் ராஜசேகர் 
"என்னப்பா ... பணம் வராதேனு வருத்தப் படறீங்களா ?"
"இல்லேப்பா .. பணம் இல்லாமே இருக்கிறதை நினைச்சு சந்தோசப் படறேன். பணம் இல்லாதவரை, பணம் இல்லே என்பது மட்டுந்தான் பிரச்சினை. பணம் இருந்தால் ஒவ்வொரு நொடியுமே பிரச்சினைதான் " என்றார் ராஜசேகர் நிறைந்த மனதுடன்.  

Friday, May 23, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 115 )

                                                        ரிஸ்க் எடுக்கிறதுன்னா .......
"அம்மா நம்ம வீட்டுக்கு யார் வரப் போறாங்க ?"
"என்ன கேட்கிறே ? எனக்கொண்ணும் புரியலே !"
"டூ டேஸ் முன்னாடி ஆபீசிலிருந்து வந்ததுமே அப்பா சொன்னாரேம்மா, யாரோ தினகரன்னு பேர் கூட சொன்னாரேம்மா "
"இப்போ அதை ஏன் கேட்கறீங்க ? எனக்கு கிச்சனில் வேலை இருக்கு " என்றாள் வைதேகி.
"அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ நாங்க  என்ன கேட்கிறோமோ அதுக்கு பதில் சொல்லுங்க போதும் " என்றார்கள்  சரவணன் மதுமதி லாவண்யா என்ற மூவரும் .
"அவர் நமக்கு என்னம்மா வேணும் ?" என்று லாவண்யா கேட்க. " நாம அவர்கிட்டே ஏதாவது கடன் கிடன்  வாங்கியிருக்கிறோமா? அப்பா அந்த அங்கிள் வர்ற விஷயத்தை சொல்லிவிட்டு எப்பவும் ஒரே டென்சனா இருக்கிறார். யாரும்மா அவர் ? " என்று  சரவணன் கேட்டான். குழந்தைகளிடம் மாட்டிக்கொண்டு வைதேகி விழிப்பதைக் கண்ட உதயகுமார், " இங்கே வாங்க நான் சொல்றேன் " என்று அவர்களைத் தனது பக்கம் அழைத்தார்.
"என்னோட பால்ய சிநேகிதன் தினகரன்.  குழந்தையாக நாங்க இருக்கும் போதே திருச்சியில் ஒரே காலனியில் குடியிருந்தோம். படிச்சோம். யாரோ சிலர் சின்ன வயசிலிருந்தே  ஒரே ஸ்கூலில் சேர்ந்து படிக்கிறது, காலேஜில் சேர்ந்து படிக்கிறது எல்லாம் பெரிய விஷயமே இல்லே. ஆனா அப்படி சிறு வயசிலிருந்தே சேர்ந்து படிச்ச  ரெண்டு  பேர், ஒரே ஆபீசில் அதுவும் கவெர்ன்மெண்ட் செர்விசில் சேர்வது பெரிய விஷயந் தானே. அந்த அதிர்ஷ்டம் எங்களுக்கும் இருந்தது. அப்புறம் ஒரு சில பிரச்சனைகளாலே அவனே  விருப்பப்பட்டு ட்ரான்ஸ்பர்  வாங்கிட்டு கான்பூர் பிராஞ்சுக்கு போயிட்டான். அவன் போனபிறகு திருச்சியில் இருக்கப் பிடிக்காமல்  நான் சென்னைக்கு வந்துட்டேன்.  ரொம்ப வருஷம் அவனுக்கும் எனக்கும் காண்டாக்ட் என்பதே இல்லாமே போச்சு. நானாக போன் பண்ணினாக் கூட அவன்  போன் அட்டெண்ட் பண்ண மாட்டான். அவன்தான் இப்போ சென்னை வர்றதா, நம்ம வீட்டுக்கு வர்றதா போன் பண்ணி யிருக்கிறான்".
"ஆப்டர் எ லாங்க் பீரியட் நீங்க சந்திக்கிறது ரொம்ப  சந்தோஷமான விஷயந்தானே!
" நீங்க சந்தோஷப்படாமே எப்பவும் டென்சனா இருக்கீங்க . என்ன காரணம் ?" என்று மதுமதி கேட்க, அதை சற்றும் எதிர்பார்த்திராத உதயகுமார்  சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்த்தார்.
"அப்பா , சொல்லுங்கப்பா "
"அவன் ஒரு ஏடாகூட பேர்வழி "
"அப்படின்னா ?"
"அவன் எப்போ என்ன மாதிரி கிறுக்குத்தனம் பண்ணுவான்னு யாருக்கும் தெரியாது "  
"அப்படின்னா வெரி இன்ட்ரெஸ்டிங்க் கேரக்டர்னு   சொல்லுங்க. அப்பா அவர் என்னென்ன பண்ணுவார்னு எங்களுக்கு  சொல்லுங்களேன் " என்று குழந்தைகள் ஆர்வமாகக் கேட்க, "ஹோம் வொர்க் பண்ணியாச்சா கதை கேட்க உட்கார்றீங்க !" என்றார் உதயகுமார் கடுகடுப்பான குரலில்.
"அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க உங்க ப்ரெண்ட் பத்தி சொல்லுங்க "
"அவன் பண்ணினது ஒண்ணா ரெண்டா ? எதைன்னு சொல்றது ?"
"உங்க மைண்டில் எது இன்னும் ப்ரெஷ்ஷா இருக்கோ அதை மட்டும்  சொல்லுங்க "
இதற்க்கு மேலும் தப்பிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்ட உதயகுமார், " தெருவில் பலூன் காரன் போகும்போது அவனைக் கூப்பிட்டு அக்கம் பக்கத்தில் விளையாட்டிட்டு இருக்கிற குழந்தைங் களுக்கு பலூன் வாங்கிக் குடுப்பான். அதுங்க ஆசையா விளையாடிட்டு இருக்கிறப்போ, கையில் குண்டூசியை மறைச்சு வச்சுகிட்டு, பலூனைத் தட்டி விடுறாப்பிலே அதை வெடிக்க வைப்பான் "
"ஏன் காசு குடுத்து வாங்கணும் ? பிறகு அதை அவரே ஏன் வெடிக்க வைக்கணும் ?" என்று சரவணன் கேட்டான்.
"பலூன் வெடிக்கிற சத்தம் கேட்டு, குழந்தைகள் பதறிப் போய் பயந்து முழிப்பாங்க தானே, அதை ரசிப்பதில் அவனுக்கு அப்படியொரு இன்ட்ரெஸ்ட் "
"அப்புறம் வேறே என்னென்ன பண்ணுவார் ?"
