மனிதனின் வாழ்வாதாரம் தண்ணீர். அதைத் தருவது மழை. மழைக்கு மரம் வளர்ப்பு அவசியம்.. இதெல்லாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.
பெரு மழை, புயல் என்பதெல்லாம் இயற்கையின் சீற்றம். அதன் விளைவுகளுக்கு யாரும் பொறுப்பேற்க முடியாது. அப்படி குறை சொல்வது என்று ஆரம்பித்தால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் சொல்ல வேண்டும்.
சமீபத்திய புயலால் பாதிக்கப் பட்டவர்கள் நிவாரணம் கேட்கிறார்கள். அரசாங்கம் அதை செய்யும். அதில் சந்தேகம் இல்லை.
ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை, குப்பைகளை அள்ளிச்செல்ல மாநகராட்சி ஊழியர்கள் பணம் கேட்பது எந்த வகையில் நியாயம்?
எங்கள் வீட்டில் வளர்த்த நான்கு வாழை மரங்கள் புயலில் சாய்ந்து விட்டன. எல்லாவற்றையும் வெட்டி அப்புறப்படுத்தி, ஓரிடத்தில் சேர்த்து வைத்து விட்டோம். மாநகராட்சி வண்டி வந்தால் எடுத்துச் செல்லும் என்பதற்காக;
வந்தார்கள். நாங்கள் சொன்னதும் மறுப்பேதும் சொல்லாமல் அப்புறப் படுத்தினார்கள். ஆனால் அதை அப்புறப்படுத்தியதற்கு 500 ரூபாய் கேட்டார்கள். பேரம் பேசி 300 ரூபாய் கொடுத்தோம்.
இந்த மாதிரி நிலையில், "மரம் வளர்ப்போம்; மழைவளம் காப்போம்" என்று யாராவது பிரச்சாரம் பண்ணினால், அதற்கு ஏதாவது பலன் இருக்குமா ? மீதமுள்ள எல்லா வாழையையும் வெட்டிவிட முடிவெடுத்து விட்டோம். இது நல்ல முடிவுதானே ?
மீண்டும் சொல்கிறேன். புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியது. பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் கேட்பது எந்த வகையில் நியாயம்?
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
அப்புறம் இன்னொரு விஷயம். இரண்டு நாட்கள் முன்பாக "ரொம்ப ஈஸி.. ஆனா கொஞ்சூண்டு கஷ்டம் " என்ற தலைப்பில் வெளியான புதிரை விடுவிக்க முடிந்ததா? அதேபாணியில் உருவான ஆங்கிலப்புதிர்கள் ARUNA S.SHANMUGAM.BLOGGER என்ற தளத்தில் வெளியாகி உள்ளது அதை நீங்கள் online ல் solve பண்ணலாம். முயற்சி செய்து பாருங்கள்.