Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 28, 2014

Scanning of inner - heart (Scan Report Number - 104 )

பேசுங்க .. மனம் விட்டுப் பேசுங்க ... மனசறிஞ்சு பேசுங்க !!

"ஏண்டீ, வசு, உன் பொண்ணுகிட்டே என்ன ஏதுன்னு விசாரிச்சியா ? " என்று ஈனஸ்வரத்தில் முனகியபடி கேட்டாள் காமாட்சி.
"கேட்டால் மட்டும் ... ? அப்படியே வாய் திறந்து என்ன எதுன்னு சொல்லிடப்  போறாளா என்ன ? " என்ற எதிர்க்கேள்வி பிறந்தது வசுமதி யிடமிருந்து .
"நீ சாதாரணமா சொல்லிட்டே. எனக்குதான் மனசு கிடந்து அடிச்சுக்குது. லீவு நாளில் அவ இங்கே காலையில் வந்தால், சாயங் காலமே அவளைத் தேடி வர்ற சேகர் மாப்பிள்ளை, இவ இங்கே வந்து மூணு நாள் ஆன பிறகு  கூட இன்னும் இங்கே வந்து எட்டிப் பார்க்கலைனா அதுக்கு என்னடி அர்த்தம் ? ஏதாவது பிரச்சனைன்னா நாம பேசித் தீர்க்க வேண்டாமா ? "
"அத்தே நீங்க சொல்றது எனக்குப் புரியுதுதான் . ஆனா நம்ம துடிப்பை அவ புரிஞ்சுக்க மாட்டா .  அவ மயிலு .."
"அதென்னடி மயிலு ? "
"உருவத்தில் பெரிசா இருக்கிற யானையை ஒரு சின்ன அங்குசத்தை வச்சு  ஆட்டிப் படைக்கலாம். எல்லாரையும் நடுங்க வைக்கிற சிங்கத்தை சர்க்கஸில் ஆட்டிப் படைக்கிறாங்க, ஒரு சாட்டையைக்காட்டி. பறவை களில் டான்சுக்குப் பேர் போனது மயில்தானே. ஆனால்  அதை அவ்வளவு சீக்கிரம் நமக்கு வேணுங்கிற நேரத்தில் ஆட வைக்க முடியாது. மேகத்தை கண்டால் ஆடும். இல்லாட்டி அதுக்கு மூட் இருக்கிறப்போ ஆடும்.உங்க பேத்தி கிட்டேயிருந்து அவளா விரும்பாமே நாமா எந்த விஷயத்தையும் அவ்வளவு சீக்கிரம் வாங்கிட முடியாது. அவ மயில் மாதிரி. அவளுக்கா தோணுச்சுனா, உப்பு சப்பில்லாத குப்பை மேட்டரைக் கூட நம்ம கிட்டே வண்டி வண்டியா சொல்லுவா. அவ கழுத்தில் கத்தி வச்சு கேட்டால்கூட அவ சொல்ல விரும்பாத எதையும் வெளியில் சொல்ல மாட்டா "
"அப்ப என்னதான் பண்றது . உங்களுக்குள்ளே ஏதாச்சும் தகராறான்னு மாப்பிள்ளை கிட்டே கேட்க முடியாது. அந்த வீட்டில் பெரியவங்கன்னு யாரும் இல்லே. இவளா எதையும் வாயைத் திறந்து சொல்ல மாட்டா . அப்படின்னா இதுக்கு என்னதான் முடிவு ? "
"அத்தே, நானே குழப்பத்தில் இருக்கிறேன். என்னைக் கேள்வி கேட்டு குழப்பறத விட உங்க பேத்தி கிட்டே கேட்டீங்கன்னா புண்ணியமாப் போகும். இப்போ என்னை ஆளை விடுங்க " என்றாள் வசுமதி.
ஞாயிற்றுக் கிழமை. வீடே டீவீ முன்னால் தவம் கிடந்தது, இன்னும் சற்று நேரத்தில் மகா பாரதம் ஆரம்பித்து விடுமென்று !
"சொக்கட்டான் ஆட்டத்தில் ஒரு குடும்பம் பிரிஞ்சுது. இதே சொக்கட்டான் ஆட்டம் ஒரு குடும்பத்தை  சேர்த்து வச்சிருக்கு .. எந்த விஷயத்திலும் நல்லது கெட்டது இருக்கு . எல்லாம் நாம் எடுத்துக்கிற விதத்தில்தான் இருக்கு  " என்று காமாட்சி சொல்லிக் கொண்டிருக்கும்போது " ஓ " சத்தம் எல்லோரிடமிருந்தும் வெளிப்பட்டது.
"என்னப்பா ? " என்றபடி மூடியிருந்த கண்களை விழித்துப் பார்த்தாள் காமாட்சி  
"நல்ல சமயத்தில் கரெண்ட் கட் ஆயிடுச்சு. இனிமே எப்போ வரும்னு தோணலியே " என்று அங்கலாய்த்தாள் வசுமதி.
" சரி கரெண்ட் வர்ற வரை போரடிக்காமே இருக்க அந்த சொக்கட்டான் கதையை சொல்லேன் பாட்டி " என்றாள்  கீதா.
" என்ன கதை ? "
"இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னியே, இதே சொக்கட்டான் ஆட்டம் ஒரு குடும்பத்தை  சேர்த்து வச்சிருக்குன்னு.. அந்தக் கதையை சொல்லேன் பாட்டி  "
" ஓ . அதுவா ? ..  அது வந்து ... ஒரு ராஜா ஒரு ராணி ஒரு மந்திரி. ராஜாவும் மந்திரியும் உசுருக்கு உசுரா பழகிற  நண்பன்க. ராஜா ரொம்ப நல்லவர். நேர்மை தவறாத பேர்வழி. எந்தவொரு சங்கதின்னாலும் அதை ராஜா வோட அந்தப்புரத்திலேயே போய் பேசற அளவுக்கு அந்த மந்திரிக்கு அந்த ராஜா அனுமதி குடுத்து வச்சிருந்தார். ஒருநா ஒரு முக்கியமான விஷயம் பத்திப் பேச மந்திரி ரொம்ப வேகமா அந்தப்புரத்துக்குள்ளே  போனார். அங்கே ராணி சிரிக்கிற சத்தம் வாசல் வரை கேட்டுச்சு. சரி ..  புருஷன் பொண்டாட்டி சந்தோசமா இருக்கிறப்போ அங்கே நிக்கிறதே தப்பு. குரல் கொடுத்துக் கூப்பிட்டு  நாம நந்தி மாதிரி குறுக்கே போய்  நிக்க வேண்டாம்னு நினைச்சுகிட்டு வந்த வழியே திரும்பிப் போயிட்டார். போறவரு, போகிற அவசரத்தில் வாசலில் கழட்டிப் போட்டிருந்த செருப்பை போட மறந்து வெறுங்காலோட நடந்து போறாரு. இந்த சமயம் நந்தவனத்திலிருந்த ராஜா அந்தப்புரத்துக்குள்ளே வாராரு. ராணியோட சிரிப்பு சத்தம்.. " என்ன இது விளையாட்டு ?  அரசர் வாற நேரமாச்சு. முதல்லே இங்கிருந்து போங்க " என்று சொல்லும் சத்தம் கேட்குது ராஜாவுக்கு. ஒரு நிமிஷம் நிக்கிறாரு. அந்த இடத்திலே மந்திரியோட செருப்பு .. ஒரு நொடியில் நிலைகுலைஞ்சு போன ராஜா வந்த சுவடு தெரியாமே அங்கிருந்து போயிட்டாரு. திடீர்னு காலில் கல் இடற, அப்பத்தான் தான் செருப்பைப் போட மறந்த விஷயம் நினைவுக்கு வந்த மந்திரி திரும்ப வந்து காலில் செருப்பை மாட்டிக் கிட்டு போறாரு. மந்திரி உள்ளே நுழைஞ்சதை  கவனிக்காத ராஜா, அவர் திரும்பிப் போறதை மட்டும் கவனிக்கிறாரு. மந்திரி வந்ததோ, திரும்பிப் போனதோ ராஜா வந்ததோ திரும்பிப் போனதோ, மந்திரி திரும்ப வந்த செருப்பை மாட்டிக் கிட்டு போனதோ ... இது எதுவுமே தெரிஞ்சுக்காமே, ராணி தன்னோட சினேகிதிகளோட விளையாடிட்டு இருக்கிறா .. "
"அப்புறம் என்னாச்சு ? " என்று கேட்டாள் வசுமதி கதையில் லயித்துப் போனவளாக.
