Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 26, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 112 )

                            தெரிந்த மிருகம் மறைந்த மனிதம் !!
விஷயத்தைக் கேள்விப் பட்டதிலிருந்து ஜெகநாதன் மனதில் இனந் தெரியாத பரபரப்பு. " நிஜமாவா ? " என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். தெருவில் வருவோர் போவோரை நிறுத்தி," ஸார், உங்களுக்கு கணேசனைத் தெரியும்தானே ? கறுப்பாக் குள்ளமா கத்திரிக்காய்க்கு கைகால் முளைச்ச மாதிரி இருப்பாரே, அதே கணேசன்தான். அவர் நேத்து ராத்திரி செத்துப் போயிடாராம் " என்று கேட்க, அவர்கள் இவரை 'ஒரு மாதிரி'யாகப் பார்த்து விட்டுப் போனார்கள்.
"அப்பாக்கு என்னம்மா ஆச்சு ? " என்று கேட்ட பார்த்திபனிடம். " உனக்கு ஆபீசுக்கு நேரமாகப் போகுது. நீ கிளம்பு. யாரிட்டேயாவது ரெண்டு வாங்கினா தான் உள்ளே வந்து உட்காருவார் " என்றாள் கௌரி 
"யாரும்மா அந்த கணேசன் ?"
"ஒரு சமயம் நமக்கு பக்கத்து வீட்டுக் காரரா இருந்தார். பிறகு தாம்பரம் பக்கம் வீடு கட்டிட்டுப் போயிட்டார். அவரோட வொய்ப் ஏதோ ஒரு கவர்மெண்ட் ஆபீசில் வேலை பார்த்திட்டுருந்தா. மாலதின்னு பேரு . ரெண்டு குழந்தைங்க அவங்களுக்கு ..."
"அம்மா எனக்கு ஒரு விஷயம் இப்போ தெரிஞ்சாகணும்... அப்பா சொல்றாரே ... அதான் ... அந்தக் கணேசன், அவர் போனதை நினைச்சு இவர் சந்தோசப் படறாரா இல்லே வருத்தப் படறாரா ?"
"சந்தோசப் படறார் "
"என்னம்மா சொல்றீங்க .. ஒருத்தர் சாவு மத்தவங்களுக்கு சந்தோசம் தருமா என்ன ? "
"மத்தவங்களைப் பத்தி நான் பேசத் தயாரில்லே..ஆனா இந்த மனுஷன் போய்  ச் சேர்ந்ததுக்காக தீபாவளியே கொண்டாடலாம் "
"ச்சே .. என்னம்மா இது ! அப்பாதான் அப்படின்னா நீங்களுமா ?"
"ஒருத்தர் பிரிவை நினைச்சு மத்தவங்க சந்தோசப் படறதை வச்சே பிரிஞ்சு போன ஆத்மா எவ்வளவு நல்ல ஆத்மான்னு நீ புரிஞ்சுக்கலாமே "
"இது டூ மச்"
"அந்த ஆளைப் பத்தி நீ தெரிஞ்சு வச்சிருந்தா இப்படிப் பேசமாட்டே. உங்க அப்பா பண்ற மாதிரி தெருவில் நின்னு கூத்தடிப்பே "
"அப்படி என்னதான் பண்ணினார் அந்த ஆளு ?"
"சுய புத்தி இல்லாத சொல் புத்தியும் கேட்காத ஜென்மம் அந்த ஆளு.. அதான் அந்தக் கணேசன். இவனைப் பத்தி அக்கம் பக்கத்திலே சரியா விசாரிக்காமே தன்னோட பொண்ணைக் கட்டிக் குடுத்திட்டான் ஒரு புண்ணிய வாளன். அந்தப் பொண்ணையும், அவளைப் பெத்த புண்ணியவாளனையும் 'ஒருவழி '
பண்ணிட்டான் இந்த ஆளு. பறவைகள் மிருகங்களுக்குக் கூட பாச உணர்ச்சி இருக்கும். அப்படி எந்தவொரு உணர்ச்சியுமே இல்லாத மரக்கட்டை அவன் . வீட்டைக் கவனிக்காமே வெளியில் ' வெட்டி பந்தா ' காட்டிகிட்டு சுத்திகிட்டு இருப்பான்.அந்தப் பொண்ணோட சம்பாத்தியத்தையும் பிடுங்கிட்டுப் போயிடு வான். ஏதாவது அடாவடி பண்ண வேண்டியது . எதற்க்கெடுத்தாலும் கோர்ட் கேஸ்ன்னு அலைய வேண்டியது. கீழ்க்  கோர்ட்டில் தோற்றால் மேல் கோர்ட்டில் போய்ப்பார்ப்பேனு வாய்ச்சவடால் விட்டுகிட்டு வக்கீலுக்கு பணத்தை வாரி இறைக்க  வேண்டியது. வீட்டு செலவுக்கு பணம் குடுக்கிறது கிடையாது . ரெண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க அவ பட்ட கஷ்டம் இருக்கே, வெறும் வார்த்தையில் சொல்லி மாளாது. நம்ம பக்கத்து வீட்டில் அவன்  குடியிருக்கிறப்போ, அவன் அடிக்கிற ரகளையைப் பார்த்திட்டு, உங்க அப்பா, "அந்த ராஸ்கலை வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிடலாம் போலிருக்கு"ன்னு சொல்வார். அந்தப் பொண்ணு நல்ல லட்சணமா இருப்பா. இவனுக்குக் கொஞ்சம் கூட பொருத்தமோ தகுதியோ இல்லாத ஜென்மம் அவன். ஒரு பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது அவன் நல்லவனா கெட்டவனான்னு மனசைக் கீறிப் பார்க்க முடியாது. வெளித் தோற்றப் பொருத்தத்தை ஈசியாக் கண்டு பிடிக்கலாமே. அந்த அளவுக்குக் கூட மண்டையிலே மசாலா இல்லாமல் இவனுக்கு எப்படித்தான் பொண் கொடுத்தாங்களோனு  நான் நிறைய தடவை யோசிச்சிருக்கிறேன்" என்று கௌரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, " வா கௌரி, நாம போயிட்டு வந்திடலாம். அவனுக்காக இல்லே , அந்தப் பொண்ணோட குணத்துக்காக. பாவம் இத்தனை வருஷத்துக்குப் பிறகாவது அதுக்கு ஒரு விமோசனம் கிடைச்சுதே " என்று ஜெகநாதன் சொல்ல, மறுபேச்சு பேசாமல் கிளம்பத் தயாரானாள் கௌரி.   