"நாங்க ரெண்டு பேரும் M.A  இங்க்லீஷ் லிட்டரெசர் எடுத்துப் படிச்சோம் . பைனல் இயர் எக்ஸாம்க்கு படிச்சிட்டு இருந்தோம். ஒருநாள் நாங்க படிச்சிட்டு இருக்கிறப்போ, பக்கத்து வீட்டுப் பாட்டி ஒருத்தங்க " ஏன் தம்பி, எப்பவும் இந்த புஸ்தகத்தை வச்சே படிச்சு கிட்டே  இருக்கீங்களே. தமிழ் புஸ்தகம் படிச்சு நான் பார்க்கவே இல்லை " ன்னு சொல்ல "நாங்க சேர்ந்திருக்கிற வகுப்புக்கு இதைத்தான் பாட்டி படிக்கணும். இதில்தான் பரீச்சை எழுதணும்"னு   சொன்னோம். உடனே அந்தப் பாட்டி " ஏன் தம்பி,தமிழ்ல எழுதினாபெயிலாக்கிப் போடுவாங்களா"ன்னு கேட்டாங்க. "ஆமாம்"ன்னுசொல்லிட்டுநாங்கபடிக்க ஆரம்பிச்சிட் டோம்.
அந்த வருஷம் கடைசி எக்ஸாம் பேப்பர் எழுதி முடிச்சிட்டு வெளியே வரும்போது, எங்களோட ஜூனியர்ஸ் எங்களுக்கு பார்ட்டி குடுத்தாங்க. அப்போ இவன் "இந்த வருஷம் நான் பெயில்"ன்னு சொல்லி சிரிச்சான். "என்னடா சொல்றே"ன்னு நாங்க கேட்டதும், "அன்னைக்கு நானும் உதயனும் படிச்சிட்டு இருக்கிறப்போ எங்க பக்கத்து வீட்டுப் பாட்டி எங்க கிட்டே  "தமிழில் எழுதினா பெயில் ஆக்கிடுவாங்களா"ன்னு கேட்டாங்க. அதிலிருந்து எனக்குள் ஒரு ஆசை, ஏதாவது ஒரு சப்ஜெக்ட்டில் ஒரு கொஸ்டின்னுக்கு தமிழில்  ஆன்சர் பண்ணனும்னு. இன்னிக்கு அந்த ஆசையை தீர்த்துட்டேன்"னு சிரிச்சுகிட்டே சொன்னான். "ஏண்டா பாவி ஒரு வருஷம் வீணாப் போகுமே"னு   நாங்க கேட்க, " எனக்கு அதைப் பத்தி கொஞ்சமும் கவலையில்லே. என்னோட பேப்பரை திருத்தப் போற புண்ணியவாளன் யாரோ ? இங்கிலீஷ் லிட்டறேசருக்கு ஆன்சரை தமிழில் எழுதியிருப்பதைப் பார்த்ததும்  அந்த மகானுபாவன்  முகம் எப்படி இருக்கும்? அதை அந்த புண்ணியவாளன் பக்கத்திலிருந்து  பார்க்க முடியாதேங்கிற வருத்தம்தான் நிறைய இருக்குது"ன்னு ரொம்ப அசால்ட்டா  சொன்னான்.  சென்ட்ரல் கவெர்ன்மெண்ட் ஆபீசஸ்க்கு ஒரு வெல்பர் அசொசியசன் உண்டு. 'கல்சரல் மீட்'ன்னு காம்பெடிசன் நடத்துவாங்க. இவன் ரொம்ப அருமையா பாடுவான். படிக்கிற காலத்தில் பாட்டுப் போட்டியில் முதல் பரிசை  இவன் யாருக்கும் விட்டுத் தந்ததே இல்லை. அதனால் இந்த   'கல்சரல் மீட் காம்பெடிசனில் ' இவன்தான் முதல் பரிசை வாங்கப் போறான்னு  நான் சொன்னதை நம்பி எங்க ஆபீஸ் ஸ்டாப்ஸ் எல்லாரும் அந்த விழாவுக்கு வந்திருந்தாங்க. இவன் என்னடான்னா மேடையில் ஏறி "அம்மா இங்கே வா வா" னு நர்சரி ரைம் பாட ஆரம்பிச்சிட்டான். மேடையை விட்டு அவன் இறங்கினதும் அவன் முதுகில் நாலு போட்டு , ''ஏண்டா இப்படி பண்ணினே ?"னு கேட்டால், எனக்கு முன்னாலே பாடினவங்க நல்லா பாடினாங்க. எல்லாரும் அதை அப்படி ரசிச்சாங்க. அந்த சூழ்நிலையில் ஒரு நர்சரி ரைம் பாடினா இவங்க முகம் எப்படி மாறும்னு கற்பனை செஞ்சு பார்த்தேன். அதை நேரில் பார்த்து ரசிக்கத்தான் இப்படியொரு பாட்டு"ன்னு சொன்னான்" என்று உதயகுமார் சொல்லிக் கொண்டிருக்கும்போது, " குழந்தைகளா, சாப்பாடு ரெடி.. சாப்பிட்டுட்டு மீதிக் கதையைக் கேளுங்க. எனக்கு வேலை ஆகணும் " என்று குரல் கொடுத்தாள் வைதேகி 
"இன்னைக்கு இது போதும். நினைவு வர்றச்சே நான் ஒவ்வொண்ணா சொல்றேன்"
"அப்பா, அந்த அங்கிள்க்கு ரிஸ்க் எடுக்கிறதுன்னா ரஸ்க் சாப்பிட மாதிரின்னு  சொல்லுங்க " என்றான் சரவணன்.
மறுநாள் தினகரனை அழைத்து வர ஏர்போர்ட் போனார் உதயகுமார். அவரது கண்கள் தினகரனைத் தேடின. அவர் தோளில் கைவைத்து  " வா போகலாம் " என்று சொன்ன நபரைக் கூர்ந்து கவனித்தார் உதயகுமார் '"நீங்க ... நீ ... தினா தானே !  என்ன தினா நீயா ? என்ன இது கோலம்  என்னாச்சு உனக்கு ?" என்று அதிர்ந்து போய்க் கேட்டார்  
"அதிக பட்சம் இன்னும் இருபது அல்லது முப்பது நாள் மட்டும் உயிர் வாழப் போறவன் வேறே எப்படி இருப்பான் ? " என்று முனங்கிய குரலில் பதில் தினகரனிடமிருந்து வந்தது .
"என்னடா சொல்றே ? "
"சொல்வதெல்லாம் உண்மை "
"ப்ளீஸ் விளையாடாதே "
"எனக்கு ப்ளட்  கேன்சர். என்னோட சாவு தேதியை என்னிடம் நேரடியாக டாக்டர்ஸ் சொல்லலியே தவிர  .... சரி அதை விடுடா..."