" என்ன ஆகும் ? ராஜா மனசிலே ஒரு சந்தேகம் விழுந்துட்டுது. அது சரியா தப்பான்னு தெரியாமே தவிக்கிறாரு. இதைப் பத்தி ராணி கிட்டேயும் ஏதும்  பேசலே .  நண்பன் கிட்டேயும் எதுவும் பேசலே. மந்திரிகிட்டே முன்னே மாதிரி மனம் விட்டுப் பழகாமே அதே சமயம் அவரை பகைன்னு நினைக்காமலும் இருந்துட்டு வர்றாரு. ராணியோட முகம் பார்த்துப் பேசறதை நிறுத்திட்டாரு. ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் செய்ய வேண்டிய கடமையிலிருந்து மாறலே ராஜா போக்கு மாறிப் போயிருக்கு ன்னு ராணி மந்திரி ரெண்டு பேருக்குமே தெரியுது .. ஆனா அது எதுனாலே ன்னு தெரியலே..  நவக்கிரகம் ஒன்பதும் ஒரே இடத்திலே இருந்துகிட்டு ஒண்ணை  ஒண்ணு பார்க்காமே மூஞ்சியைத் திருப்பிகிட்டு நிக்குமே .. அந்த மாதிரி மூணு பேரும்  இருக்காங்க. ராணி மனசுலே என்ன நினைப்புன்னா, அன்னிக்கு ராஜா வர்ற நேரத்திலே நம்ம தோழிகளோட சிரித்துப் பேசி விளையாடியது  அவருக்குப் பிடிக்கலையோ என்னவோ ஒருநாளும் தோழிகளை படுக்கை அறைக்குள் விடாத நான் அன்னிக்கு அப்படி செஞ்சது ராஜாவுக்கு பிடிக்கலையோ என்னவோ. அப்படியே பிடிக்காமே இருந்தால் என்னைக் கூப்பிட்டு கண்டிச்சிருக்கலாமே . அது என்ன முகத்தைத் திருப்பி கிட்டு போகிற பழக்கம். தோழிகளோடு விளையாடியது ஒரு தப்பா ? நான் எந்தத் தப்பும்  பண்ணாத நான் எதற்காகப் போய் அவரிடம் பேசணும். அவராகப் பேசினால் பேசட்டும் . இல்லாட்டி எப்போதுதான் பேசறார்னு பார்க்கலாம். என் உடம்பிலும் ராஜ பரம்பரை ரத்தம் தானே ஓடுதுன்னு  ஒரு வீராப்பில் இருக்கிறா. இப்படியே பன்னிரண்டு வருஷம் ஓடிப் போச்சு..."
"பிறகு அது எப்பத்தான் சரியாச்சு ? எப்படி சரியாச்சு ? " என்று ஆவலாகக் கேட்டாள் கீதா 
"ஒருநா ராணியோட அப்பா அந்த அரண்மனைக்கு வாராரு. வந்து கொஞ்ச நாள் தங்குறாரு. வழக்கமா மகளைப் பார்க்க அப்பப்போ வருவார். உடனே திரும்பிப் போவார். இந்த தடவை வந்தவர் அங்கேயே தங்கிட்டார். தங்கின மொத நாள்லேயே அங்கே சூழ்நிலை சரியில்லை ன்னு புரிஞ்சு கிட்டார். வேலைக் காரங்க கிட்டே விசாரிச்சார். அவங்க " கிட்டத்தட்ட ஒரு பன்னிரண்டு வருசமா இப்படித்தான் இந்த அரண்மனை சூனியம் பிடிச்சுக் கிடக்கு"ன்னு பதில் சொன்னாங்க. பிறகு நடத்தின விசாரணையில்  ராஜா ராணி மந்திரியை சுத்தி எதோ கதை ஓடுதுனும் புரிஞ்சுகிட்டார். எடுத்த எடுப்பிலேயே உங்களுக்குள் என்ன பிரச்சினை ன்னு கேட்டுட முடியாதே.அதனாலே சொக்கட்டான் ஆட்டம் ஆடலாம்னு ராஜாவை அழைச்சார். ராஜா வந்து வெளையாட உக்காந்ததும் இந்த ஆட்டத்தை நாலு பேர் சேர்ந்து ஆடினா நல்லா இருக்கும்னு சொல்லி தன்னோட மகளைக் கூப்பிட்டார்.மந்திரி வீட்டுக்கு ஆளனுப்பி அவரையும்  வர சொன்னார்.விளையாட்டு தொடங்குச்சு. சொக்கட்டான் ஆடறவங்க ஏதாவது ஒரு கேள்வியைப் பாட்டாகப் பாடிகிட்டு காயை உருட்டுவாங்க. அந்தக் கேள்விக்கு பாட்டாலேயே பதில் சொல்வார் அடுத்தாப்லே காயை உருட்டும் ஆசாமி. அந்த மாதிரி, ராணியோட அப்பா காயைக்   கையில் உருட்டிகிட்டே, " வாழுங் குலக் கன்று வாழாதிருப்ப தென்ன  வருஷம் பன்னிரண்டு ? " என்று கேட்டு காயை ராஜா பக்கம் உருட்டினார். கேள்வியோட உள்ளர்த்தத்தைப் புரிஞ்சுகிட்ட ராஜா " அன்பு   மனையாளின் படுக்கையறையில் சங்கீத சிரிப்பொலி. அந்தப்புர வாசலில் ஆணின் காலணி. அறைக்குள் சிரிப்பொலி கேட்டேன் அடுத்து நடந்ததறியேன் " என்று சொல்லி, காயை மந்திரியின் பக்கம் உருட்டினார் அதுவரை நடந்த சம்பவங்களைக் கோர்த்துப் பார்த்த மந்திரி பதறிப் போய் " அன்பு நண்பன் மனைவியிடம் அன்னையென்ற நினைவு தவிர அடுத்த நினைப்பு வந்தறியேன். அறைக்குள் சிரிப்பொலி கேட்டு, அரசர் அங்கே இருப்பதாக  நினைத்து அங்கிருந்து நகர்ந்தேன். கணவன் மனைவி இருக்கும் இடத்தில் நிற்பதே தவறென்று நினைத்து அவசரமாக அங்கிருந்து போனேன். போகிற அவசரத்தில் காலணியை அணிய மறந்து போனேன் . மறதியாய் விட்ட காலணி மற்றவர் வாழ்க்கைக்கு எமனாய் மாறுமென்று கனவிலும் நினைத்ததில்லை. சிரிப்புக்குக் காரணத்தை சிரித்தவர்தான் சொல்லவேண்டும்  " என்று சொல்லி ராணியின் பக்கமா காயை உருட்டினார் மந்திரி. ராணியும் மகா புத்திசாலியாச்சே. ராஜாவின் பாராமுகத்தைத்தான் அவள் விரல் நுனியில் கணக்கில்  வச்சிருக்கிறா ளே. ரெண்டு பேர் சொன்னதையும் கூட்டிக் கழிச்சுப் பார்த்து ," பொம்பளை சிரிச்சாப் போச்சு .. பொது இடங்களில் பெண்கள் வாய் விட்டு சிரிக்கக் கூடாதுன்னு மற்றவங்க சொல்லக் கேட்டு இருக்கிறேன். என்னோட படுக்கை அறையில் என்னுடைய தோழிகளோடு சேர்ந்து நான்  சிரிச்ச சிரிப்பு இவ்வளவு பெரிய விவகாரம் ஆகும்னு நினைக்கவில்லை. அறைக்குள் இருந்த எனக்கு அரசர் வந்ததும் தெரியாது . மந்திரி வந்ததும் தெரியாது. அரசரின் கோபத்துக்கான காரணமும் தெரியாது. ஒரு