கணேசனின் கடைசிப் பயணத்திற்கான ஏற்பாட்டை வீட்டு வாசலில் சிலர் கவனித்துக் கொண்டிருக்க, அவர்களைக் கடந்து ஜெகநாதனும் கௌரியும் வீட்டுக்குள் சென்றார்கள். இவர்களைப் பார்த்ததும் " என்னையும் என்னோட குழந்தைகளையும் இப்படி அனாதையாக்கி விட்டு இந்த மனுஷன் நிம்மதி யாப் போயிட்டாரே ஸார் " என்று மாலதி சொல்ல, அதிர்ந்து போனார்கள் இருவரும்.ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. மாலதியின் துடிப்பு வெறும் நடிப்பாகத் தெரியவில்லை.
"அக்கம்பக்கத்து வீட்டு ஆட்களிடம் ரொம்ப மரியாதையா பேசுவார். எப்பவாவது  குடிச்சிட்டு காம்பௌண்டுக்குள் நுழைவார். அப்படி மப்பில் இருக்கும் போதும் கூட  எந்தப் பொம்பளையையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார். எதிரே யாராவது பொம்பளைங்க வந்தா ஒதுங்கி நிற்பார்" என்று ஒரு பெண் சொல்ல, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையசைத்தார்கள்.
"வீட்டு வேலை செய்றவங்க, பூக்காரியைக் கூட ' நீங்க, நாங்க'ன்னு மரியாதை குடுத்துதான் பேசுவார்" என்று ஒரு பெண் சொன்னதும் மாலதியின் அழுகை அதிகமானது  
"என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் அவர் ஏறெடுத்துப் பார்த்தது கூட கிடையாது. இந்தப் பிள்ளைகளுக்காகத் தானே நான் என் உயிரை வச்சு கிட்டு இருக்க வேண்டியதாப் போச்சு. இதுங்க இல்லாட்டா நானும் உயிரை விட்டுருப்பேனே  " என்றாள் மாலதி.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டு சிறிது நேரம் அங்கு நின்று கொண்டிருந்த ஜெகநாதனும் கௌரியும் யாரிடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து  வெளியேறினார்கள்.
"என்னங்க , எதுவும் பேசாமே அமைதியா வர்றீங்க " என்று கேட்டாள் கௌரி அங்கிருந்த மௌனத்தைக் கலைக்க நினைத்து.
"சில விஷயங்கள் நமக்கு பலநாள் கழித்துதான் புரிகிறது. கணேசனுக்கு எல்லா வசதியும் இருந்துது. வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிற அளவுக்கு சொத்தும் இருந்துது. இருந்தாலும் பெண்டாட்டி சம்பாத்தியத்தையும் பிடுங்கிக் கொண்டு அவளைப் பாடாய்ப் படுத்தினார். கையில் ரெண்டு காசு இருந்தாலே உடம்பு தினவெடுத்து பொம்பளைங்க கிட்டே வம்புக்கு அலையறவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்க . இவர் அந்த விஷயத்தில் யோக்கியன் என்று பொம்பளைங்களே செர்டிபிகேட் குடுக்கிறாங்க. வீடு நிறைய வசதி, நல்ல ஒழுக்க குணம் இருந்தும் அந்த ஆள் ஏன் அப்படி பொண்டாட்டி பிள்ளைங்க கிட்டேவெறிபிடிச்ச  பைத்தியக்காரன், சைக்கோ மாதிரி நடந்துகிட்டான்னு  யோசனை பண்ணிகிட்டே வர்றேன் "
"எங்க சின்ன தாத்தா, அதான் ... கோயிலில் உபன்யாசம் பண்ணுவாரே அந்த ராமுத் தாத்தா  அடிக்கடி சொல்வார் - 'உலகத்தில் முழுக்க முழுக்க நல்லவன்னு எவனும் கிடையாது.முழுக்க முழுக்க கெட்டவனும் கிடையாது. எப்பேர்ப் பட்ட  நல்லவன்கிட்டேயும் ஏதோ ஒரு கெட்ட குணம்  இருக்குது .  எந்தவொரு கெட்டவன் கிட்டேயும் ஏதோ ஒரு நல்ல குணம் இருக்கத்தான் செய்யுது. தெய்வப் பிறவி ராமன்.சலவைத் தொழிலாளி ஏதோ சொன்னாங்கிறதுக்காக கட்டின பெண்டாட்டியை காட்டுக்கு அனுப்பினான்,அதுவும்அவ கர்ப்பமா இருந்த நேரத்திலே . அவனோடு சேர்ந்து சுகவாழ்க்கை வாழ அவன் பொண்டாட்டி பிள்ளை களால் முடியலே. அடாவடிப் பேர்வழி அந்த துரியோதனன்.. எந்தவொரு சூழ்நிலையிலும்...சந்தேகத்தை உண்டு பண்ற சூழ்நிலையில் கூட அவன் தன்னோட மனைவியையும் நண்பனையும் சந்தேகப்படலியே. யாரை யாவது நல்லவன் இல்லாட்டா கெட்டவன்னு நாம முடிவு பண்ணினா அது நம்மோட முட்டாள்தனம்தான்.  நல்லவன் கண்ணுக்கு எல்லாமே நல்லதாத் தெரியுது. கெட்டவன் கண்ணுக்கு எல்லாமே கெட்டதாத் தெரியுதுன்னு தாத்தா சொல்வார். கணேசன் ஸார் அடிச்ச லூட்டியை, அடிச்ச ரகளையை பூதக் கண்ணாடியில் வச்சுப் பார்த்த நாம, அவர்கிட்டேயிருந்த நல்ல விஷயங்களை  தராசில் வச்சுப் பார்க்க மறந்து போயிட்டோம் " என்று கௌரி சொன்னதை கேட்டுக் கொண்டே நடந்த ஜெகநாதன் அதன்பிறகு கணேசனைப் பற்றி வாயைத் திறந்து எதுவுமே பேசவில்லை. 

Friday, April 18, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 111 )

                                          அம்மா என்றால் .... ?!
"இதோ பாருங்க, உங்க மனசிலே ஆயிரம் வருத்தம் இருக்கலாம். அதற்க்கான காரணம் நியாயமானதா இருக்கலாம். அதையெல்லாம் அனலைஸ் பண்ணிப் பார்க்க இது  நேரம் இல்லே. இறந்து போனது உங்க அம்மாங்க. உங்க காதுக்கு நியூஸ் வந்தாச்சு. நீங்க வரணும்னு உங்க அப்பா எதிர் பார்க்கிறார்ங்கிறதும் இப்போ  தெரிஞ்சு போச்சு. பிறகு எதுக்கு இத்தனை பிடிவாதம் ... அம்மா .."