"இந்த நிலைமையில் நீ தனியாகவா வந்தே ?"
"தனிமை எனக்குப் பழகிப் போன ஒன்று .. என்னோட தலைவிதியும் அதுதானே  "
"இந்த நிலைமையில் நீ எப்படி வொர்க் பண்றே ?"
"நான் வொர்க் பண்றேன்னு யார் சொன்னது ? நான் மெடிக்கல் லீவில் இருக்கிறேன்"
"ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் , நான் வந்து பார்த்திருப்பேனே" என்று அழும் குரலில் சொன்னார் உதயகுமார் 
"நான் என்னோட பிள்ளையைப் பார்க்க வந்தேன் "
"என்ன சொல்றே ?"
"ஆமாம், சாகிறதுக்கு முன்னாடி அவனைப் பார்க்கணும். நான் இறந்ததும் எனக்கு சேர வேண்டிய செட்டில் மென்ட்க்கு அவன்தானே நாமினி"
"இதோ பாரு தினா, உன் மனைவி பிரசவத்தில் இறந்ததும் அந்த வருத்தத்தில் அந்தக் குழந்தையை வெறுத்து அதைக் குப்பைத் தொட்டியில் போடப் போனே. அதை நான் எடுத்து என்னோட குழந்தையாக வளர்க்கிறேன். அது வளர்ப்புக் குழந்தை என்கிற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு, திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து செட்டில் ஆனேன்.ஆபீஸ் ரிக்கார்டில் தான் மாற்றம் செய்ய முடியலே. மத்த எல்லா இடங்களிலும் அவனை என் பிள்ளைன்னே சொல்றேன். இப்போ போய் சரவணன் வேறொருத்தர் குழந்தைன்னு சொன்னால் என் பொண்ணுங்க துடிச்சுப் போயிடுவாங்க. என் பொண்ணுங்களை விட்டுத் தள்ளு. உண்மை தெரிஞ்ச பிறகு அந்தப் பிஞ்சு மனசு என்ன பாடு படும் ! அதன் பிறகு எங்களோடு அது எப்படி முழு மனசா ஒட்டும் ? எங்க கிட்டே காசுபணம் அதிகம் இல்லாட்டாலும் குடும்பத்தில் சந்தோசம் அதிகம் இருக்குது, அக்கம்பக்கத்தினர் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு. அதைக் கெடுத்துடாதே. உன்னைக் கையெடுத்துக் கும்பிடறேன், வேண்டாம்னு நீ தூக்கி எரிஞ்ச ஒன்றை உரிமை கொண்டாட உன் மன சாட்சி எப்படி இடம் கொடுக்குது?"
"இதோ பாரு உதயா, கொடுமையான செயலை செய்த ஒருவனை தூக்கில் போடும் முன்னாலே அவனோட கடைசி ஆசை என்னனு கேட்டு அதை நிறைவேத்தி வைப்பாங்க. மனைவியை இழந்த துக்கத்தில் அந்தக் குழந்தையைத் தூக்கிப் போட்டதைத் தவிர வேறு எந்த தப்பும் நான் செய்யலே. என் கடைசி நாட்களை எண்ணிட்டு இருக்கிறேன். ஒரே ஒரு தடவை என் பிள்ளையைத் தொட்டு கொஞ்சறதுக்கு மனசு தவிக்குதுடா. அது தப்பு.அதை செய்ய எந்த தகுதியும் கிடையாதுன்னு தெரிஞ்சும் உன்கிட்டே பிச்சை கேட்கிறேன். அவனைப் பார்த்திட்டு அடுத்த நிமிஷமே  திருச்சிக்கு கிளம்பிடுவேன், ரங்கனைத் தரிசிக்க. அது முடிஞ்சதும்  நாளைக்கே நான் கான்பூர் போயிடுவேன். வெளியில் போய்வர ரெண்டே ரெண்டு நாள்தான் டாக்டர்ஸ் பர்மிஷன் குடுத்திரு க் காங்க.விஷயத்தை எடுத்து  சொல்லி உன்னை அங்கே வரவழைக்கிறதா அவங்க சொன்னாங்க. நாந்தான் அடம்பிடிச்சு இங்கே வந்தேன்.. குழந்தை வீட்டில் இருப்பாந்தானே ?"
"நேற்று அவன் ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் டே. அதனால் இன்னிக்கு ஸ்கூல் லீவு. தினா திரும்பவும் சொல்றேன் சரவணன் உன் குழந்தைங்கிற  விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது "
"சரி"  என்று தலையாட்டினார் தினகரன்.
வாசலில் கார் ஹார்ன் கேட்டதுமே குழந்தைகள் ஓடி வந்து வாசல் கதவைத் திறந்தார்கள்
தினகரனை மெதுவாக அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்த உதய குமார், குழந்தைகளை அவருக்கு அறிமுகப் படுத்தினார்.
"இது சரவணன் " என்று அவர் சொல்லி முடிக்குமுன்னமே, "நான் தாண்டா உன் அப்பா .. இந்தப் பாவியை மன்னிச்சுடு " என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்லியவர் நொடியில் தனது தப்பை உணர்ந்து கடைக் கண்ணால் உதயகுமாரைப் பார்த்தார். அப்போது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்காத வகையில் சரவணன் ஓடி வந்து தினகரன் கழுத்தைக் கட்டிக் கொண்டு" அப்பா ... அப்பா... என்னை விட்டுட்டு இத்தனை நாளும் எங்கே போயிருந்தீங்க .. நானும் உங்ககூடவே வருவேன் " என்று சொன்னான் 
ஒட்டுமொத்தக் குடும்பமும் அதிர்ந்து போய் நின்றது. சரவணனை இழுத்து அனைத்து நெஞ்சோடு தழுவிய தினகரன், " இந்த ஜென்மத்தில் இந்த சந்தோசம் ஒன்று போதும் . எனக்கு வேறு எதுவும் வேண்டாம். இதைத் தந்த ரங்கன் காலடியில் விழுந்து நான் கதறி அழணும். இப்பவே எனக்கொரு டாக்சி பிடிச்சுக் கொடு .. நான் போகணும் " என்றார் 
"போகலாம் .. குளிச்சு சாப்பிட்டு விட்டு பிறகு போகலாம் "
"வேண்டாம் .. காவேரிக் கரையில்தான் என்னோட குளியல். ரங்கனைத் தரிசித்த பிறகுதான் பச்சை தண்ணீர் கூட குடிப்பேன் "
அதன் பிறகு ஒரு டாக்சி பிடிச்சு தினகரன் கிளம்பிப் போகும்வரை, மறந்தும் கூட அவர் சரவணன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கவில்லை.