ஆண்மகன் கோபத்தில் இருந்தால் மனைவியானவள் அதற்க்கான காரணத்தைக் கேட்டறிய வேண்டும். அதை விட்டு விட்டு உனக்கு நான் கொஞ்சமும் குறைந்தவள் இல்லை. நான் இறங்கி வரமாட்டேன் . வேண்டுமானால் நீ இறங்கி வா என்ற மனநிலையில் மமதையில் இருந்தது என்னோட தப்பு" ன்னு சொல்லி பகிரங்கமா மன்னிப்புக் கேட்டா ராணி. ஒரு வழியா அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி பழையபடி சந்தோசம் திரும்புச்சு. இவ்வளவு நாளும் சூனியம் சூழ்ந்திருந்ததற்கு என்ன காரணம் ? மனசில் நெருடல்னு ஒண்ணு வந்ததுமே அதைப் பத்தி மனம் விட்டுக் கேட்காமே  பேசாமே இருந்ததுதானே ... சில பிரச்சனை களை பேசித் தீர்க்கலாம். சில பிரச்சனைகள் யாரும் எதுவும் பேசாமல் இருந்தாலே தீர்ந்து விடும். பேச வேண்டிய நேரத்தில் அமைதியா இருக்கிறதும் தப்பு. அமைதியா இருக்க வேண்டிய நேரத்தில் வாய்க்கு வந்தபடி பேசறதும் தப்பு. இடம் பொருள் நேரமறிந்து பேசுன்னு அனுபவப் பட்டவங்க சொல்லியிருக்கிறாங்க  ..." என்று காமாட்சி சொல்லிக் கொண்டிருக்கும்போது, " நீ ஒரு நாளும் இப்படியெல்லாம் பேசினதே கிடையாதே பாட்டி . என்னவொரு கோர்வையா கதை சொல்றே! இந்தத் திறமையை இத்தனை நாளும் எங்கே ஒளிச்சு வச்சிருந்தே ? " என்று வியப்புடன் கேட்டாள் கீதா 
" என்னோட மாமியாரைப் பத்தி என்ன நினைச்சே ? அவங்க அந்தக் காலத்து பத்தாங் கிளாஸ்  தெரியுமா ? " என்று வசுமதி சொல்ல, " அதை அப்புறமா நேரங் கிடைக்கிறப்போ வந்து கேட்டுக்கிறேன். இப்போ நான் கிளம்பறேன்  என் வீட்டுக்கு " என்றாள் கீதா 
"என்னடி இது திடு திப்புன்னு ? "
"சேகர்கிட்டே பேசவேண்டிய விஷயம் நிறைய இருக்கு .. நான் கிளம்பறேன்  " என்று சொல்லிக் கிளம்ப ஆரம்பித்த கீதாவை மன நிறைவுடன் பார்த்தனர் காமாட்சியும் வசுமதியும் .

Wednesday, February 26, 2014

DEAR VIEWERS,


YOU MAY SOLVE THE ON-LINE PUZZLES IN 
" ARUNASSHANMUGAM.BLOGGER"
FROM TO-DAY.

Friday, February 21, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 103 )

                                      கல்யாண சாப்பாடு !

புயல் வேகத்தில் கடந்து செல்லும் வாகனங்களோ, இடித்துத் தள்ளாத குறையாக தன்னைக் கடந்து செல்லும் மனிதர்களோ அல்லது வியாபாரிகளின் இரைச்சலோ, எதுவுமே மைதிலியின் மைண்டில் ரெகார்ட் ஆகவில்லை. கல்யாண மண்டபத்தைக் கண்டுபிடித்து தலையைக் காட்டிவிட்டு ஆபீசுக்கு ஓடணும். பர்சேஸ் டெண்டரை கம்ப்ளீட் பண்ணி மூணு மணிக்கு முன்னாடி சூப்பிரண்ட் டேபிளுக்கு அனுப்பாட்டா, அந்த மனுஷன் நாய் மாதிரி மேலே விழுந்து பிடுங்குவான் என்ற எண்ணம் மட்டுமே அவளை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. ஒருநாளும் காலை நேரத்தில் வராத அப்பா, இன்றைக்கென்று காலையில் வரவும் என்னவோ ஏதோவென்று பதறிப் போய் விட்டாள் மைதிலி.
"அடுத்த தெருவில் என் பால்ய சிநேகிதன் வீடு கிரஹப் பிரவேசம் பண்றான். அதான் உன்னையும் எட்டிப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். நீ சீக்கிரமாவே கிளம்பறாப்லே தெரியுது " என்றார் அப்பா.
" எங்க ஆபீசுக்கு வழக்கமா ஸ்டேசனேரி ஐட்டம் சப்ளை பண்றவர் பொண்ணுக்கு கல்யாணம், குரோம்பேட்டையில். எங்கள் செக்ஸனில் உள்ள நாலு பேரை மட்டும் பத்திரிக்கை வச்சு கூப்பிட்டு இருக்கிறார். தவிர்க்க முடியாத நபர் என்கிறதாலே எங்க மூணு பேரை மட்டும் போகச் சொன்னார் சூப்பிரண்ட். குரோம்பேட்டை எனக்கு பழக்கமில்லாத ஏரியா . இன்றைக்கு முடிக்க வேண்டிய அவசர வேலை ஒண்ணும் இருக்கு. அதான் என்ன செய்றதுன்னு புரியாமே குழப்பத்தில் இருக்கிறேன். பத்திரிக்கை குடுத்தவரைத் தவிர அவர் வீட்டில் யாரையுமே எங்களுக்குத் தெரியாது. வரலேன்னு சொன்னாலும் லாரன்ஸும் லலிதாவும் ' நீங்க வந்தே ஆகணும்'னு அடம்பிடிக்கிறாங்க. அதான் கல்யாணத்துக்குக் கிளம்பிட்டு இருக்கிறேன் " என்றாள் மைதிலி 
" நீ கிளம்பும்மா. நானும் கிளம்பறேன் " என்று அப்பா கிளம்பியபோது, " அப்பா, இருந்து ஒரு வாய் காப்பி குடிச்சுட்டு போங்கோ"ன்னு சொல்லக் கூட நேரமில்லாமல் போயிட்டுதே " என்று தன்னையே நொந்தபடி கல்யாண மண்டப பெயர் பலகையைத் தேடிக் கண்டு பிடித்த  மைதிலி, "அப்பாடா ஒரு வழியாக வந்து சேர்ந்தாச்சு " என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் 
"கல்யாண மண்டப வாசலில் நான் நிற்பேன் . உங்களில் யார் முதலில் வந்தாலும் அங்கேயே நில்லுங்க " என்று லலிதா சொன்னது நினைவு வந்தது  
ஊஹூம் .. ரெண்டு பேரையும் காணலியே .. சொன்னா சொன்ன நேரத்துக்குள் ஓடி வர்றவங்களாச்சே என்று நினைத்து வராதவர்களுக்கா க கவலைப் பட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்த  மைதிலியை  " மேடம் " என்ற குரல், திரும்பிப் பார்க்க வைத்தது.