"போதும் நிறுத்து ... அம்மா .. அம்மா .. அம்மா .. அம்மான்னு சொன்னால் அன்புன்னு காகிதங்கள்தான் சொல்லுது. என்னோட டிக்ஸனரியில் அம்மா என்றால் அகம்பாவம் .. அம்மா என்றால் ஆணவம் .. அம்மா என்றால் அடங்காப் பிடாரித் தனம் "
"இவ்வளவுதானா, இன்னும் இருக்கா ? " என்று அமைதியாகக் கேட்டாள் ரேவதி.
"ஏண்டி உனக்கு அறிவே கிடையாதா ? ஊரே பார்த்து சிரிக்கும்படி நம்ம ரெண்டு பேரையும் செருப்பால் அடிக்காத குறையாக வீட்டு நடை ஏற விடாமல் செஞ்சது உனக்கு மறந்து போச்சா ? ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தப்போ போறவன் வர்றவன் எல்லாம் நம்மளப் பார்த்து நக்கலா சிரிச்சதும் கண்ணடிச்சுப் பேசினதும் மறந்து போச்சா. சுரேஷ் தயவாலே ஒரு வாரத்துக்குள் நமக்கு டில்லிக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சது. தமிழ் நாட்டுக்கு ஒரு முழுக்குப் போட்டுட்டு இங்கே கௌரவமா காலம் தள்ளறோம். சுரேஷ் மட்டும் இல்லைனா 'காதல் ஜோடி தற்கொலை ' லிஸ்டில் நம்ம பேரும் சேர்ந்திருக்கும் " என்றான் சந்தோஷ் வெறுப்பாக.
"சுரேஷ் ஸார் மேலே இவ்வளவு மரியாதை வச்சிருக்கீங்களே ... அந்த சுரேஷ் ஸார்தான் இப்போ அம்மா இறந்த தகவலை  சொல்லி ஒரு முறை வந்து போன்னு சொல்றார்.. அவர் பேச்சுக்கு நாம மரியாதை குடுக்கணும்தானே.. ட்ராவெல் பண்ற நிலையில் நான் இருந்தால் இப்படி உங்களை போக சொல்லி கெஞ்சிகிட்டு இருக்க மாட்டேன். ' வாங்க போகலாம்'ன்னு சொல்லிஇருப்பேன். நம்ம  மாரேஜ்  முடிஞ்சு செவன் இயர்ஸுக்குப் பிறகு கன்சீவ் ஆகியிருக்கிறேன். லோக்கல் ஜானி கூட கூடாதுன்னு டாக்டர் ஸ்ட்ரிக்ட்டா சொல்லியிருக்கிறப்போ, டில்லியிலி ருந்து சென்னை, அங்கிருந்து மதுரை போறது பற்றியெல்லாம் யோசிக்க வே முடியாது. என்னைத் தனியா விட்டுட்டுப் போறது பத்தியெல்லாம் நீங்க கவலையே படவேண்டாம். அக்கம் பக்கத்தில் உள்ளவங்க என்னை நல்லபடியா  கவனிச்சுப்பாங்க .. நீங்க கிளம்புங்க ".
எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான் சந்தோஷ். தனக்குள் ரேவதி சிரித்துக் கொள்வதைக் கவனித்த சந்தோஷ், " என்ன .. ? உனக்கும் என் பொழைப்பு வேடிக்கையா இருக்கா ? " என்று எரிந்து விழுந்தான்.
"ஐயய்யோ .. அதெல்லாம் இல்லை. இப்படியொரு சம்பவம் நடந்து அந்த விஷயம் ஒரு மகனுக்குத் தெரியவரும்போது, தாயைப் பார்க்க அவன் பதறிப் போய்க் கிளம்புவான். நம்ம உறவே வேண்டாம்னு சொல்லி ஒதுக்கி  வச்ச உங்க அம்மாவைப் போய்ப் பார்த்துதான் ஆகணுமானு கேட்டு அவன் கட்டிக்கிட்டு வந்த பொண்டாட்டி சண்டை போடுவா . நம்ம வீட்டில் அது தலைகீழா இருக்கேன்னு நினைச்சுப் பார்த்தேன். சிரிச்சேன் வேறே ஒண்ணுமில்லே "
"பொம்பளைங்களை வெறுக்கிற ஆம்பளைங்க இருக்கிறாங்க. சகோதரி யை மனைவியை வெறுக்கிற ஆம்பளைங்க இருக்கிறாங்க. ஒரு மகன் பெத்த தாயை வெறுக்கிறான்னு சொன்னா, அதிலிருந்தே அந்த தாய் எப்படிப் பட்டவளா இருந்திருப்பாங்கிறதை  கொஞ்சம் நினைச்சுப் பாரு. பொதுவா மனுஷ ஜென்மங்க உடம்பில் எலும்பு, நரம்பு மண்டலம் ரத்த ஓட்டம்னு இருக்கும். எங்க அம்மா உடம்பு பூரா திமிர், அகம்பாவம், ஆணவம்.. மத்தவங்க மனசை நொறுக்கிப் பார்ப்பதில் எங்க அம்மாவுக்கு ஈடு இணையே கிடையாது. உறவுகளை எங்களிடம் நெருங்க விட்டதே இல்லை . நல்லது கெட்டதை பிரித்துப் பார்க்கும் விவரம் எனக்கு தெரிய வந்த வயதில், இந்த மாதிரி ஒரு அம்மாவோடு அப்பா எப்படி மகிழ்ச்சியாக  இருக்கிறார்னு நினைச்சு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். காலேஜில் படிக்கிற காலத்தில் சங்கோஜத்தை விட்டுட்டு இது பற்றி அப்பாகிட்டே பேசியிருக்கிறேன்.'நான் பெத்த மகனே.. சந்தோசமான நல்லதொரு இல்வாழ்க்கையின்  ரகசியமே 'அடக்கு அல்லது அடங்கு ' என்பதில் தான்இருக்குது. ஆரம்பத்தில் அவளைக் கண்டிச்சுப் பார்த்தேன். விளைவு விபரீதமா போச்சு. குடும்ப விஷயம் சந்தி சிரிக்கக் கூடாதே என்கிற பயத்தில்  அவ போக்கில் விட்டுப் பிடித்தேன். அதுக்குப் பிறகு இந்த அடிமை வாழ்க்கை எனக்குப் பழகிப் போச்சு. உங்க அம்மா கெட்டவ இல்லேடா. ஈகோ பிடிச்சவ. " தான் " என்கிற அகந்தை தலைக்கேறிக் கிடக்கு.