டாக்சியில்  ஏறி உட்கார்ந்து தினகரன் டாட்டா காட்டியபோது, " படுபாவி சாகப் போகிற வேளையில் கூட ஒரு பச்சைக் குழந்தை நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டிட்டுப் போறியே சண்டாளா" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
வாசல் கதவை தாளிட்டு விட்டு தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த வரிடம், " அப்பா, உங்க ப்ரெண்டுக்கு மட்டுந்தான் மற்றவங்களுக்கு அதிர்ச்சி குடுத்துப் பார்த்து ரசிக்கத் தெரியுமா? என்னோட அப்பான்னு அவர் ஒரு  பிட் போட, அதை நம்பறமாதிரி நான் எப்படி ரிஆக்ட் குடுத்தேன் பார்த்தீங்களா  ? " என்று சரவணன் கேட்டதும்  "அப்பாடா " என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட உதயகுமார். எப்பவோ நடந்த சம்பவங்களை நான் குழந்தைகளிடம் சொன்னது எவ்வளவு நல்லதாகப் போச்சு. தாங்க்  காட் " என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் உதயகுமார்  
  

Friday, May 16, 2014

Scanning of inner-heart (Scan Report Number - 114 )

                     "நாணயம்" மனுஷனுக்கு அவசியம் !!
"ராஜு ஸார், இன்னிக்கு லஞ்சுக்கு வெளியே போகலாமா ? பக்கத்து தெருவிலே மெஸ் ஒண்ணு புதுசா திறந்திருக்காங்களாம். மீல்ஸ் ரொம்ப நல்லா இருக்குன்னு அங்கே போயிட்டு வந்த நம்ம ஸ்டாப்புங்க சொல்றாங்க . நாமளும் போய் பார்த்துட்டு வந்துடலாம் "
"ஏம்ப்பா, இதை நேத்தே சொல்லியிருந்தா நான் லஞ்ச் எடுத்துட்டு வராமே இருந்திருப்பேனே. இப்போ கொண்டு வந்த சாப்பாட்டை என்ன பண்றது தேவா ?"
"அட, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா ? நம்ம ஆபீஸ் ச்வீபர்ஸ் கிட்டே கொடுத்துட்டாப் போச்சு " என்று கேஷுவலாக சொன்னார் தேவராஜன்.
பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் ராஜு.
"என்னப்பா யோசனை ?"
"காலையில் வேலைக்கு கிளம்பற அவசரத்தில் எதையோ பண்ணி அது சாப்பாடுன்னு சொல்லி நம்ம கையில் கொடுத்து அனுப்பிடறாங்க. 'விதி'யேன்னு நினைச்சு நாமளும் முழுங்கி வைக்கிறோம். அந்த சாப்பாடு நமக்கு பழக்கப் பட்டுப் போச்சு. அதை சுவீப்பர்ஸ் டேஸ்ட் பண்ணினா அப்புறம் நம்மள கால் காசுக்குக் கூட மதிக்க மாட்டாங்க ."
"விடுங்க ஸார், இந்த விஷயத்தில் எல்லார் வீடும் ஒரே மாதிரிதான் "
அதன் பிறகு ஆபீஸ் சுவீப்பரை அழைத்து, அவனிடம் தான் கொண்டு வந்த சாப்பாட்டைக் கொடுத்து விட்டு வெளியில் கிளம்பினார் ராஜு. இருவரும் மெஸ்ஸை அடைந்த போது, அங்கு வரிசையில் நின்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து அசந்து போனார்கள். வேறு வழியில்லாமல் தாங்களும் வரிசையில் சேர்ந்து கொண்டார்கள் 
"சும்மா சொல்லக் கூடாது ஸார். குடுக்கிற காசு வீண் போகலே. வீட்டு சாப்பாட்டை சாப்பிடுகிற மாதிரி இருக்குது. ருசிக்காக கண்டதையும் சேர்க்காமே, ஒரு பதார்த்தத்துக்கு எது எது தேவையோ அதை மட்டும் சேர்க்கிறாங்க " என்று வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவர் சொல்ல," அளவு கூட பரவாயில்லே. வயித்துக்கு வஞ்சனை செய்யாமே திருப்தியா சாப்பிடுறவங்க கூட போதும் போதும்னு சொல்ற அளவுக்கு அதிகப் படியாகவே எல்லாத்தையும் வைக்கிறாங்க " என்று மற்றவர் சொல்ல, அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு நபர், "இப்பத்தானே ஆரம்பிச்சிருக்காங்க.. ஆரம்பத்தில் எல்லாம் நல்லா இருக்கும். வியாபாரம் கொஞ்சம் சூடு பிடிக்கட்டும். அதுக்குப் பிறகும் இந்த தரமும் அளவும் இருக்கானு பார்க்கலாம்" என்றார்.
"ஒரே டைமில் நூறு பேர் உட்கார்ந்து சாப்பிடுகிற அளவுக்கு இடவசதி இருந்தாலும் லஞ்ச் டைமில் காத்துத் தானே கிடக்க வேண்டியிருக்குது "
"வேறே ஒண்ணுமில்லே சார். பக்கத்துக் காலேஜ் பசங்க அவங்க காண்டீன் சாப்பாட்டை  அவாய்ட் பண்ணிட்டு இங்கே வந்துடறாங்க. அவங்க  காலேஜில் லஞ்ச் டைம் 12.30க்கு. அதனால் அவங்க முன்னாடி வந்து இடம் பிடிச்சிடறாங்க. சீக்கிரம் சாப்பிட்டோம் எழுந்து போனோம் ற நடைமுறை எல்லாம் கிடையாது. ஊர் பிரச்சினை உலகப் பிரச்சினை எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சிட்டுதான் இங்கிருந்து கிளம்புவாங்க"
"பசியோட நாம க்யுவில் நிற்கிறது நமக்குப் பிரச்சினையா இருக்கே "
"அதை யார் போய் அவனுக கிட்டே சொல்ல முடியும் "
இது போன்ற உரையாடல்கள்  அங்கொன்றும் இங்கொன்றுமாக காதில் விழுந்து கொண்டிருந்ததால் வரிசையில் நிற்கும் அலுப்பு தட்டவில்லை இருவருக்கும். சிறிது நேரத்தில் உட்கார இடம் கிடைத்தது இருவருக்கும் .கடை முதலாளியே   ஒவ்வொரு மேஜை அருகிலும் சென்று அவர்களை
உபசரித்துக் கொண்டிருந்தார். ராஜு ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதைக் கவனித்த  தேவராஜன் "என்ன ராஜு உங்களுக்கு இந்த டேஸ்ட் பிடிக்கலையா ?" என்றார்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லே. அருமையா இருக்குது. மெஸ் ஓனர் முகம் ரொம்பவும் பழக்கப்பட்ட முகம் போலத் தோணுது. ஆனா யார் என்ன எங்கே பார்த்திருக்கிறோம்னு நினைவுக்கு வரலே "
"ஐயர்ருக்கு தஞ்சாவூர்னு கேள்விப் பட்டேன். உங்களுக்கும் அதுதானே சொந்த ஊர்  "
"ஆமாம். என்னோடு பாஷ்யம்னு ஒரு பையன் படிச்சான். அந்த முகமும் இந்த முகமும் ஒத்துப் போகுது, வீட்டில் ரொம்பவும் கஷ்டம்கிறதாலே அவனோட படிப்பை பாதியிலே நிறுத்திட்டு அவன் அம்மாவுக்கு ஒத்தாசையா சமையல் வேலையில் இறங்கிட்டானு கேள்விப் பட்டேன். அவன் ஹை ஸ்கூல் படிப்பைக் கூட முடிக்கலே. அப்புறம் நான் காலேஜ் படிப்புக்காக சென்னை வந்து, பிறகு இங்கேயே வேலை கிடைத்து செட்டில் ஆயிட்டதாலே  ஊர்ப் பக்கமே போகலே. ஒருவேளை அந்த பாஷ்யம் தான் இந்த ஓனரா ?"