" வாங்க ... உள்ளே வாங்க .. முகூர்த்த நேரம் ஆரம்பிக்கப் போகுது . நீங்க போய் அதுக்கு முன்னாலே சாப்பிட்டுட்டு வந்துடுங்க " என்றார் ஒருவர் .
"என்னோட பிரண்ட்ஸ் வருவாங்க .. அதான் வெயிட் பண்றேன் "
"அவங்க வரட்டும் ... நீங்க போய்  முதலில் சாப்பிடுங்க " என்று அவர் சொல்ல, அவருடன் நின்று கொண்டிருந்த ஒரு சிறுமி " வாங்க ஆன்ட்டி " என்று மைதிலியின் கையைப் பிடித்து இழுத்து அழைத்தபோது அதை மறுக்க மைதிலியால் முடியவில்லை.
கல்யாணத்துக்கு வருகிறவர்களை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்று அந்த வீட்டுப் பெரியவர்கள் சொல்லியிருந்தார்களோ என்னவோ, அந்த சிறுமி, அங்கிருந்த எல்லோரையும் ஓடி ஓடி உபசரித்தாள். சாப்பாடு தேவாமிர்தம் என்று நாக்கு சொன்னாலும் அதை முழுதும் அனுபவிக்க முடியாதபடி வராத பிரண்ட்ஸ்ம், டெண்டரும் தடை செய்து கொண்டிருந் தது.
சாப்பிட்டு முடித்து கை அலம்பிக் கொண்டு வந்தவளை "மேடம், திருப்தியா சாப்பிட்டீங்களா ? " என்ற குரல் நிறுத்தியது.
இது லாரன்ஸ் குரலாச்சே  என்று நினைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தாள்.
"மேடம் , மேலே பாருங்க "
நிமிர்ந்து பார்த்த மைதிலியைப் பார்த்து குறும்பாக சிரித்தார்கள் லலிதாவும் உடனிருந்த லாரன்ஸும்.
"ரைட் சைடு போனா  ஸ்டேர் கேஸ் வரும் . ஏறி மாடிக்கு வாங்க "
"வாசலில் வெயிட் பண்றேன்னு சொல்லிட்டு , மாடி மேலே நின்னுகிட்டு கமென்ட் குடுக்கறீங்களா " என்றபடி மாடிக்கு விரைந்தாள் மைதிலி. 
யாருமில்லாத இடத்துக்கு அவளை தனியாக அழைத்துச்சென்ற இருவரும்  " நாம அட்டெண்ட் பண்ண வேண்டிய கல்யாணம் மாடியிலே இருக்கு. கீழே நடப்பது வேறு யார் வீட்டுக் கல்யாணமோ " என்றனர்.
" அய்யய்யோ . நான் அந்த வீட்டில் சாப்பிட்டேனே " என்றாள் மைதிலி பதறிய குரலில்.  
"நீங்க மட்டுமல்ல . நாங்களும் அங்கேதான் சாப்பிட்டோம். உங்களுக்காக வாசலில் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். ஒருவர் மாற்றி ஒருவர் வந்து "சாப்பிட வாங்க" ன்னு  கட்டாயப் படுத்தினாங்க. சாப்பிட்டு முடிச்ச பிறகு தான் தெரிஞ்சுது அது ராஜு ஸார் வீட்டு விஷேசமில்லேன்னு. ஒரே இடத்தில் ரெண்டு கல்யாண மண்டபம் இருக்கும் . அதில் வேறே வேறே வீட்டுக் கல்யாணம் நடக்கும்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கலே. பத்திரிக்கையிலிருந்த அட்ரஸ் நினைவில் இருந்தது . கல்யாண மண்டபத்தை பார்த்ததும் உள்ளே நுழைஞ்சிட்டோம்   " என்று விவரித்தார் லாரன்ஸ் 
"அப்படின்னா என்னையாவது முதலிலேயே வார்ன் பண்ணி யிருக்க லாமே ?"
"செஞ்சிருக்கலாம்தான் . முதல் காரணம், இந்த வீட்டு சாப்பாடு ரொம்ப சுமார்னு வாசனையே சொல்லுது. கீழே சூப்பர் சாப்பாடு . ரெண்டாவது காரணம், இடம் மாறி நாங்க சாப்பிட்ட விஷயத்தை சொல்லி  சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நீங்க கிண்டலடிப்பீங்க.இனிமே அது முடியாது பாருங்க " என்று சொல்லிச் சிரித்தார் லாரன்ஸ் 
"அப்படின்னா அந்த வீட்டு பொண்ணு மாப்பிள்ளைக்கும் ஏதாவது கிப்ட் கொடுத்துட்டுப் போயிடலாம் "
" நாங்களும் நினைச்சோம் . அதிலேயும் ஒரு சிக்கல் "
"என்ன சிக்கல்? பொண்ணு வீட்டுக்காரன் நம்மளை, மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிஞ்சவங்கன்னு நினைச்சுப்பாங்க. மாப்பிள்ளை வீட்டுக் காரன்  நாம பொண்ணு வீட்டுக்கு வேண்டியவங்கன்னு நினைச்சுப்பாங்க . அதனாலே மொய் குடுத்துட்டுப் போயிடலாம். அது ஒரு பெரிய விஷயமே இல்லை. இதே கல்யாண வீட்டில் ஏதாவது ஒரு விலையுயர்ந்த பொருள் காணாமே போய் கல்யாணத்துக்கு வந்தவங்க யார் யார்னு வீடியோவில்  செக் பண்ண ஆரம்பிச்சா நம்ம மூணு பேரையும் யாருக்கும் தெரியாதுன்னு ரெண்டு வீட்டுக்காரங்களும் சொல்வாங்க. இடம் மாறி சாப்பிட்ட அவமானம் போதாதுன்னு இன்னொரு அவமானம் தேவையா? மானசீகமா அவங்க கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு கிப்டை ராஜு ஸாரிடம் சேர்த்துட்டு போயிடலாம் " என்று இருவரும் சேர்ந்து சொன்னபோது மைதிலியால் மறுக்க முடியவில்லை . எல்லாக் களோபரமும் முடிந்து ஆபீஸ் வந்து சேர்ந்தபோது, அவர்கள் எதிரில் தென்பட்டவர்கள் எல்லாம் " கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தாச்சா  ? கல்யாண சாப்பாடெல்லாம் எப்படி ? " என்று கேசுவலாக விசாரித்தாலும் கூட  மூவரின் மனசுக்குள்ளும் ஒரு " அரிப்பு " இருக்கத் தான் செய்தது.