எந்த விஷயத்திலும் எதற்காகவும் மத்தவங்களை சார்ந்திருக்கக் கூடாது  என்கிற வைராக்கியம் இருக்கு. அது நல்ல விஷயந்தான். ஆனா அதை அவ ஹாண்டில் பண்ற முறைதான் தப்பு. சந்தோஷ் நீயே கவனிச்சிருப்பே, " பெர்த் டே " ன்னு சொல்லி உன்னோட பிரெண்ட்ஸ் ஸ்வீட்  தரப்போ, அந்த ஸ்வீட்டை அவ வாங்க மாட்டா. ஆனா கிப்ட் குடுப்பா. குழந்தைங்க மனசு நோகுமே, அவங்க குடுக்கிறதை வாங்கினா என்னனு நான் கேட்கும்போதெல்லாம்  'என்னோட கை, எப்பவும் குடுக்கிற கையா இருக்கணும். எதையும் யாரிட்டே இருந்தும் வாங்கிற கையா இருக்கக் கூடாதுன்னு  சொல்லுவா. அவளை சுத்தி அவளே ஒரு வட்டம் போட்டுக்கிட்டு தான் செய்றது எல்லாமே சரின்னு நினைச்சி கிட்டு தன்னையும் படுத்திகிட்டு மத்தவங்களையும் படுத்தறாடா .  நாய் வாலை நிமிர்த்த முடியாது . பிறவிக் குணத்தை மாத்த முடியாதுனு அப்பா சிரித்துக் கொண்டே சொல்வதைப் பார்த்து நான் ஆச்சரியப் படுவேன். அம்மா பண்ணின எத்தனையோ விஷயங்களை அப்பாவைப் போலவே நானும் சகிச்சுப் போயிருக்கிறேன். என்னோட பிரெண்ட்ஸ் க்கு  கிடைச்ச மாதிரி எனக்கு நல்ல அம்மா கிடைக்கலே. மனைவி யாவது என் மனசுபோல அமையணும்னு பல வருஷம் தேடித்தேடி அலைஞ்சு  உன்னைக் கண்டு பிடிச்சேன். அதற்கு அம்மா நடந்து கொண்ட விதம்  நான் சாகும் வரை என் மனசை விட்டுப் போகாது. எந்தக் காரணம் கொண்டும் அம்மாவை மன்னிக்கவும்  செய்யாது "
"சந்தோஷ் இப்போ நீங்க சொல்ற எல்லாமே, ஏழு வருஷமா நான் கேட்கிற  வழக்கமான புலம்பல்தான். அவங்க செஞ்சது ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்காக அம்மா சாவுக்குக் கூட வராத மகன்கிற பேரை நீங்க வாங்கிக்க வேண்டாம். எழும்புங்க ... கிளம்புங்க .. ப்ளைட்டோ , ட்ரைனோ எது எதைப் பிடிச்சு எப்படி போக முடியுமோ அப்படிப் போய்ச் சேருங்க. உங்க ப்ரெண்ட் ஷர்மாவை  வர சொல்லியிருக்கிறேன். உங்க ட்ராவல்க்கு வேண்டிய எல்லா ஏற்பாடும் அவர் பார்த்துப்பார். சுரேஷ் ஸாருக்கு  போன் பண்ணி நீங்க வர்ற விஷயத்தை சொல்லிடறேன் . க்விக். கெட் ரெடி " என்று அவசரப் படுத்தினாள் ரேவதி.
டில்லியில் ப்ளைட் பிடிச்சு வீடு வந்து சேர்ந்ததெல்லாம் தனிக் கதை. மகனின் வரவுக்காக  ஐஸ் பெட்டியில் அசையாமல் படுத்திருந்த அம்மா எந்தவொரு பதட்டத்தையும் சந்தோஷிடம் ஏற்படுத்தவில்லை. கூடி நின்ற உறவுகளும் அப்பாவும் சந்தோசைக் கண்டதும் பெருங்குரலெடுத் து அழுதபோது கூட அது சந்தோஷிடம் எந்தவொரு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. "டேய் .. வாய் விட்டு அழுதுவிடு. துக்கத்தை மனசிலே போட்டு பூட்டி வைக்காதே " என்று காதோரம் கிசுகிசுத்த சுரேஷிடம் " அம்மாவின் இழப்பு என்னிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாத போது நான் ஏன் அழுது டிராமா போடவேண்டும் " என்று கேட்டான் சந்தோஷ் .
அம்மாவின் உடல் கடைசி பயணத்தைத் தொடர்ந்தபோது ஒப்புக்காக ஊர்  கூடி அழுத போது, சந்தோசின் கண்கள் கண்ணீரை வெளியில் விடவில்லை. சிதையில் உடம்பு எரிந்தபோது எந்த சலனமும் இல்லாமல் அதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ் . அம்மாவிடம்  சந்தோஷ் பட்ட அவமானம் இன்னும் நிழல் படமாக அப்பாவின் மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்ததால்,சந்தோஷின் மௌனத்திலிருந்தே  அவன் மன வேதனையைப் புரிந்து கொண்ட அப்பா , அவனருகில் வந்து தோளைத் தட்டி ' வா போகலாம் .. எல்லாம் ,, எல்லாமே  முடிஞ்சு போச்சு ' என்றார்.
அங்கிருந்த குளத்தில் குளித்துவிட்டு நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை யைப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வருகின்ற  வழியில், அங்கிருந்த பிள்ளையார் கோவிலை அவன் கண்கள் எதேச்சையாக ஏறிட்டுப் பார்த்தன. இதே பிள்ளையார் கோவிலின் வாசலில் நண்பர்களோடு சேர்ந்து விளையாடிய நாட்கள் ஏராளம். பிள்ளையார் கோவில் வாசலில் யாரோ சிதற விட்ட தேங்காய்க்காக  சிறுவர்கள் கூட்டம் முந்தியடித்துக் கொண்டு  தரையில் விழுந்து புரண்டு கொண்டிருந்தது.
தேங்காய் ... தேங்காய் .. சிதறு தேங்காய் ...
