Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, February 28, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 27



  அச்சுப்பிச்சு அப்புமணி ! மீட்டிங் முடிந்து வந்த உதவி ஆணையாளர், "என்னப்பா, பையனை நல்லா கவனிச்சீங்களா?" என்று காவலர்களைக் கேட்க, 'கவனிக்கத்தான்  நினைச் சோம். ஜஸ்ட் மிஸ்ஸிங்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் அதிகாரி முன்பாக மிகவும் பணிவாக, "ஆமாம் ஸார்" என்றார்கள்.
அப்புமணியை தனியறைக்கு அழைத்துச் சென்ற அதிகாரி, "என்ன தத்துப்பித்து . நீ யார் வீட்டுக்கு வந்திருக்கிறே ? தனியாவா பீச்சுக்கு வந்தே ?" என்று கேட்டார்.
"ஐயோ .. ஐயோ .. உங்களுக்கு என் பேரை சொல்லவே தெரியலே. நான் தத்துப்பித்து இல்லே. நான் அச்சுப்பிச்சு ...ஆமா ... பெரிய போலீஸ் ஐநூத்தி ஒண்ணை நான் பார்க்கவே இல்லையே " என்றான் அப்புமணி 
"அவர் வருவார்... நீ யார் வீட்டுக்கு வந்திருக்கிறே ?" என்று அவர் கேட்டதும் அப்புமணி யோசிக்க ஆரம்பித்தான்.
அதைக் கவனித்த அதிகாரி, "ஆமாம் .... உங்க தோட்டத்தில் இப்போ நிறைய வெள்ளரிக்காய் காய்ச்சிருக்கும் தானே ? உங்க வீட்டுக்கு வந்தா எனக்குத் தருவியா ? " என்று கேட்டு அவனது யோசனயை திசை திருப்பப் பார்த்தார்.
"ஓ ... தருவேனே .. யார் எது கேட்டாலும் , அது நம்ம கையில் இருந்தால் அதை முழுசா குடுக்க முடியாட்டாலும் கொஞ்சமாவது குடுக்கணும்னு எங்கம்மா சொல்வாங்க. எங்க தோட்டத்தில்தான் நிறைய வெள்ளரிக்கா இருக்கே. நீங்க எவ்வளவு வேணும்னாலும் பறிச்சிட்டுப் போகலாம் "
"சரி ... நீ சென்னைக்கு எப்போ வந்தே? யார் வீட்டுக்கு வந்தே ? பீச்சில் தனியா விளையாடிட்டு இருந்ததா சொல்றாங்க .. உன்னோட வந்தது யார் ?  உன்னை விட்டுட்டு அவங்க எங்கே போனாங்க ?"
"நான் உலகத்தை சுத்திப் பார்க்க வந்தேன் "
"என்னடா இது ! உலகத்தை சுத்திப் பார்க்க தனியா வந்தியா ?"
"ஆமாம்.. கதையில் வர்ற உருப்படாத ராஜகுமாரன் தனி ஆளாகப் போய்த் தானே உலகத்தை சுத்திப் பார்த்துட்டு வருவான். அதுமாதிரிதான் நானும் தனியா வந்தேன்" என்று அப்பாவித் தனமாக அப்புமணி சொல்ல, அதைக் கேட்டு சிரித்தார் அதிகாரி .
"உலகத்தை சுத்திப் பார்க்கிற ஆளைப் பாரு. உனக்கு முதல்லே இந்த சென்னையை விட்டு வெளியே போகத் தெரியுமா ? நீ உலகத்தைப் பத்தி தெரிஞ்சுகிட்ட வரை போதும். ஊர் போய்ச்சேருற வழியைப் பாரு. உங்க அம்மா தேடுவாங்க தானே ?"
"நான் அம்மாவுக்கு டாட்டா சொல்லிட்டுதானே வந்தேன் "
"நீ எப்போ வந்தே? யாரோட தங்கி இருக்கிறே?" என்று அதிகாரி கேட்டதும் அமைதியானான் அப்புமணி.
 "சாப்பிட்டியா ?. என்ன வேணும் சொல்லு "
"பீச்சில்சுண்டல் சாப்பிட்டேன்.அப்புறம் அந்த ரெண்டு போலீஸ் அங்கிளும்  எனக்கு ஜூஸ் வாங்கித் தந்தாங்க."
"சரி சொல்லு. ஊரை விட்டு வந்த பிறகு இங்கே யாரோட இருக்கிறே ?"
"யாரோடயும் இல்லே. ரயில் வந்து நிக்கும்தானே. அங்கே பெஞ்சிலே நிறைய பேர் தூங்குவாங்கதானே . நான் அங்கேதான் இருந்தேன்."