"அட இதைப்போய் இவ்வளவு டீப்பாக தின்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்க . நேராகவே கேட்டுட்டா டௌட் கிளியர் ஆயிடப் போகுது "
"அதுவும் சரிதான்"
கூட்டம் சிறிது குறைந்திருந்த வேளையில் மெஸ் முதலாளி அருகில் சென்ற  இருவரையும் பார்த்து "என்ன ஸார் சாப்பாடு திருப்தியா இருந்துதா ? ஏதாவது குறை இருந்தா தயங்காமே சொல்லலாம். அதை எங்களைக் கரெக்ட் பண்ணக் கிடைச்ச வாய்ப்பா நினைச்சுக்குவோம் " என்று சிரித்த முகத்துடன் கேட்டார் முதலாளி  
"சாப்பாட்டில் எந்தக் குறையும் இல்லே. உங்களைப் பார்த்தால் எனக்கு ரொம்பவும் பரிச்சயம் ஆன முகம் போலத் தெரியுது " என்று ராஜு சொல்ல, "அப்படியா ! என் பேர் பாஷ்யம் .  பூர்வீகம் தஞ்சாவூர் " என்று முதலாளி சொல்லி முடிக்குமுன்னே, " டேய் .. நான் ராஜாங்கம், ராஜு .. அக்கிரகாரத் தெருவில் அஞ்சாம் நம்பர் வீடு " என்றார் ராஜு. கல்லாவை விட்டு எழுந்து வந்து ராஜுவின் கைகளைப் பற்றிக் கொண்ட  பாஷ்யம், "எனக்குக் கூட  உன் முகம் பரிச்சயம் ஆன முகமாத் தோணுச்சு. ஆனா உன்னைப் போலக் கேட்கணும்னு தோணலே. இப்போ எங்கே வேலை பார்க்கிறே  ? எத்தனை குழந்தைங்க ? ஆத்துக்காரி என்ன பண்றாங்க ?" என்று பாஷ்யம் கேட்டுக் கொண்டிருக்கும்போது  தயக்கத்துடன் அங்கே வந்து நின்றான் கடைப் பையன் ஒருவன் .
"என்னடா ? என்ன சொல்ல வந்தே ? மென்னு முழுங்காமே சொல்ல வந்ததை சொல்லிட்டு கஸ்டமரைக் கவனி "
"முதலாளி .. கொஞ்சம் தனியா வாங்க "
"இவா நமக்கு வேண்டப் பட்டவாதான். சிறுவயசு சிநேகம். நீ தயங்காமே சொல்ல வந்ததை  சொல்லு " என்றபடி சுற்று முற்றும் பார்த்த பாஷ்யம் வேறு சிலரும் அங்கு இருப்பதைப் பார்த்து விட்டு ," டேய் ராமு.. கொஞ்சநேரம் வந்து கல்லாவில் உட்காரு " என்று சொல்லி விட்டு ராஜுவின் கைகளைப் பற்றியபடி  சமையலறைக்குள் வந்தார். "இப்போ சொல்லு " என்றார் கடைப் பையனிடம்.
"அய்யா, சாயங்கால டிபனுக்காக அரைத்துக் கொண்டிருந்த அடை மாவில் பல்லி விழுந்துட்டுது. அதைக் கவனிச்சதும் கிரைண்டரை நிறுத்திட்டேன். பல்லி சாகலே ஆனா வால் மட்டும் கட் ஆயிட்டுது. அந்த ரெண்டையும் வெளியில் எடுத்துட்டோம். எதுக்கும் உங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லிடலாம்னு  .... " என்று கடைப் பையன் சொல்லி முடிக்கும் முன்பாகவே, " மாவை அப்படியே சாக்கடையில் கொட்டு" என்று பதட்டத்துடன் சொன்னார் பாஷ்யம்.
"பல்லியைக்  கரண்டியால எடுத்து வெளியே போட்டதும் அது ஓடிப் போயிட்டுது. பல்லி செத்தால்தானே விஷம் "
"எந்த விளக்கமும் வேண்டாம். மாவைத் தூரக் கொட்டு "
"ரெண்டு கிலோ அரிசி .. பருப்பு.. காரம்..."
"அது இருநூறு கிலோவாக இருந்தாலும் சரி. பூச்சி விழுந்த பொருள் வேண்டவே வேண்டாம்... வேண்டாம் .. நீ இரு .. " என்ற பாஷ்யம் தானே கைப்பட எல்லா மாவையும் கிரைண்டரிலிருந்து வழித்து எடுத்துவிட்டு அதைக் கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு வந்தார். "ஈவினிங் டிபனுக்கு பூரி பண்ணிடு .. இனிமே எப்போ அரிசி ஊற வச்சு எப்போ அரைச்சு எடுக்கிறது " என்றார் 
"பாஷ்யம் உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. நஷ்டத்தைப் பத்திக் கவலைப் படாமே வாடிக்கைக் காரங்க நலனை நினைச்சுப் பார்க்கிறியே. உன்னை நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு.. இப்போதான் சென்னை வந்து பிசினெஸ் ஆரம்பிச்சிருக்கே.. இதுக்கு முன்னே எங்கே இருந்தே ?"