Friday, February 14, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 0102 )

                          அட .. இதுதாங்க உலகம் !!
" ராது, சொன்னதெல்லாம் ஞாபகத்தில் இருக்கட்டும் "
" ஐயோ அம்மா , ஆரம்பிச்சிட்டியா உன் சுப்ரபாதத்தை. அம்மா, தெரியாமத்தான் கேட்கிறேன். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இதை சொல்லுவே ? கல்யாணத்தன்னிக்கு வரை சொல்லுவியா , இல்லே என் மாமியார் வீட்டிலும் வந்து சொல்லுவியா? கேட்டுக் கேட்டு  எனக்கு போரடிச்சுப் போச்சும்மா "
" ஒரு தடவை சொன்னதுமே உன் மண்டையிலே ஏறுவதா இருந்தா நான் ஏன் திரும்ப திரும்ப சொல்லப் போறேன். விடிஞ்சதிலிருந்து நீ வீட்டை விட்டுக் கிளம்பிப் போகிறவரை " ராது நோட்ஸ் எழுதினியே. அதை எடுத்து வச்சியா ? பர்ஸை மறக்காமே எடுத்து வச்சுக்கோ. டிபன் பாக்ஸ் மேஜை மேலே இருக்கு"ன்னு நான் கரடியாக் கத்திட்டு இருந்தாலும். "ம் .ம் "ன்னு தலையை ஆட்டிட்டு, பஸ் ஸ்டாப் வரை போயிட்டு, ' அதை மறந்திட்டேன்' ,  'இதை மறந்திட்டேன்'னு ஓடி வர்ற கேஸ் தானே நீ. அதான் மழைக்கால வறட்டுத்  தவளை மாதிரி சொன்னதையே சொல்லிட்டு இருக்கிறேன். திரும்பவும் சொல்றேன், மாமியார் மாமனார்க்கு மரியாதை குடுக்கணும்தான். அதுக்காக அடிமை சாசனம் எழுதிக் குடுத்து அடங்கிப் போகணும்கிற அவசியம் எதுவும் கிடையாது. நீ ஒண்ணும் அங்கே போய் சும்மா உட்கார்ந்து சோறு சாப்பிடப் போகலே. நீயும் ஆயிரம் ஆயிரமா சம்பாதிக்கிறே. மாப் பிள்ளைக்கு உன்னைவிட சம்பளம் குறைச்சல்தான். இருந்தாலும் லோக்கல் மாப்பிள்ளையா இருக்கிற ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் பேசி முடிவு பண்ணி இருக்கோம். நீ நினைச்சப்போ இங்கே வந்து போக வசதியா இருக்கணும். உன்னாலே வீட்டில் சாப்பாடு தயார் பண்ண முடியாட்டா இங்கே இருந்து கொடுத்து அனுப்பணும்னு எல்லாத்தையும் யோசிச்சுதான் இந்த வரனை பிக்ஸ் பண்ணியிருக்கோம். நாங்க எப்பவும் உன் பக்கத்திலேயே இருக்கோம். அதனாலே நீ யாருக்கும் பயப்பட வேண்டாம். சம்பளப் பணம் மொத்தத்தையும் அங்கே தாரை வார்த்திட வேண்டாம். உனக்கு ஆகிற செலவுக்குன்னு ஒரு கணக்குப் போட்டு அதை மட்டும் கொடு. உன்னைக் கண்டதும், சம்பளமில்லாத ஒரு வேலைக்காரி கிடைச்சிட்டானு நினைச்சு உன் மாமியார்க்காரி ' அந்த வேலையை முடிச்சிட்டுப் போ ', ' இந்த வேலையை முடிச்சிட்டுப் போ'ன்னு ஏதாவது வேலை ஏவிகிட்டே இருந்தான்னு வச்சுக்கோ, ' ஒண்ணு நான் ஆபீஸ் வேலைக்குப் போறேன் . இல்லாட்டா வீட்டிலிருந்து வீட்டு வேலையைக் கவனிக்கிறேன். என்னாலே ஒரே நேரத்தில் ரெண்டு குதிரை மேலே சவாரி பண்ண முடியாது'ன்னு  கட் அண்ட் ரைட்டா சொல்லிடு. முதலிலேயே யார் யாரை எங்கே வைக்கணுமோ அங்கே வைக்கத் தெரிஞ்சுக்கணும் . தலை மேலே ஏற விட்டுட்டு அப்புறமா அல்லல் படக் கூடாது  " என்று மூச்சு விடாமல் பேசிக் கொண்டிருந்தாள் தேவகி  
" ஐயோ, இந்த வீட்டில் யாருமே இல்லையா ? இந்த அம்மாகிட்டே இருந்து என்னை யாராவது  காப்பாத்துங்களேன் " என்று பொய் பயத்தில் அலறினாள் ராதா.
" உனக்கு நான் எது செய்தாலும் சொன்னாலும் கிண்டலாத்தான் தெரியும். எந்த அளவுக்கு யோசிச்சு யோசிச்சு நான் சொல்லியிருக்கிறேனு போகப் போகப் புரிஞ்சுக்குவே "
" இப்போ எனக்கு ஆபீஸுக்கு நேரமாயிட்டு . ஆளை விடு ! " என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓடி மறைந்தாள்   ராதா.
அதுவரை அங்கே நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த வடிவாம்பாள் " நல்லா இருக்குடி , நீ பொண்ணுக்குப் புத்தி சொல்ற லட்சணம். உன்னைக் கட்டிக் கொடுத்து அனுப்பறப்போ " மாமனார் மாமியார்க்கு அடங்கிப் போகணும் . இனிமே அதுதான் உன் வீடு . எந்த சூழ்நிலையும் அந்த வீட்டை விட்டு கட்டின புருஷன் இல்லாமே வெளியேறக் கூடாது"ன்னு புத்தி சொல்லி அனுப்பினேன். உன் பொண்ணுக்கு நீ இந்த மாதிரி வேப்பிலை அடிக்கிறே  ? " என்று ஈனஸ்வரத்தில் முணங்கியபடி கேட்டாள் .
" அம்மா என்னோட காலம் வேறே . இப்போ உள்ள காலம் வேறே. நான் அதிகம் படிக்கலே. வேலை வெட்டிக்குப் போகலே. அதனால் வயிற்றுக் காகவாவது நான் அடங்கியே போக வேண்டிய சூழ்நிலை. ராது அப்படி யில்லையே  "
" படிச்சா பக்குவம் வரணும்; அடக்கி ஆள்கிற அகங்காரம் வரக்கூடாது " என்று மகளுக்குப் புத்தி சொன்னாள் வடிவாம்பாள் .
" அம்மா. இந்தா ... நீ சாப்பிட்டுட்டு, மாத்திரையைப் போட்டுட்டு பேசாமே போய்த் தூங்கு " என்று தேவகி சொல்ல அதன் பிறகு வடிவாம்பாள் சாப்பிட மட்டுமே வாயைத் திறந்தாள்.