"சரி. எங்க வீட்டுக்கு வர்றியா ? முதலில் உங்க அம்மாவுக்கு நீ என்னோட இருக்கிறதை சொல்லிடலாம். நான் உனக்கு சென்னையை சுத்திக் காட்டறேன். பார்த்துட்டு நீ ஊருக்குக் கிளம்பிப்போயிடணும். நான் உன்னை  பத்திரமா அனுப்பி வைப்பேன். சரியா ?" என்று கேட்ட அதிகாரி அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். 
"ஊஹூம் ... நான் வரலே. நான் போகலே "
"அப்படின்னா ?"
"உங்க வீட்டுக்கு வரலே. எங்க வீட்டுக்குப் போகலே"என்ற தீர்மானமான பதில் வந்தது அப்புமணியிடமிருந்து.
இதைக் கேட்டதும், கான்ஸ்டபிள் ஒருவரை உள்ளே அழைத்து ,"நான் இல்லாதப்ப இந்தப் பையன் வந்தால்,நான் இல்லன்னு சொல்லி அனுப்பா மல் என்ன ஏதுன்னு விசாரிச்சு அவன் கேட்கிறதை செஞ்சு குடுங்க. பையன் நல்ல வசதியான வீட்டுப் பையன். எதோ பைத்தியக்காரத்தனமா வீட்டை விட்டு வந்திருக்கிறான்" என்று சொல்லி விட்டு அப்புமணியிடம், "சரிப்பா தத்துப்பித்து .. நீ போகலாம் " என்றார். 
"ஐயோ .. ஐயோ .. என் பேரை எப்பத்தான் சரியா சொல்லப் போறீங்களோ தெரியலே "என்று தலையிலடித்துக் கொண்டு அப்புமணி சொல்ல, அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது அதிகாரிக்கு.
அப்புமணி அங்கிருந்து கிளம்பிப் போனதும்,"பையனை ரொம்ப குளோசா வாட்ச் பண்ணுங்க. எந்த தகவல் கிடைச்சாலும் எனக்கு உடனே  இன்பார்ம் பண்ணனும். கிராமத்துப் பையன். கொஞ்சம் அசடு. கொஞ்சம் அப்பாவி. ஆனா ரொம்ப நல்ல பையன் "  என்றார்.  
தன்னுடைய ரூமுக்கு வந்த சேகர் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். போலீசுகிட்டே நான் சிக்காமே இருக்கறதுக்கு அந்தப் பையனை அப்படியே விட்டுட்டு வந்துட்டேனே. அவங்க கையில் சிக்கினா இவன் கதி அதோ கதிதானே. அவனை  எப்படி அங்கிருந்து கொண்டு வர்றது என்பது போன்ற சிந்தனைகள் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அவனது கவலைக்கு காரணம் கேட்ட பிரவீனிடம் தன்னுடைய பயத்தை சொன்னான் சேகர். 
"அடிக்குப் பயந்து அந்த லூஸு உண்மையை சொல்லிடுமோ?" என்ற கேள்வி வந்தது பிரவீனிடமிருந்து.
"அவன் ஒரு ரெண்டுங் கெட்டான்.  எப்போ என்ன செய்வான்னு யாருக்கும் தெரியாது. பாவம்டா... ஒரு அப்பாவிப் பையனை விட்டுட்டு வந்துட்டோ மேனு வருத்தமா இருக்குது." என்று சேகர் சொல்ல , "ஒருவேளை அந்த லூஸை அனுப்பி போலீஸ் நம்மள வேவு பார்த்தால் என்ன செய்றது ?" என்று கோபமாகக் கேட்டான் பிரவீன்.
"அந்த பயம் இருக்கிறவங்க இங்கே இருக்க வேண்டாம் ... எங்காவது போயிடுங்க " என்று எரிந்து விழுந்தான் சேகர்.
"அவனால் ஏதாது பிரச்சினை வந்தால் அவன் கழுத்தை அப்படியே நெரிச்சு கொன்னுடுவேன்"
"அவனால் எந்த வம்பும் வராது. அவன் முதலில் வரட்டும்.அவனை நம்ம வேலைக்காரி தனம் கஸ்டடியிலே விட்டுடுவோம் " என்று சேகர் சொல்ல அதற்கு பிரவீன் ஒப்புக் கொண்டான்.
"சரி .. உன்னோட உடன்பிறவா சகோதரனை ஆயில் மசாசுக்குன்னு எங்கியோ கொண்டு போய்  விட்டியே. அவர் எப்ப வருவார்."
 " இன்னும் ரெண்டு நாளில் போய் கூட்டிட்டு வந்துடுவேன் "
"நல்ல பொழப்புடா சாமீ " என்று சொல்லி விட்டு பிரவீன் வெளியில் கிளம்ப அப்புமணியை பற்றிய கவலையில் ஆழ்ந்தான் சேகர்.