"தஞ்சாவூரில் ஒரு மெஸ் இருக்கு. அதை மச்சினர் பொறுப்பில் விட்டுருக்கேன். மதுரை திருச்சி ஏரியா மெஸ் என்னோட ஆத்துக்காரி கஸ்டடியில் இருக்குது. இங்கே வியாபாரத்தில் கால் ஊனினதும்  இதை என்னோட இன்னொரு மச்சினன் பொறுப்பில் விட்டுட்டு  வேறொரு இடத்தில் மெஸ் ஆரம்பிப்பேன்"
"தொழிலில் உனக்கிருக்கிற நேர்மையான குணம்தான் உன்னை மேலே மேலே உயர்த்திட்டே இருக்குது. நீ நல்லா வரணும். ஆபீசுக்கு நேரமாச்சு. இதோ பக்கத்தில்தான் எங்க ஆபீஸ் .. இனிமே அடிக்கடி வருவேன் " என்று சொல்லி விடை பெற்றார்  ராஜு 
ஆபீஸ் போய்ச்சேரும் வரை, "நமக்குத் தெரிந்த ஒருத்தன் பிசினெஸில் நல்லபடியா அதுவும் நாணயமா இருக்கிறதைப் பார்த்தால் மனசுக்கு எவ்வளவு நிறைவா இருக்கு " என்று  சொல்லிக் கொண்டு வந்தார் ராஜு.
கல்லாவில் உட்கார்ந்த பாஷ்யம், நாட்டிலுள்ள விஷ  ஜந்துக்களைக் கொல்ல என்னென்னவோ மருந்தெல்லாம் இருக்குது .. கடவுளே.. இந்த மனச்சாட்சியைக் கொல்ல மருந்தே இல்லையா. அதை எவ்வளவுதான் ஒதுக்கி வச்சாலும் அப்பப்போ வந்து தலை காட்டுதே. இன்றைக்கு நான் பிசினெஸ்  ரேஸில் எனக்குன்னு ஒரு இடத்தைப் பிடிக்கிறதுக்கும் ஒரு பல்லிதானே காரணம்..படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பிழைப்புக்காக அம்மாவுடன் சமையல் வேலைக்குப் போய்,அங்குள்ள  எடுபிடி வேலை பிடிக்காமல் முதலாளியாக ஆசைப் பட்டு, என்னென்ன தகிடு தத்தம் எல்லாம் பண்ணியிருக்கிறேன். சாப்பிடும்போது மயக்கம் போட்டு விழுந்த நபர்  ஆஸ்பத்திரிக்குப் போகும் வழியில் இறந்து போனது ஹார்ட் அட்டாக்கில்தான்  என்பது தெரிந்தாலும், "முதலாளி..கலந்து வச்ச காப்பியில் பல்லி விழுந்திருக்கு. அதைக் குடிச்சதால்தான் அந்த ஆள் செத்துப் போயிட்டார். போனவர் சாதாரண ஆள் இல்லே. கட்சியில் பெரிய ஆள். பல்லி விழுந்து செத்த காப்பியை அவர் குடிச்சதால் செத்த விஷயம் அவர் வீட்டுக்குத் தெரிந்தால்  உங்க குடும்பத்தில் ஒருத்தர் கூட தப்ப முடியாது" என்று மிரட்டலாக  சொல்ல, குலை நடுங்கிப்போய் நின்ற முதலாளியிடம், "இது நம்ம ரெண்டு பேரையும்  தவிர வேறு யாருக்கும் தெரியாது. நான் யாரிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்களும் இதைப் பத்தியாரிடமும்  மூச்சு விடாதீங்க"ன்னு நான் சொன்னதை நம்பி செத்தவரைப் பற்றிக் கவலைப்படாதிருந்த முதலாளியை, பல்லி பற்றி பயங் காட்டியே பணம் பறிச்சேன். அவர் மகளை எனக்குக் கட்டிக் கொடுக்க வைத்து அவர் சொத்தையும் எழுதி வாங்கிட்டேன். எல்லாரும் பணத்தை மூல தனமா வச்சு பிசினெஸ் ஆரம்பிப்பாங்க. நான் ஒருத்தனோட பயத்தை மூலதனமா வச்சு பிசினெஸ் ஆரம்பிச்சேன் இந்த பூமியில் இன்னொரு பாஷ்யம், அதுவும் என் கடையிலேயே உருவாக அதற்கு  சந்தர்ப்பம் கொடுக்க நான் என்ன மடையனா ? " என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் பாஷ்யம்.
   

Friday, May 09, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 113)

                                             உறவும் நட்பும் !
"டாடி, எனக்கு இந்த அலையன்ஸ் வேண்டவே வேண்டாம். இந்த உலகத்தில் இவங்க ஒருத்தங்கதானா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க. ஒரே ஒரு " ஆட் " கொடுத்தால் நம்மளத் தேடி மத்தவங்க வரப் போறாங்க. என்னவோ ஊர் உலகத்தில் இல்லாத குதிரைக் கொம்பு மாதிரி அவங்க அலட்டிக்கிறாங்க. நீங்க அவங்க காலில் விழாத குறையாக சேவகம் செய்றீங்க "
"ராதா. ப்ளீஸ் ஸ்டாப் யுவர் நான்சென்ஸ். கல்யாணப் பெண்ணா லட்சணமா இல்லாமல் என்ன பேச்சு பேசறே ?" என்று மகளைக் கடிந்து கொண்டார் செல்வரங்கன் .
"அவ சொல்றதில் என்ன தப்பு இருக்கு ? பொறுமைக்கும் ஒரு அளவு உண்டுங்க. நாம என்ன விலை போகாத சரக்கையா நம்ம  கையில் வச்சிருக்கோம் ? நம்ம கையில் இருக்கிறது கறவை மாடுங்க. மாசம் அம்பதாயிரம் சம்பாதிச்சுக் குடுக்கிற மாடு " என்று மகளுக்காக பரிந்து பேசிய மீனாவை பொசுக்கி விடுவது போலப் பார்த்தார் செல்வரங்கன்.
"அங்கிள், எங்க டாடி உங்க ப்ரெண்ட். நீங்க அதை மனசில் வச்சுக்காமே ஒரு மூணாவது மனுஷனைப் பார்க்கிறதா நினைச்சுகிட்டு தீர்ப்பு சொல்லுங்க. நானும் மம்மியும் பேசினதில் என்ன தப்பு ?" என்று ராபர்ட்டிடம் கேட்டாள் ராதா.