" ஸார் " என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்த தேவகி " ஓ, கல்யாணத் தரகரா ? வாங்க .. அடுத்த ஞாயிற்றுக் கிழமை ராதுவோட கல்யாணம் . நீங்க ஏற்பாடு பண்ணின வரன் . மறக்காமே கல்யாணத்துக்கு  நீங்க வந்திடணும். பத்திரிக்கை கொடுத்தார்தானே ? "  என்று விசாரித்தாள் தேவகி.
"அதிலெல்லாம் எந்தக் குறையும் இல்லே . வந்து சேர்ந்தது . நான் வந்த விஷயமே வேறே. பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் பையனுக்கும் ஒரு வரன் பார்க்கணும்னு  ஸார் சொல்லியிருந்தார். உங்க எதிர்பார்ப்பு என்னன்னு தெளிவா சொல்லிடீங்கன்னா அதுக்குத் தோதுவா  வரன் கொண்டு வருவேன் "
"எங்களுக்குப் பெரிசா எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. பொண்ணு படிச்சவளா  வேலை பார்க்கிறவளா இருக்கணும். ஆனா, படிச்சிருக்கி றோம் வேலை பார்க்கிறோம்கிற திமிர்த்தனம் இல்லாமே இருக்கணும். எங்கள் வீட்டில் எங்கள் பேச்சுக்குக் கட்டுப் பட்டவளா இருக்கணும். அவ என்னதான் படிச்சிருந்தாலும் எவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் அடிப்படையில் தானொரு  பொம்பளைதான்  , இன்னொரு வீட்டுக்கு வாழ வந்திருக்கிறோம்கிற நினைப்பு என்னிக்கும் இருக்கிற வளா இருக்கணும். இன்னிக்கும் எங்கள் பையன் எங்கள் பேச்சுக்கு அடங்கி கட்டுப்பட்டுதான் இருக்கிறான். வரப் போற பொண்ணும் அப்படித் தான் இருக்கணும். உள்ளூர்ப் பொண்ணு வேண்டவே வேண்டாம். நினைச்சா உடனே பொறந்த வீட்டுக்குக் கிளம்பிப் போயிடுவா. அதனால் வெளியூர்,அதுவும்  கொஞ்சம் தொலைவா இருந்தாலும் பரவாயில்லை. சம்பளத்தை அப்படியே இங்கே கொண்டு வந்து தரணும். தன்னோட கையில் வச்சுகிட்டு நாட்டாமை பண்ற வேலையெல்லாம் எங்களுக்கு சரிப்பட்டு வராது. 100 பவுனுக்கு குறையாமே பார்த்துக்கோங்கோ. என்ன ... கொண்டு வந்தால், நாங்களா வாங்கி கழுத்தில் போட்டுக்கப் போறோம். அவ நகை .. அவ கழுத்து, அவ  கை .. அதைப் பத்தி எங்களுக்குக் கவலையில்லே. ஆனால் வரதட்சிணை பவுனுக்கு சரிசமமா இருக்கணும் . அதை மறந்துடாதீங்கோ. இப்போதைக்கு எங்கள் எதிர்பார்ப்பு இதுதான். வேறே ஏதாவது நினைவுக்கு   வந்தால் சொல்லி அனுப்பறேன் " என்றாள் தேவகி.
" சரிம்மா .. அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன் " என்ற கல்யாணத் தரகர், " இதே பொம்பளை தன்னோட பொண்ணுக்கு வரன் பார்க்கிறப்போ எப்படி எப்படியெல்லாம் பேசுச்சு. பையனுக்கு வரன்னு சொன்னதும் என்னமா அடுக்கிக்கிட்டு போகுது .. ஹூம் ... ஊரான் பொண்ணுன்னா அவ்வளவு இளக்காரம் .  இதுதான் உலகம் ! " என்று மனதுக்குள் அசை போட்டபடி அங்கிருந்து கிளம்பினார். 

Friday, February 07, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 101 )

               என்னை நினைச்சு நானும்  சிரிச்சேன் !!
"அதோ ஓடறார் ! பிடியுங்கோ ! விட்டுடாதீங்கோ ! " என்று சொல்லியபடி கடலளவு கும்பலாக நாங்கள்  துரத்திக் கொண்டு வர, எங்கள் பிடியில் அகப்படாமல் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார் "அவர் ".  மற்றவங்க மாதிரி என்னால் வேகமாக ஓட முடியாததால், கூட்டத்தை விட்டு  விலகி வெளியில் வந்து ரோட்டோரம் நின்றேன்.
ரோட்டோரமா நின்னு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  ஒரு சிலர்  வந்து, என்னிடம் " யாரையோ துரத்துறீங்களே . என்ன விஷயம்?"னு கேக்கிறாங்க. ஓ . இவங்க யாருன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு. " என் வீட்டு மாடியிலே இடியே விழுந்தாக் கூட அதைப் போய்ப் பார்க்க நேரமில்லை "ன்னு சொல்ற கூட்டம் இவங்க . நாங்க  அப்படியில்லே ன்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். சொல்ல மாட்டாங்க. சமுதாய அக்கறைன்னு ஒண்ணு இருந்திருந்தா இந்த சந்திப்புக்கு வராமல் இருந்திருப்பாங்களா என்ன ? இவங்க என்ன மாதிரி ஆளுங்க தெரியுமா ? எவனாவது ஏதாவது ஒரு விஷயத்துக்காக உயிரைக் குடுத்துப் போராடி, அது மத்தவங்களுக்குக் கிடைக்கும்படி செய்தாங்கன்னா, அதன் பலனை மட்டும் நேரடியாக அனுபவிக்கிறவங்க. நோகாமல் நோன்பு நோற்கிற ஜென்மங்கள். அவங்களே   "என்ன ? ஏது ? " ன்னு  திரும்பவும்   என்னை விசாரிக்கிறதாலே, நான் விஷயத்தை டீடைலா சொல்ல போறேன் . விஷயம் என்னனு  தெரிஞ்சுக்க பிரியப் படறவா மட்டும் இருங்கோ. நான்  பர்தரா கண்டினியூ பண்ணுவேன்.
யார் எக்கேடு கெட்டால் எனக்கென்னனு  நினைக்கிறவா இந்த இடத்தை விட்டு அந்தாண்டை போய், உருப்படியா வேலை வெட்டி ஏதாவது இருந்தா பாருங்கோ !. எனக்கும் அப்பப்போ சமுதாய சிந்தனை வரும் .ஆனா அது எப்போ எப்படி வரும்னு எனக்குத் தெரியாது.  அது இப்போ வந்திருக்குன்னு சொல்லி இங்கே நிற்க்கிறேளே....ஓடறது யார் ? ஏன் ஓடறார் ? அதைத் தெரிஞ்சுக்காட்டி என் தலையே ரெண்டா பொளந்துடும்னு  சொல்லிண்டு  இங்கேயே நிற்க்கிறேள் பாருங்கோ,
உங்களுக்காகத் தான் நான் இதை சொல்றேன். ஒரு காலத்தில்.. ஒரு காலத்திலென்ன வேண்டிக் கிடக்கு ? இப்போக் கூட  சந்திரனையும் செவ்வாயையும் "சாமி சாமி"ன்னு சொல்லி  நாம வணங்கிண்டு வர்றோம் .ஆனா அந்த ரெண்டையும் எட்டிப் பார்த்துட்டு வந்துட்டு மனுஷா மூளை. இன்னிக்குக் கடவுளையே கீழே கொண்டாந் துட்டாளே. மனுஷன் இருக்கிறானே மனுஷன்  இந்த லோகத்தில் அவனை அடிக்க ஆள் கிடையாது ? அவனுக்குத் தெரியாததுன்னு ஒண்ணுமே இல்லை,  பஞ்ச பூதத்தை அடக்கி ஆள்வதைத் தவிர. அதையும் கத்துன்டான்னா அப்புறம் லோகத்துக்கு கடவுள்னு ஒருத்தர் வேண்டவே வேண்டாம் . நம்புனா நம்புங்கோ, நம்பாட்டி இடத்தைக் காலி பண்ணுங்கோ. அதாலே எனக்கு தம்பிடி கூட நஷ்டம் கிடையாது. மனுஷனாலே முடியாதது எதுவும் இல்லே , ம் ... என்ன சொல்ல வந்தேன் ... பேச வந்த  டாபிக்கை விட்டுட்டு   அந்தாண்டை இந்தாண்டை திரும்பிப் பார்த்தாப் போச்சு. என்ன சொல்ல வந்தேன் என்கிறதே மறந்துடுது. டாக்டர்கிட்டே போய்க் காட்டலாம்னா அங்கே நம்ம சொத்தையே எழுதி வாங்கிடுவாங்களே.