---------------------------------------------------   தொடரும் ------------------------------------------------ 

Friday, February 19, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 26

                                       
   அச்சுப்பிச்சு அப்புமணி !
அப்புமணியை அழைத்துக் கொண்டு கமிஷனர்  ஆபீசுக்கு வந்தார்கள் காவலர்கள் இருவரும். சீருடைக் காவலர்கள் அங்கும் இங்குமாக பரபரப்பாக சுற்றிக் கொண்டிரு ந்ததைக் கண்டதும் தான் வந்திருக்கும்  இடம் எது என்பது அப்புமணிக்குப் புரிந்து விட்டது. 
"என்னை ஏன் இங்கே கூட்டிட்டு வந்தீங்க ?" என்று கேட்டான் அப்புமணி அப்பாவித் தனமாக.
"உனக்கு வேலை வாங்கித் தரலாம்னுதான் " என்று கிண்டலான பதில் வந்தது எதிர்த் தரப்பிலிருந்து.
"ஹையா ... ஜாலி ....ஒரு அண்ணா எனக்கு கலெகடர் வேலை வாங்கித் தர்றேன்னு சொல்றாரு. நீங்க என்ன வேலை வாங்கித் தருவீங்க? உங்களைப் போல போலீஸ் வேலையா?"
"போலீஸ் வேலை எப்படின்னு  நீ இப்போ பார்க்கத்தானே போறே. போதும் போதும்னு நீ சொல்ற நாங்க அளவுக்குத் தருவோம்தானே " என்று கான்ஸ்டபில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த இன்ஸ் பெக்டர்  ஒருவர், "யாருப்பா இந்தப் பையன் ?" என்று கேட்டார்.
அவருக்கு விறைப்பாக  நின்று சல்யூட் செய்த காவலர்கள், "காசி மேடு குண்டு வெடிப்பில் நாம தேடிட்டு இருக்கிறோமே பிரவீன், அவனுக்கு ஒரு சகா உண்டு. பேர் சேகர். அவனோட இவன் பீச்சில் விளையாடிட்டு இருந்தான். எங்களைக் கண்டதும் அவன் தப்பிட்டான். அவனைப் பத்தி விசாரிக்கதான் இவனை அழைச்சிட்டு வந்தோம். அசிஸ்டன்ட் கமிஷனர்   கூட சேர்ந்து கமிஷனர் ஏதோ ஒரு  முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறா ராம். முக்கியமான ரெண்டு பேருக்காக அவர் வெயிட் பண்றாராம்.அதான்  நாங்க இங்கே வெயிட் பண்றோம்" என்றனர்.
"கொம்பை விட்டுட்டுத் வாலைப் பிடிக்கிறதே உங்களுக்குப் பொழைப்பாப் போச்சு" என்று சொல்லி தலையில் அடித்தபடி அங்கிருந்து நகர்ந்தார் இன்ஸ்பெக்டர் . 
அப்போதுதான் அப்புமணிக்கு சேகரும் அவனது நண்பர்களும் போலீஸால் தேடப்படும் விஷயம் புரிகிறது.அந்தப் பிரவீன்அண்ணா குண்டு வைக்கிற வரா ? பார்த்தால் அப்படித் தெரியலையே.அவர் நல்லவரோ இல்லையோ .. எனக்கு அவர் எந்தக் கஷ்டமும் தரலையே.அம்மா அடிக்கடி சொல்வாங் களே, உலகத்தில் எந்தவொரு மனுஷனும் எப்பவும் எல்லாருக்கும் நல்ல வங்களா இருக்க முடியாது. அவனவன் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தக்கபடி நல்லவனாவும் கெட்டவனாவும் மாறுவான். மத்தவங்களுக்கு ஒருத்தன் கெட்டவனா இருந்தாக்கூட அவனாலே நமக்கு எந்த கஷ்டமும் வராத வரை, அவனை நாம கெட்டவன்னு முடிவு கட்ட வேண்டாம்னு சொல்வா ங்களே. அண்ணாவைப் பத்தி யார் என்ன கேட்டாலும் எதுவும் சொல்லக் கூடாதுனு தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தான். மாரியம்மை கையிலே இருந்த காசைப் பத்தி அவளோட குடிகாரபுருஷன் கிட்டே உண்மையை சொல்லப் போய்த்தானே, அவன் அவ கையிலிருந்த காசைப் பிடுங்கிட்டு ஓடினான். அப்பவே அம்மா சொன்னாங்களே, நாம உண்மை பேசினால் அதனாலே மத்தவங்களுக்குக் கஷ்டம் வரும்னு தெரிஞ்சா, எதுவுமே பேசாமே இருந்திடணும்னு. நாம அப்படியே இருந்திடுவோம்னு தீர்மானம் எடுத்துக் கொண்டான். 