" சந்தோஷ் இந்தாடா தேங்காய் " என்று உடைந்த தேங்காய் துண்டு களை அம்மா  நீட்ட, " ஏதும்மா ..  மண்ணைக் கழுவிக் கொண்டு வந்தியா. எதையும் ஒண்ணுக்கு ரெண்டுமுறை அலசிப் பார்த்து வாங்கிற ஆளாச்சே நீ . அப்படியிருக்க வாங்கும் போதே பார்த்து வாங்காமல் ... ச்சே .. மண்ணில் விழுந்து கழுவி எடுத்த மாதிரி ... என்னம்மா இது ? " என்று கேட்ட சந்தோஷிடம் " இது கடையில் வாங்கினதில்லேடா . பிள்ளையார் கோயில் வாசலில் பொறுக்கி எடுத்தது. அப்பப்பா ,, பொடிப் பசங்க என்னை எடுக்க விடாமே  கீழே தள்ளப் பார்த்தாங்க .. நான் விடலியே. கை நிறைய பொறுக்கி எடுத்துட்டுதானே நான்  அங்கிருந்து நகர்ந்தேன் " என்ற அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்த சந்தோஷ் " அம்மா என்ன சொல்றீங்க ? நீங்க தேங்காய் .. அதுவும் தெருவில் விழுந்த தேங்காய்  .. அதைப் பொறுக்கி எடுத்தீங்களா ? என்னம்மா ஆச்சு உங்களுக்கு ? " என்று பதறிப் போய்க் கேட்க, " அன்னிக்கு நீயும் உன்னோட பிரெண்ட்ஸ்ம் பேசிக் கிட்டிருந்தது என் காதில் தற்செயலா விழுந்தது. அப்போ நீ ' காசு கொடுத்து நாம எத்தனை பொருளை வாங்கினாலும்  அது தராத சந்தோசத்தை பிள்ளையார் கோயில் வாசலில் நாம பொறுக்கி எடுக்கிற தேங்காயும், யாரோ ஒருத்தர் வீட்டு வாசலில்  காய்ந்து கொண்டிருக்கும் கூழ் வடகமும் தருதே .. அது ஏன்டா' ன்னு நீ கேட்டே . ஸ்டார் கணக்குப்படி இன்னிக்கு உனக்கு பெர்த் டே. அதை நான் சொன்னா நீ ஒத்துக்க மாட்டே. பிறந்த ட்டேட் எதுவோ அதில் தான் கொண்டாடணும்னு நீ சொல்வே. உன் பேருக்கு அர்ச்சனை பண்ண கோவிலுக்குப் போனேன். அங்கே யாரோ சிதறு தேங்காய் விட்டாங்க. உனக்குப் பிடிக்கும்னு நீ சொன்னது நினைவு வந்தது. உன் பெர்த் டே க்கு  அம்மாவோட பிரசெண்ட் இது. கீழே விழுந்ததில் கை முட்டியில் காயம் பட்டுட்டுது " என்று சொல்லிக் கொண்டே அம்மா அங்கிருந்து நகர்ந்தது  நிழல் படமாக கண் முன்னே ஓடியது. கை நீட்டி எதையும் மற்றவர்களிடம் இருந்து வாங்குவது  கௌரவக் குறைச்சல் என்று நினைக்கும் அம்மா, மகனின் ஆசைக்காக தெருவில் நின்று தேங்காய் பொறுக்கி வந்ததை, அதை .. பெருமையாக நினைத்த அம்மா ... " அம்மா " என்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான் சந்தோஷ். எந்த விவரமும் அறியாமல் உடன் வந்தவர்கள் ஸ்தம்பித்துப்போய் நின்றனர். "ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளுக்காக எதையும் செய்வாள். அதனால்தான் பெண்கள் செய்யும் தவறுகள், அவர்களை தாய் என்ற ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கும்போது மன்னிக்கப் படுகின்றன "  என்ற எப்போதோ எங்கோ படித்த வரிகள்  அவன் நினைவுக்கு வந்தன. " அம்மா நீ எனக்கு மகளாகப் பிறக்கணும்.என் ஆசை  பாசம் நேசம் எல்லாத்தை யும்  முழுசையும் கொட்டி நான் உன்னை வளர்க்கணும்.. நீ எனக்கு மகளா வரணும் " நேரமாக ஆக சந்தோஷின் அழுகுரல் சத்தம் மட்டும் அதிகமாகிக் கொண்டே இருந்தது    

Friday, April 11, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 110 )

                                     தகரம் ஒன்று தங்கம் ஆச்சு !!
"அம்மா ... நான் ஏர் போர்ட்டிலிருந்து போன் பண்ணின பிறகு நீங்க மீல்ஸ் ரெடி பண்ண ஆரம்பிச்சா போதும். அங்கிளுக்கு எப்பவும் சூடா சாப்பிடத்தான் பிடிக்கும். சமைக்க வேண்டியதை எடுத்து ரெடியா வச்சுக் கோங்க. என் போன் வந்ததும் மடமடன்னு அடுப்பில் ஏத்தி இறக்கிற வேலையை ஆரம்பியுங்க " என்ற சரவணன் மீது கேலிப் புன்னகையை வீசினாள் தமயந்தி.
"ஏம்மா சிரிக்கிறீங்க ? "
" என்னவோ நான் இன்னிக்குதான் புதுசா சமைக்க ஆரம்பிக்கிறாப்லே நீ ' அதை செய் ', 'இதை செய் 'ன்னு  இன்ஸ்ட்ரக்சன் குடுக்கிறேயே, அதை நினைச்சு சிரிச்சேன் " என்றாள் தமயந்தி சிரிப்புடன். 
"நான் இப்போ கிளம்பறேன் "
"டேய், நீ இன்னும் காபியே குடிக்கலே. டிபன் எடுத்து வைக்கிறேன் சாப்பிடு "
" வேண்டாம்மா .. நேரமாயிடும் "
"ரெண்டு இட்லியைப் புட்டு வாயில் போட எவ்வளவு நேரமாகிடப் போகுது. அவங்க ஏற்கனவே  மும்பை வந்துட்டாங்க. அங்குள்ள வேலையை முடிச்சிட்டு சென்னை வருவாங்க. மும்பையில் பத்து மணிக்கு ப்ளைட். இங்கு வந்து சேர பன்னிரண்டு மணியாயிடும்னு சொல்றே. மணி இப்போ எட்டு தானே ஆறது. அவங்க கிளம்பி  இன்னும் மும்பை ஏர் போர்ட்டுக்கே  வந்து சேர்ந்திருக்க மாட்டாங்க. அதுக்குள்ளே சென்னை ஏர் போர்ட் வாசலில் போய் நிக்கறேன்னு நீ  சொல்றே ? "
"அதெல்லாம் அப்படித்தான். நீ சும்மா தொணதொணக்காதே " என்று சொல்லி விட்டுக் காரை எடுத்துக் கொண்டு விரைந்த சரவணனை மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தாள் தமயந்தி 
அவ்வளவு நேரமும் அங்கு நடந்தவற்றை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவேல்முருகன் "இவன் இப்படி மாறுவான்னு நாம கனவில் கூட நினைச்சுப் பார்த்ததில்லை " என்றார் மனைவியிடம்.