"நீங்க சொல்றதும் நியாயம். உங்க அப்பா கவலைப்படுவதும் நியாயம். நமக்கு நியாயமா தெரியிற ஒண்ணு மத்தவங்களுக்குத் தப்பா படுமே. ஒரு கல்யாணப் பொண்ணு இப்படிப் பேசினான்னு பையன் வீட்டுக்குத் தெரிஞ்சா அதற்கும் சேர்த்து  பெனால்ட்டி மாதிரி இன்னொரு இரண்டு லட்சத்தை வரதச்சனையில் ஏத்திடப் போறாங்கம்மா " என்று சொல்லி சிரித்தார் ராபர்ட்.
"அங்கிள், இந்த அலையன்ஸ் பிக்ஸ் ஆன நாளிலிருந்து, ' இனிமே அதுதான் உன்னோட குடும்பம். எது சொன்னாலும் சரிசரின்னு தலையை மட்டும் ஆட்டி அவங்க   சொல்ற வேலையை மட்டும்  செய்யணும். ஏன் எதுக்குன்னு எந்தவொரு ஆர்க்யூவும்   பண்ணக் கூடாது. அவங்க கிட்டே எந்த ஒளிவு மறைவும் வேண்டாம். எங்களுக்குக் குடுக்கிற அதே மரியாதையை அங்கேயும் காட்டணும்னு கீறல் விழுந்த டேப் ரிகார்ட் மாதிரி சொல்லிட்டு இருக்கிறாங்க. அவங்க கேட்ட எதையும் அப்பா மறுக்கலே. அதிகமாகவே செய்றார். ஏதோ பேச்சு வாக்கில் அவங்க கிட்டே 'என் பொண்ணு சம்பாதிச்சுக் கொடுத்த மூணு லட்சத்தை பிறகு அவளுக்கே குடுத்திடுவேன்'னு ஒரு வார்த்தை விட்டுட்டார்.அதைக் கல்யாணப் பந்தலிலேயே கொடுக்கணும்னு சொல்றாங்க. அந்தப் பணத்தை அப்பா ஆல்ரெடி ஸ்பென்ட் பண்ணிட்டார். பட்ஜெட் போட்டு எல்லா செலவும் போக எமெர்ஜென்சிக்காக ஒரு லட்சம் மட்டும் கையில் வச்சிருக்கார். இப்போ மேற் கொண்டு இரண்டு லட்சத்துக்கு எங்கே போவார் ? மாமாகிட்டே, அதான் மம்மியோட அண்ணா கிட்டே கேட்டுப் பார்த்தாச்சு . மல்டி மில்லியனர் அவர்.ரொம்ப லாசில் அவர் பிசினெஸ் போற மாதிரி ஒரு சீன் கிரியேட் பண்றார். அவர் ஆசை அதுன்னா கடைசியில் அது அப்படித்தான் ஆகப் போகுது. பணம் அதுவும் மூணு  லட்சம், இன்னும் மூணு நாளைக்குள் புரட்டறதுன்னா அது முடியற காரியமா அங்கிள் . இந்த மாதிரி என்னோட பேரெண்ட்ஸ்க்கு டார்ச்சர் குடுக்கிற குடும்பத்தை நான் எப்படி என் குடும்பமா நினைக்க முடியும் ? .......
செல்வரங்கன் முறைத்துப் பார்ப்பதைக் கண்ட ராதா வாயை மூடிக் கொண்டாள்.
"மீனா, காப்பி கொண்டு வா. ராதா நீ போய் ராபர்ட் சாப்பிட சப்பாத்தி ரெடி பண்ணு "
"எங்களை உள்ளே துரத்த இது ஒரு ட்ரிக் " என்றபடி ராதா எழுந்த செல்ல மகளைப் பின் தொடர்ந்தாள் மீனா 
"மம்மீ, இந்தக்  கல்யாணம் முடியட்டும். கல்யாணத்துக்கு முன்னாடி நீ என்ன சம்பாதிச்சியோ அது ஒரு பைசா பாக்கியில்லாமே  இன்னைக்கே இப்பவே நம்ம ஜாயிண்ட் அக்கௌண்டுக்கு வரணும்னு நான் சொல்லிடறேன் "
"யாரிட்டே ?"
"உனக்கு வந்து வாய்ச்சிருக்கிற மாப்பிள்ளை கிட்டே "
"அந்த எண்ணமெல்லாம் வேண்டாம். குடும்பம்னா அப்படி இப்படித்தான் இருக்கும். சரிசரின்னு சகிச்சுப் போயிட்டா குடும்பம் சந்தோசமா இருக்கும். மல்லுக்கு நின்னா குடும்ப மானம் சந்தி  சிரிக்கும் "
"எது எது சிரிக்குது அழுது என்கிறதைப் பத்தி எனக்குக் கவலை கிடையாது . அவங்களுக்குப் பெரிசாத் தெரியற பணம் என் கண்ணுக்கும் இப்போ பெரிசாத் தெரியுது. அதுக்காக நானும் டார்ச்சர் பண்ணுவேன். அதில் என்ன தப்பு ? அம்மா நான் யாரையும் அடிக்க நினைக்கலே. என் மேலே அடி விழுது. அதை தாங்கிக் கொண்டு நிற்க  நான் காவியப் பொண்ணு இல்லே. அந்தப் பட்டமும் எனக்கு வேண்டாம். கல்யாணம் முடியட்டும் ... வச்சுக்கிறேன்.ஆர்க்யூ பண்ண வாயைத் திறக்கட்டும் .. அப்புறம் மவனே நீ தொலைஞ்சே !"
"என்னடி இது பேட்டை ரௌடி மாதிரி. இதெல்லாம் அப்பா காதில் விழுந்தால் அதற்கும் சேர்த்து வருத்தப் படுவார்  "
ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த செல்வரங்கனும் ராபர்ட்டும் எந்தெந்த  வழிகளில் பணம் புரட்டலாம் என்பது பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்.
"செல்வா எனக்கொரு யோசனை தோணுது. நீ எப்படியும் நம்ம ஸ்டாப்க்கு இன்விடேஷன் குடுப்பே. நம்ம ஆபீஸ் கலெக்சன் எப்படியும் குறைஞ்சது ஒரு இருபதாயிரம் தேறும். அதை செக்காக உன் பேரில் யாருக்கும் தெரியாமே குடுக்க ஏற்பாடு பண்றேன். வாழ்த்து மடல் ஒன்று ப்ரிபைர் பண்ணி அதை நாங்க மேடையில் குடுத்துட்டுப் போயிடறோம் "
"இது ரொம்ப சீப்பா தெரியுது. எனக்கும் ஒரு சுயமரியாதை இருக்கே "
"இருக்கட்டும். அது பிரச்சினையை சால்வ் பண்ணாது. வேணும்னா ஒண்ணு செய்யலாம். எனக்குத் தெரிஞ்ச சேட் ஒருத்தர்கிட்டே என்னோட வீட்டை அடமானம் வச்சு  பணம் வாங்கித் தர்றேன். உனக்கு முடிஞ்சப்போ அதை மீட்டுக் குடு. ஆனா வட்டியை மாசா மாசம் நீதான் கட்டணும். ஏன்னா என்னோட பட்ஜெட்டில் அதுக்கு  நூல் அளவு கூட இடமில்லை இப்படி அடாவடியா பேசறேன்னு தப்பா நினைச்சுக்காதே "
"இல்லே ராபர்ட் .. நீ இப்போ என் கண்ணுக்குத் தெய்வமா தெரியறே " என்று சொல்லி ராபர்ட்டின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார் செல்வரங்கன்.   