"டேய் ... உன் கூட இருந்தானே, அவன் இருக்கிற இடத்தைக் காட்டுடா " என்றார் கான்ஸ்டபில் ஒருவர் 
"என் கூட யார் இருந்தாங்க ? பீச்சில் யார் யாரோ இருந்தாங்க . நீங்க யாரைக் கேக்கறீங்க ?"
"உனக்கு சுண்டல் வாங்கிக் குடுத்தானே அவன் !"
"அவர் யாரோ ? யாருக்குத் தெரியும். ஊரை விட்டு ஓடி வந்திட்டேன். பசிக் குதுன்னுசொன்னேன்.சுண்டல் வாங்கித் தந்தார். அவ்ளோதான் " என்று சிரிக்காமல் பதில் சொன்னான் அப்புமணி, வந்த சிரிப்பை அடக்கிய படி.
"ரெண்டு போட்டேன்னா தெரியும் " என்று ஒருவர் கையை ஓங்க, அவரது விலாவில் இடித்து "ஏ.சி வர்றார் " என்று சைகை செய்த இன்னொரு கான்ஸ்டபில், அப்புமணியின் பக்கம் திரும்பி, "பெரிய போலீஸ் வர்றார். கம்முனு இருக்கணும்" என்றார். அவர் வரவைக் கண்டு அலுவலகம் பரபரப்பானது. அவர் காட்டிய திசையைப் பார்த்த அப்புமணி, "ஐயோ ... கருமம் ... இவரா பெரிய போலீஸ்.. இவர் சின்ன போலீஸ். ஐந்நூத்து ஒண்ணுதான் பெரிய போலீஸ். அவருக்குதான் பெரிய தொப்பை" என்று சத்தமாகக் கூற, அதைக் கேட்டு அந்த ஹாலே அதிர்ந்து போனது. அப்புமணி சொன்னது ஆபிசரின் காதிலும் விழுந்தது. இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்ற நினைப்பில் குரல் வந்த திசையைக் கூர்ந்து பார்த்தார்.  
"ஹே... நீ  தத்துப்பித்துதானே ! இங்கே என்ன செய்றே?" என்று சந்தோஷக் குரலில் கேட்டார். 
"என் பேரைக் கூட உங்களுக்கு சரியா சொல்லத் தெரியலே. நான் அச்சுப்பிச்சு அப்புமணி " என்றான் அப்புமணி 
"ஆமாம் தத்துப்பித்து ... மறந்துட்டேன் ... நீ ... யாரோட ...?" என்று கேட்கும் போதே, "நான் பீச்சில் சுண்டல் தின்னுட்டு விளையாட்டிட்டு இருந்தேனா .. அப்போ இவங்க என்னைப்பிடிச்சிட்டு வந்துட்டாங்க"என்றான் அப்பு மணி. 
"ஏன்ய்யா.. சுண்டல் தின்றதும் பீச்சில் விளையாடறதும் அவ்வளவு பெரிய தப்பா?" என்று சிரித்துக்கொண்டே மற்ற இருவரையும் கேட்டார் ஆபீசர்.  
கான்ஸ்டபில்ஸ் ஏதோ சொல்ல வாயெடுக்க, "பையன் எனக்குத் தெரிஞ்ச பையன்தான். இங்கே இருக்கட்டும். குடிக்க ஏதாவது வாங்கிக் குடுங்க . பத்திரமா பார்த்துக்கோங்க . நான் மீட்டிங்கை முடிச்சிட்டு வந்துடறேன்" என்று சொல்லி விட்டு அலுவலகத்துக்குள் விரைய, 'பிள்ளையார்னு பிடிக்கப் போய் அது குரங்கா போச்சே" என்று தலையில் அடித்துக் கொண்ட கான்ஸ்டபில், "என்ன அப்புமணி ஸார்! என்ன சாப்பிடறீங்க ? கூல் ட்ரிங் அல்லது ஹாட் .. எது வேணும் ?" என்று கேட்க, "அந்த பயம் .... அது.. அது ...எப்பவும் இருக்கட்டும் " என்று சொல்லி கலகலவென்று சிரித்தான் அப்புமணி . 
---------------------------------------------------- தொடரும் ------------------------------------------------

Monday, February 08, 2016

அன்புக் குழந்தைகளே,

 எங்கள் தெருவில் கழிவு நீர்க் கால்வாய் அமைக்கும் பணியின் போது டெலிபோன் வயர் துண்டிக்கப் பட்டுவிட்டதால் நெட் செர்விஸ் இல்லை.  அது சரியானதும் உங்களுக்குப் பிடித்த அச்சுப்பிச்சு அப்புமணி வெளியாகும்.