இளவயதில் திருடனாக, ஸ்திரீ லோலனாக இருந்து, பிற்காலத்தில் ஞானிகளாக மாறியவர்களைப் பற்றி புத்தகங்களில் படித்திருக்கிறார். ஆனால் அப்படியொரு அதிசயம் தனது வீட்டிலும் நடக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை  வேல் முருகன். அந்த மாற்றத்து க்குக் காரணம் சரவணனின் வகுப்புத் தோழன் ஸ்ரீராமின் அப்பாதான் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. குடும்பத்தோடு மலேஷியா விற்குக்  குடியேறிய ஸ்ரீராமின் அப்பா, மூன்று வருடத்துக்குப் பிறகு முதல் முறையாக சென்னை வருகிறார். தங்கள் வீட்டில் தங்கப் போகிறார் என்ற நினைப்பே சந்தோசத்தைத் தந்தது சரவணனுக்கு.
டெலிபோன் மணி ஒலித்தது. விரைந்து சென்று எடுத்தார் வேல்முருகன் "அங்கிள் .. நான் மோகன் பேசறேன்.  சரவ் வீட்டில் இல்லையா. அவன்  மொபைலுக்குப் போட்டா ஸ்விட்ச் ஆப்ன்னு  ரிப்ளை வருது "
"அவன் இப்போ டிரைவிங்கில் இருக்கிறதாலே ஆப் பண்ணி வச்சிருக்க லாம். ஒரு முக்கியமான வேலையா ஏர் போர்ட் போயிருக்கிறான். அவன் வந்ததும் நீ கூப்பிட்டதை சொல்றேன்ப்பா "
"அங்கிள்.. வாலிபால் மாட்ச் விஷயமா ஒரு முக்கியமான முடிவெடுக் கணும். இன்னிக்கே டிசைட் பண்ணியாகணும். ராத்திரி எந்நேரம் ஆனால் கூட பரவாயில்லை. வழக்கமா நாங்க மீட் பண்ற இடத்துக்கு வரணும்னு மட்டும் சொல்லிடுங்க. ப்ளீஸ் அங்கிள் "
"கண்டிப்பா சொல்றேன்ப்பா "
ரிஸீவரைக் கீழே வைத்ததுமே அடுத்த அழைப்பு வந்தது. 
"அங்கிள் .. எங்கே அந்த ராஸ்கல் .. போன் போட்டா எடுக்கிறதில்லே. ராஜு வீட்டு பங்க்சனுக்குப்  போறது பத்தி பேசி முடிவெடுக்கணும். துரை வீட்டில் உட்கார்ந்து டீவீ பார்க்கிறாரா? "
"பேசறது சத்யாதானே ? அவன் வீட்டில் இல்லே.. வந்ததும் உன்னை வந்து பார்க்கச் சொல்றேன்"
"தேங்க்ஸ் அங்கிள் "
சோபாவில் வந்து சாய்ந்து உட்கார்ந்தார். மகனுக்கு வரும் அழைப்பு களும் அதற்க்கு அவர்கள் தரும் முக்கியத்துவமும் மகிழ்ச்சியைத் தந்தது வேல்முருகனுக்கு. சரவணனோடு பேசினால், சேர்ந்து விளையாடினால் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கெட்டுப் போய் விடுவார்கள் என்று அக்கம் பக்கத்தினர்  பயந்த "அந்த " நாட்களை நினைத்து இன்றும் கூட நடுங்கிப் போவார் வேல்முருகன். இன்று சரவணன் காதில் விஷயத்தைப் போட்டு விட்டால் போதும் நல்ல படியாக முடித்துத் தருவான் என்ற நிலை. எந்த நேரத்தில் எந்த வீட்டிலிருந்து சரவணனைப் பற்றிய புகார் வருமோ , எந்த போலீஷ்  ஸ்டேசனிலிருந்து அழைப்பு வருமோ என்று நினைத்து நெஞ்சு பதறிய நாட்களை நினைத்துப் பார்த்தார் வேல்முருகன். பையனுக்கு  நல்ல படியாக புத்திமதி சொல்லிப் பார்த்தாச்சு. மிரட்டிப் பார்த்தாச்சு. அடித்தும் பார்த்தாச்சு. எதற்குமே அடங்காத ஒரு நிலை. அவன் உடம்புக்குள் ஏதாவது பேய் பிசாசு புகுந்து கொண்டு அவனை ஆட்டிப் படைக்கிறதோ என்று பயந்த நாட்கள் எத்தனை. கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த டீச்சர் மீது காகித ராக்கெட் வீசியதால் பிரச்சனை பெரிதாகி  ஸ்கூலை விட்டு வெளியேறும் நிலை வந்த போது, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையைப் போட்டுக்கொண்ட வேல்முருகனை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரோடு  மீட்டுக் கொண்டு வந்ததோடு அல்லாமல்  பள்ளி நிர்வாகத்தி ட ம் அவனுக்காக வாதாடியது   ஸ்ரீராமின் அப்பாதான். " தீவிரவாதப் பிரச்சனைகளால் நாடு தடுமாறிப் போகிறது. அவர்களை நல்லதொரு குடிமக்களாக்க அரசாங்கம் முயற்சி எடுக்கிறது . பள்ளிப் படிப்பை பாதியிலேயே முடிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ள பையன் வருங்காலத்தில் அவனது தேவைகளுக்காகத் திருடுவான். கொலை கொள்ளைனு இறங்குவான். சந்தர்ப்பம் கிடைத்தால் தீவிர வாதக் கும்பலோடு சேர்ந்துட்டு என்னென்ன    அடாவடித்தனம் உண்டோ அத்தனையும் பண்ணுவான். நம்மாலே  ஒரு மனுஷ ஜென்மம் மிருகமாக மாற வேண்டாமே "  என்று சொன்னபோது " அவன் இப்பவே மிருகமாகத் தானிருக்கிறான்.இவனால் மற்றகுழந்தைகளும்கெட்டுப்போய்டுவாங்க " என்று பதில் சொன்னது பள்ளி நிர்வாகம்.
"இன்னும் ஒரே ஒரு மாசம் டைம் குடுங்க. அவனை நல்ல பையனாக மாற்ற முயற்சி பண்றேன். அப்படி முடியாதப்போ நானே அவனை ஸ்கூலில் இருந்து விலக்க கடிதம் குடுக்கிறேன் " என்று ஸ்ரீராமின் அப்பா சொன்னபோது அதை ஏற்றுக் கொண்டது பள்ளி நிர்வாகம்.