இந்தக் கும்பலில்  நானும் ஒரு ஆளா நிற்க்கிறேன்னு சொன்னால், அதுக்குக் காரணம் இந்த ஆஸ்பத்திரி பிரச்சினைதாங்க. போன மாசத்திலே ஒரு நாள்  ... ம் ..... அன்னிக்கு மறுநாள் வெள்ளிக் கிழமைங்கிறதாலே ஆத்தை அலம்பி விட்டுடுண்டுருந்தேன். போன் அடிச்சுது.  சனியன் ... அதுக்குத் தான் நேரம் காலமே கிடையாதே. பண்ணிண்டு இருக்கிற கைக்காரியத்தை அப்படியே விட்டுட்டு ஓடிப் போய் எடுப்போம். இன்ன பேங்கிலிருந்து  பேசறோம். லோன் வேணுமா ? ஏதாவது இன்வெஸ்ட் பண்ற ஐடியா இருக்கானு கேட்டு நம்ம பொழுதை வீணடிப்பா. அதுக்காக அடிக்கிற போனை எடுக்காமே விட்டுட முடியாதே. போனை எடுக்க ஓடினேன் பாருங்கோ . ஈரத் தரை வழுக்கிடுச்சு. காலில் லேசா சுளுக்கு. எண்ணை தேச்சுண்டு படுத்திண்டுருந்தேன். வேலைக்குப் போன குழந்தைங்க ராத்திரி பத்து மணிக்கு மேலே  வீடு திரும்பி வந்தாங்க . என்  காலைப் பார்த்துட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சா . வழுக்கி விழுந்த கதையை சொன்னேன். டாக்டர் கிட்டே போகலாம்னு சொன்னா. ரெண்டு வாட்டி எண்ணை தேய்ச்சு நீவி விட்டு வெந்நீர் ஒத்தடம் கொடுத்தா சரியாப் போயிடும்னு சொன்னேன். அதைக் காதிலேயே வாங்கிக்காமே மறுநாள் என்னை டாக்டராண்டே அழைச்சிட்டுப் போனான் என்னோட மூத்த பிள்ளை. அங்கே என் காலைப் பத்தி என்குயரி பண்றதை விட, என்னோட வந்த பிள்ளை " எங்கே வேலை பார்க்கிறான்? என்ன வருமானம் ?" ன்னு கேட்டு எழுதறதுலேதான் கவனமா இருந்தா. ஒரு ஊசி போட்டு ரெண்டு மாத்திரையப் போட்டா நான் எழும்பி  ஓடவே ஆரம்பிச்சிருப்பேன். ஆனா , ரெண்டு நர்ஸ்ங்க  என்னைக் கைத் தாங்கலா அழைச்சிட்டுப் போய் ஒரு ஹாலில் உள்ள பெட்டில் படுக்க வச்சாங்க. பீபி செக் பண்ணினா. ஸ்கேன் எடுத்தா . ஏன்னு கேட்டா ' உங்களுக்கே தெரியாமே உங்களுக்கு பீபி இருக்கலாம் . அதான் தலை சுற்றி  கீழே விழுந்துருப்பீங்க. எதுக்கும் அப்சர்வேசனில் இருக்கட்டும்னு அட்மிஷன் போட்டோம் ' ன்னு சொன்னா.  எப்போ நான் ஆத்துக்குப் போகலாம்னு கேட்டதும், இப்போ " ஐ சீ யூ வில் இருக்கீங்க. நாளைக்கு ஜெனரல் வார்டுக்கு அனுப்பிடுவோம்ன்னு சொன்னா". ஒரு ஹாலில் நாலு கட்டிலைப் போட்டு ஒவ்வொரு பெட்டுக்கும் நடுவாலே ஒரு ஊதாக் கலர் போர்வையைத் தொங்க விட்டு  ஏசியைப் போட்டுட்டா அது ஐ சீ யூவாம். 
அட்மிட் ஆகி அன்னிக்குப் பொழுது ஓடிப் போச்சு. மறு நாளாவது ஆத்துக்கு அனுப்புவானு பார்த்தால், அதுவும் இல்லே. நாளைக் காலையில் டாக்டர் வந்து பார்த்துட்டு சொல்வார். அப்புறமா அனுப்பு வோம்னு பதில் சொன்னா . தலை விதியேனு மறுநாளும் தங்க வேண்டி யதாப் போச்சு. மறுநாள் ஞாயிற்று கிழமை. காலையில் வர்றேன்னு சொன்ன டாக்டர் வரவே இல்லை . மந்திரிங்க, விஐபி ங்க வரும்போது இதோ வரார் .. அதோ வரார்னு சொல்லுவா பாருங்க . அந்த மாதிரி சொல்லிண்டே இருந்தா ஒரு குள்ள நர்ஸ் .. கத்திரிக்காய்க்கு கை கால் முளைச்ச மாதிரி ஒரு உருவம். அவ கண்ணைப் பார்த்தாலே எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிடுது. இருந்தாலும் தைரியத்தை வரவழைச்சிட்டு , " ஏம்மா, நேத்து டூட்டி நேரத்திலே  வராத டாக்டர், இன்னிக்கு லீவு நாளில் வருவாரா? ஒருநாள் ரூம் வாடகைக்காக எங்களை இங்கே உட்கார வச்ச எங்களோட ஒரு நாள் பொழுதை வீணடிக்காதே. இன்னிக்கும் சேர்த்து எவ்வளவு கட்டணும்னு சொல்லு . தூக்கி எறிஞ்சிட்டு போய்க்கிட்டே இருப்போம்"ன்னு நான் சொன்னதும், இல்லாத நெத்திக் கண்ணாலே என்னைச் சுட்டு  பொசுக்கிட்டு போனவ, அஞ்சு நிமிசத்திலே திரும்பி வந்து இந்த பில்லை செட்டில் பண்ணிட்டுப் போங்க " என்றாள். பில்லைப் பார்த்து எனக்கு தலையே சுத்துச்சு . இருந்தாலும் வெளியே காட்டிக்கலே. இன்னும் பீபி நார்மலுக்கு வரலே . திரும்பவும் அட்மிட் ஆகிடுங்கோன்னு சொல்லுவாளோங்கிற பயத்தில் வாயை மூடிட்டு வந்தேன் . ஒண்ணுமே இல்லாத ஒரு விஷயத்துக்கு இப்படி அநியாயமாப் பணத்தை பறிச்சுட்டாளே என்கிற வயிற்தெரிச்சல்  இருக்கத்தான் செஞ்சுது. அதான், கடவுளோட ஒரு மீட்டிங்ன்னு சொன்னதும் நானும் வந்து கலந்துண்டேன்.