ராபர்ட்டின் குடும்பத்தினருக்கு டிரஸ் எடுத்துக் கொண்டு அழைப்பிதழ் கொடுக்க தனது மனைவியுடன் ராபர்ட் வீட்டுக்குப் போனபோது" என்னப்பா இது, நீயே பணத் தேவையில் இருக்கிறே . இந்த நிலையில் எங்களுக்கு டிரஸ்ஸா ? இதுக்காக எவ்வளவு செலவு பண்ணினே ?" என்று கடிந்து கொண்டார் ராபர்ட் 
"ரொம்ப இல்லேப்பா. எல்லாம் சேர்ந்தே  இரண்டாயிரத்துக்கும் கீழே தான் . ஒரு ஆசை. அதான் எடுத்தேன் "
"ஆசையை பரிசு கொடுத்துதான் காட்டணும் என்கிற கட்டாயம் எதுவும் கிடையாது. மனசில் இருந்தால் போதும். இதை அப்படியே எடுத்துக் கொண்டு போ. உன் உறவினர் லிஸ்டில் யார் பேராவது விட்டுப் போயிருந்தால் இதை அவங்க கிட்டே குடுத்திடு " என்று சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டார் ராபர்ட்  
அதன் பிறகு எந்தக் குறையும் இல்லாதபடி மாப்பிள்ளை வீட்டார்க்கு நிறைவாக  கல்யாணத்தை செய்து முடித்தார் செல்வரங்கன். தாய் மாமன் ஸ்தானத்திலிருந்த  மீனாவின் அண்ணன்தான் தனக்கு செய்த மரியாதைகள் ரொம்பவும் குறைவு என்று குறை பட்டுக் கொண்டார்.
"என்னம்மா மீனா, உன் வீட்டில் நடக்கிற முதல் விசேஷம் இது. மாசம் அம்பதாயிரம் சம்பாதிக்கிற பொண்ணுக்கு நடக்கிற கல்யாணம். தாய்மாமனுக்கு, மாமிக்கு  மரியாதை செய்ய  குறைஞ்சது ஒரு அம்பது அறுபதாயிரம் செலவு பண்ணுவீங்கனு பார்த்தால், எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்தே ஒரு இருபதாயிரத்துக்குள் டிரஸ் எடுத்துட்டீங்க போலிருக்கு " என்றார் 
"அண்ணே, செய்ய ஆசைதான்.. கடைசி நேரத்தில் ஒரு குளறுபடி. அதுக்காக நாங்க கூட உங்ககிட்டே கடன் கேட்டோமே. எங்கேயும் கிடைக்கலே.அதான் பட்ஜெட்டில்சில செலவுகளை அட்ஜஸ்ட் பண்ணும் படி ஆயிட்டுது "
"அப்படின்னா ஊருக்கு எளைச்சவன்  இளிச்ச வாயன் தாய்மாமன்தான்னு சொல்லு " என்று யதார்த்தமாக சொல்வதுபோல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல சொன்ன வார்த்தைகள் செல்வ ரங்கத்தின் மனதை கத்தி போல அறுத்துக் கொண்டிருந்தது.
பொத்திப் பொத்தி வளர்த்த பெண் வீட்டை விட்டுப் பிரிந்து சென்று விட்டாள் என்ற கவலை ஒருபுறம், மலைபோல நம்பியிருந்த உறவுகள் தன்னைக் கைவிட்டு விட்ட வருத்தம், தாய்மாமனின் சொல்லம்புகள் இன்னொருபுறம் என்று பலவிதக் குழப்பங்களில் இருந்த செல்வ ரங்கத்தின் கைகள்  அனிச்சையாக டீவீயை ஆன் செய்தது. ஒரு சானலில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது  "உறவா ? நட்பா ? " என்ற கேள்விக்குறியுடன்.
கையில் காப்பியுடன் அங்கு வந்த மீனா, சில நொடிகள் டீவீயை பார்த்துக் கொண்டிருந்து விட்டு " உறவுக்கும் நட்புக்கும் நடுவில் அப்படி என்ன பெரிய வித்தியாசம் இருக்கு ? உறவுகள், தானாக சுயமாக அமைவது. நட்புங்கிறது நாம தேர்ந்தெடுக்கிறது,  அவ்வளவுதானே ?" என்று கேட்டாள்.
"இன்னொரு வித்தியாசம் இருக்குது. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே என்று ஒரு திருக்குறள் உண்டு, படிச்சிருப்பேதானே ! உண்மையிலேயே ரெண்டு பேர் ஆடை இழந்து நிற்கிறாங்கனு வச்சுக்குவோம். அதில் ஒருத்தன் நம்ம சொந்தக்காரன் இன்னொருத்தன் நமக்கு நண்பன்னு வச்சுக்குவோம். நாம கட்டியிருக்கிற ஆடையைக் கழற்றி நம்மோட  நண்பனுக்குக் குடுத்தால் "என்னப்பா, உன் மானத்தைப் பற்றிக் கவலைப்படாமே இப்படி உன்னோட வேஷ்டியை அவிழ்த்துக் குடுத்துட்டியே"ன்னு சொல்லி வருத்தப்படுவான். இதே காரியத்தை, அதாவது நம்ம சொந்தக்காரன் ஆடை இழந்து நிற்கிறப்போ  செய்தோம் னு  வச்சுக்கோ, அப்போ அந்த உறவு என்ன சொல்லும் தெரியுமா ? "நான் ஆபத்தில் இருக்கிறப்போ அவன் கட்டியிருக்கிற வேஷ்டியைத் தானே அவன் எனக்குக் குடுத்தான். கோவணத்தை அவனே வச்சுக் கிட்டானே'னு சொல்லிப் புலம்பும்" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் செல்வரங்கன்.அதைக் கேட்டு மீனாவுக்கு சிரிப்பு வரவில்லை.  சிந்தனையில் ஆழ்ந்தாள்.