சரவணனை தனது வீட்டுக்கு வரவழைத்த ஸ்ரீராமின் அப்பா, " சரவணா நீ ஏன் இப்படியெல்லாம் பண்றே ? " என்று கேட்டபோது "அங்கிள் எனக்கு யார் மேலேயும் கோபம் கிடையாது . ஆனால் நான் என்ன செய்றேன்னு எனக்கே தெரியலே " என்றான் சரவணன் . அவனை அழைத்து சென்று மனோதத்துவ மருத்துவரிடம் காட்ட நினைத்த  ஸ்ரீராமின் அப்பா அதற்கு முன்பாக சுயமுயற்சியில் டெஸ்ட் பண்ணிப் பார்க்க விரும்பினார் . ஒருவனை நல்லவனென்று நம்புங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல் லாம் அவனை நல்லவனென்றே புகழ்ந்து கொண்டிருங்கள். அவன் கண்டிப்பாக ஒருநாள் நல்லவனாக மாறுவான்  என்று அவர்  எங்கோ எப்போதோ படித்தது நினைவுக்கு வர,"சரவணா உனக்கு என்னைப் பிடிக் கும்  தானே? எனக்கொரு கஷ்டம் வந்தால் நீ தாங்க மாட்டாய் தானே ? " என்று கேட்டபோது,"யாரையும் கஷ்டப்படுத்திப் பார்க்க என்னிக்கு மே  நான் நினைச்சது   கிடையாது  அங்கிள் " என்றான் சரவணன்.   
"உனக்காக நான் ஸ்கூலில் ப்ராமிஸ் பண்ணிட்டு வந்துட்டேன். உன்னை ஒரு நல்ல பையனாக மாற்றும் முயற்சியில் நான் தோற்றுப் போயிட்டா உங்க அப்பா சாப்பிட்ட மாதிரி நானும் தூக்க மாத்திரையைத் தான் சாப்பிடணும். எனக்கு ஒண்ணுன்னா ஸ்ரீராம் துடிச்சுப் போயிடுவான். அவன் உன் நண்பன்தானே. உன்னால் உன் நண்பனுக்கு ஒரு கஷ்டம் வரலாமா ? நீ நல்லவன் மாதிரி கொஞ்ச நாளைக்கு நடியேன். யாரும் கேட்காட்டாலும் கூட நீயே வலியப் போய் உன்னால் முடிஞ்ச சின்ன சின்ன உதவியை அவங்களுக்கு செய். முதலில் கொஞ்சம் கஷ்டமாகத் தெரியும். பிறகு அந்த நடிப்பு பழக்கப் பட்டுவிடும் " என்று ஸ்ரீராமையும் அருகில் வைத்துக் கொண்டு அவர் சொன்னபோது , ஸ்ரீராம் அதிர்ந்து போய் விட்டான்.  
சரவணன் அங்கிருந்து போனதும் " என்ன டாடி நீங்க ! நீங்க அட்வைஸ் பண்ணுவீங்கனு நெனைச்சேன் . நீங்க என்னடான்னா அவனை நல்லவன் மாதிரி நடிக்க சொல்றீங்க " என்று கேட்டான் ஸ்ரீராம் 
" நான் சின்ன வயசில் படிச்ச ஒருகதையை வச்சு இவனை டெஸ்ட் பண்ணிப் பார்க்க நினைச்சேன் "
" என்ன கதை டாடி ? "
"ரெண்டு பிரெண்ட்ஸ். ரெண்டு பேருமே திருட்டுப் பசங்க.கூட்டுக் களவாணிங்க . அந்த ஊரிலுள்ள ஒரு பெரிய  பணக்காரர் வீட்டில் திருட ப்ளான் போடறாங்க. அதற்க்கு முதல் படியாக, அவர்களில் ஒருத்தன் ரொம்ப நல்ல நாணயமான வேலைக்காரன் மாதிரி நடிச்சு அந்த வீட்டுக்குள் நுழையனுங்கிறது தான். இவங்க ப்ளான் போட்ட படியே எல்லாம் நல்லா நடந்தது. இவன் இல்லாமல் அந்த வீட்டில் எதுவும் இல்லைங்கிற நிலையை அவன் உருவாக்கி வச்சிட்டான். கொஞ்ச நாள் கழிச்சு இவனோட பழைய கூட்டாளி திரும்பி வர்றான். கைவரிசையை எப்போ காட்டலாம்னு இவனைக் கேட்க, " நீ சொன்னபடி நல்லவன் மாதிரி நடிக்கத்தான் நான் வந்தேன். நடிச்சேன். என்னை எல்லாரும் நம்பினாங்க.நல்லவனாக நடிப்பதிலேயே இவ்வளவு சுகமும் மரியாதையும் இருக்கிறதே. அப்படியிருக்க நிஜமாகவே  நல்லவனாக வாழ்வதில் என்னவொரு சுகம் இருக்குங்கிறதை நான் இப்போ தெரிஞ்சு கிட்டேன். என்னால் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாதுன்னு சொல்லி விடுகிறான். அதை வச்சுதான் நான் இப்போ சரவணனையும் நடிக்கும்படி  சொல்றேன் "
"என்னவோ டாடி. ரிசல்ட் நல்லா வந்தால் சரிதான் " என்றான் ஸ்ரீராம்.
ஆறுமாத காலத்துக்குள்ளாகவே  திறம்பட நடித்து எல்லார் மனசிலும் இடம் பிடித்து விட்டான் சரவணன். அவன் கல்லூரிப் படிப்பை முடிக்கும் நேரத்தில்தான் மலேசியாவிற்கு இடம் பெயர்ந்தது  ஸ்ரீராமின் குடும்பம். இப்போது பிசினசிலும் கால் பதித்து விட்டான் சரவணன்.
வாசலில் கார் ஹார்ன் சத்தம் கேட்டது. ஸ்ரீராமின் அப்பாவை அழைத்து வந்திருந்தான் சரவணன்.
வந்தவர் காலில் விழுந்து வணங்காத குறையாக அவரை வரவேற்றார் வேல் முருகன், வழக்கமான உபசரிப்பு, நலன் விசாரிப்பு எல்லாம் முடிந்ததும், பெட்டியைத் திறந்து, அவர் கொண்டு வந்திருந்த பொருட்களை ஒவ்வொருவரிடமும் கொடுத்தார்  ஸ்ரீராமின் அப்பா.
ஒரு கவரை எடுத்து சரவணனிடம் நீட்டியபடி " பாரின் சரக்கு. நீயும் பிரெண்ட்ஸ்ம்  சேர்ந்து எஞ்சாய்  பண்ணுங்க " என்றார் 
"அங்கிள் நான் இதையெல்லாம் கண்ணால் கூடப் பார்த்ததில்லை. என்னோட பிசினெஸ் பார்ட்னர்ஸ் கிட்டேயும் இதைப் பத்தி ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லியிருக்கிறேன்" என்றான் பதற்றத்துடன்.