என்ன மீட்டிங்க்ன்னு கேட்கிறேளா ? என்னைப் பத்தி இவ்வளவு சொன்ன நான் அதை சொல்லாமே விடுவேனா ?
பூமியில் நாளுக்கு நாள் கொலை கொள்ளை குண்டு வெடிப்பு என்று சம்பவங்கள் பெருகிக் கொண்டே போக,  சட்டத்தால் தண்டனையால் எதுவும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சிண்ட எல்லோரும் பகவானைப் பிரார்த்தனை பண்ண ஆரம்பிச்சிட்டா. இந்த "லொள்ளை " தாங்க முடியாமே , மேலே இருக்கிற சர்வ மத தெய்வமும் ஒண்ணு கூடிப் பேசி முடிவெடுத்து எங்களோட பிரதிநிதியா  ஒருத்தரை அனுப்பறோம். கோர்ட்டில் தேங்கிக் கிடக்கிற கேஸ்களை ஒரே நாளில் சில சமயம் பைசல் பண்ணுவாளே, அந்த மாதிரி உங்க கோரிக்கையை பைசல் பண்றோம். எல்லாரும் மெரீனா கடற்கரைக்கு வந்துடுங்கன்னு சொல்லி இருந்தது . சர்வ மத கடவுள்களின் பிரதிநிதி சொன்ன நேரத்தில் வந்தார் . கூட்டம் நல்லா ஆரம்பிச்சு நல்லாத்தான் போயிட்டிருந்துச்சு. ஒரே சமயத்தில் எல்லோரும் கத்தக் கூடாது. உங்களில் ஒருத்தர் மத்தவங்க சார்பில் பேசலாம்னு கடவுள் சொன்னதும்  ஒருத்தரை ஸ்பாட் அப்பா யிண்ட்மெண்டில் பிக்ஸ் பண்ணி, எல்லோருடைய குறைகளையும் பட்டியல் போட்டுக் கொடுத்து பேச சொன்னோம். " எங்களுக்குள் மதக் கலவரம் ஆரம்பிச்சு கொலையில் போய் முடியுது" ன்னு சொன்னதும், " படைக்கிறது மட்டும்தான் நாங்க செஞ்சோம் . பிரிக்கிறதை நீங்கதான் கையில் எடுத்தீங்க. பிரிச்சவன்தான் ஒட்ட வைக்கணும் " ன்னு பதில் வந்துது . விலை வாசி உயர்வைப் பத்திக் கேட்டால். வானம் பூமி நீர் நிலம் ன்னு  உங்களுக்குக் கொடுத்ததுடன் எங்கள் வேலை முடிஞ்சு போச்சு ன்னு  பதில் வந்துச்சு. இப்படி எதைக் கேட்டாலும், அதுக்குக் காரணம் நீங்கதானே தவிர எந்தக் கடவுளும் பொறுப்பாக முடியாதுன்னு அடிச்சு சொல்லிட்டார் கடவுள், நொந்து போன நாங்க விலை வாசி உயர்வைத் தடுக்க ஏதாவது வழி மட்டுமாவது சொல்லுங்கன்னு கேட்டோம். சரி அடிப்படை உணவுப் பொருள்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வரலாம்னு சொல்லி, அரிசியின் அதிக பட்ச விலையே 10 ரூபாயாத்தான் இருக்கணும் . மற்ற அரிசிகள் விலை தரத்துக்கு ஏத்தாப்லே அதைவிடக் குறைவா இருக்கணும்னு  கடவுள் யோசனை சொல்ல, ஓரளவு சமரசத்துக்கு வந்தாச்சு. இப்படி ஒவ்வொரு பொருளின் விலையையும் குறைக்க யோசனை சொல்லி, அந்தந்தப் பொருளை விக்கிறவங்களும் வேறே வழியில்லாமே , மத்தவங்களுக்காக ஒத்துக்கிட்டாங்க ..." என்று நான் சொல்லிக்கொண்டு வரும்போது ஒரு அவசரக் குடுக்கை, " ஆஹா .. நல்ல விஷயமெல்லாம் செஞ்சிட்டு பிறகு ஏன் அவர் தலை தெறிக்க ஓடறார்  " ன்னு கேட்கிறார். வியாபாரிங்க எல்லாரும் விலையைக் குறைக்க ஒத்துக் கிட்டோம். வியாபாரி இல்லாத மத்தவங்க அவங்க வாங்குகிற சம்பளத்தைக் குறைச்சுக்கணும்னு வர்த்தகம் பண்றவங்க சைடிலிருந்து ஒரு டாபிக் கடைசியா வந்துச்சு. இப்போ வாங்குகிற சம்பளத்தை எந்தக் காரணம் கொண்டும் குறைச்சு வாங்க நாங்க தயார் இல்லைன்னு  தெரு பெருக்குகிறவனிலிருந்து உயர் பதவியில் இருக்கிறவங்க வரை அத்தனை பேரும் அடிச்சு சொல்லியாச்சு. எல்லாருக்கும் அவங்க சொல்றதுதான் நியாயம்னு படறதாலே, இறங்கி வர யாரும் தயாரில்லை, ஆனால் பிரச்சினை தீர்ந்தே ஆகணும்னு அடம் பிடிச்சாங்க. தப்பிச்சா போதும்னு தலை தெறிக்க ஓடறார் கடவுள் "....
என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது முதுகில் ஒரு கை பதிந்தது 
" ஐயோ நான் எதுவும் செய்யலே .. இதுவரை இங்கு நடந்ததைத் தானே சொன்னேன்  " 
" அம்மா ... அம்மா .. ஏன்ம்மா இன்னும் படுத்திருக்கே . உடம்புக்கு முடியலியா ? என்ன செய்து ? டாக்டர்கிட்டே போகலாமா ? நீ இப்படி ஒருநாளும்  எட்டு மணிவரை படுத்துத் தூங்க மாட்டியே.  நாங்களும் நீ எழும்புவே எழும்புவேன்னு வெயிட் பண்ணிப் பார்க்கிறோம். ஏதோ பினாத்தறே ? "
படுக்கையை விட்டு எழும்பி சுற்றுமுற்றும் பார்த்தேன். சிறிது நேர தடுமாற்றத்துக்குப் பின் கனவுக் காட்சிகள் நினைவில் வந்து போயின. சிரிப்பு வந்தது  
" என்னம்மா .. வேலைக்குப் போக டைம் ஆயிடுச்சு. உன்னை எழுப்பி சொல்லிட்டுப் போகலாம்னு பார்த்தால் , ஏதேதோ உளறுறே. உனக்கு நீயே பேசிக்கிறே .. சிரிக்கிறே .. எதை நினைச்சு சிரிக்கிறேன்னு சொன்னா நாங்களும் சேர்ந்து சிரிப்போம்தானே "
" என்னை நினைச்சு நானே சிரிச்சேன் ... இப்போ இது போதும் . ராத்திரி சாப்பாட்டு டைமில் மீதியை சொல்றேன் .  எல்லாரும் சேர்ந்து சிரிக்க லாம்  " என்றேன் நான் .