"பார்த்தியா, இதைத்தான் தீட்டின மரத்திலேயே கூர் பார்க்கிறதுன்னு சொல்றது.நல்லவன் மாதிரி நடின்னு நான் சொன்னது வாஸ்தவம்தான் . அதற்காக எங்கிட்டேயே உன் நடிப்புத் திறமையைக் காட்டறியா ? படவா  ராஸ்கல் " என்று சிரித்துக் கொண்டே ஸ்ரீராமின் அப்பா   சொல்ல, ஒட்டு மொத்தக் குடும்பமும் நொறுங்கிப் போனது அங்கே.        

Saturday, April 05, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 109 )

                       தெய்வ சாபமல்ல !  மனித சுபாவம் !!
"ச்சே, நாம பண்ணின பாவந்தான் பிள்ளையா வந்து பிறக்குதுங்கன்னு எவனோ ஒரு மகானுபாவான் சொல்லி வச்சிட்டுப் போயிருக்கிறானே, அவனுக்குக் கோயில்தான் கட்டிக் கும்பிடணும்" என்று வீட்டுக்குள் நுழையும்போதே வெறுப்புடன் சொல்லிக் கொண்டு வந்தார் வாசுதேவன்.
" ஏங்க .. என்னாச்சு ? " என்று கேட்டாள் கமலா முகத்தில் ஒரு அப்பாவித் தனத்தை தேக்கி வைத்துக் கொண்டு.
"உன் புத்திர பாக்கியத்தைப் பார்க்கப் போயிருந்தேன். பேரனைப்  பார்க்க ணும் போல இருந்துச்சு. அதான் பார்த்துட்டு வரலாம்னு ரமேஷ் வீட்டுக்குப் போயிருந்தேன்"
" ஏன், நீங்க போன நேரம் வீட்டில் யாருமே இல்லையா ? "
" எல்லாரும் இருந்தாங்க, உன் உத்தம புத்திரன் உட்பட.. லீவு நிறைய இருக்குதுன்னு இன்னிக்கு லீவு போட்டுட்டு இருக்கிறானாம். இதை உன் மருமகதான் சொன்னா. உன் புள்ளை வாயைத் திறந்து எதுவுமே சொல்லலே "
" அவன் என்னிக்கு வாயைத் திறந்து கலகலன்னு பேசியிருக்கிறான், நீங்க போனதும் இன்னிக்குப் பேசறதுக்கு.  இல்லே, நாம அவனைப் பேசத் தான் விட்டிருக்கிறோமா ?"
" என்னடி அதுக்கும் நான்தான் காரணமா ?"
"ஐயா சாமி ஆளை விடுங்க. நான் எது சொன்னாலும் இப்போ வம்பில் தான் முடியும் "
அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார் வாசுதேவன்.
பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள் கமலா.
ரமேஷுக்கு அப்போது ஒரு வயது இருக்கும். தத்தித் தத்தி நாலடி எடுத்து வைப்பதற்குள் குறைந்தது எட்டு முறையாவது விழுந்து எழுந்திருப்பான்.
காம்பௌன்ட் வாசலில் வாசுதேவனின் வண்டிச்சத்தம் கேட்டதும் வெகு வேகமாக தவழ்ந்து வந்து கிரில் கேட் கதவைப் பிடித்துக் கொண்டு எழும்பி நிற்க முயற்சி செய்வான்.
"ஏண்டி என்னை வீட்டுக்குள் விடக்கூடாதுன்னு உன் பிள்ளை கிட்டே சொல்லி வச்சிருக்கியா ? நான் எப்படி வீட்டுக்குள் வர்றது ? " என்ற வாசு தேவனின் இரைச்சலைக் கேட்டு வாசலுக்கு ஓடி வந்து ரமேஷை இடுப்பில் இடுக்கிக் கொண்டு கதவைத் திறந்து விடுவாள். அவர் வீட்டுக்குள் நுழையும் முன்பே அவர் மீது பாய்வான் ரமேஷ் .
"அடச் .. சீ ... என்னடி இது .. இவ்வளவு நேரம் கதவைப் பிடிச்சிட்டு இருந்தான். கதவிலே உள்ள அழுக்கு பூராவும் அவன் கையிலே . அந்த அழுக்குக் கையை  என் ஷர்ட் மேலே தேய்க்கிறானே. என் டிரஸ் வீணாப் போகுதே ... என்னடி வேடிக்கை பார்க்கிறே. அப்புறப் படுத்துடி அவனை,, நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறே ? "
" ஏங்க .. நம்ம காம்பௌண்டுக்குள் எத்தனையோ வண்டி வர்றது. ஆனால் உங்க வண்டி சத்தத்தை மட்டும் தெரிஞ்சு வச்சுகிட்டு  உங்களைப் பார்க்க ஓடி வர்றானே குழந்தை ... உங்களுக்கு அந்தப் பாசம் புரியலையா ? "
பதிலேதும் சொல்லாமல் அவளை முறைப்பார் வாசுதேவன். சப்த நாடியும் ஒடுங்கி,பாம்புப் பிடாரனின் பெட்டிக்குள் அடங்கும் பாம்பு போல தன்னைத் தானே சுருட்டிக் கொண்டு அடங்கிப் போவாள் கமலா
குடும்பத்தோடு வெளியில்  செல்வதே வெகு அபூர்வம். அந்த மாதிரி யான வேளைகளில்  அப்பாவின் தோளைத் தொட்டுத் தாவுவான் ரமேஷ் . உடனே கமலாவை இல்லாத நெற்றிக் கண்ணால் எரிப்பார் வாசுதேவன்  அதனால் முடிந்தவரை வெளியில் செல்வதையே தவிர்ப்பாள் கமலா  
குழந்தைக்கு மூன்று வயது ஆரம்பித்ததும் பள்ளியில் சேர்க்க வாசு தேவனை  துணைக்கு அழைத்தபோது, " ஏண்டி, இதற்க்கெல்லாம் நான் வந்து என்னோட நேரத்தை வீணடிக்க முடியுமா ? ஸ்கூல் எங்கே இருக்கு ன்னு உனக்குத் தெரியாதா? அங்குள்ள பார்மாலிட்டீஸ் என்னனு உனக்கு த்தெரியாதா ? படிச்சவதானே நீ ! இதற்க்கெல்லாம் நான் வந்து என்னோட நேரத்தை வீணடிக்க முடியுமா  ? " என்று கூச்சலிட்டார்.
"ஸ்கூல்க்கு போறதும் பார்மாலிட்டீஸ் ப்பாலோ  பண்றதும் எனக்கொரு பிரச்சினையே இல்லை.குழந்தை முதல்முறையாக ஸ்கூல்க்குள் காலடி எடுத்து வைக்கப் போகிறான்.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் ..."
"சேர்ந்து போய் நம்ம ஜோடிப் பொருத்தத்தை அங்கே காட்டிவிட்டு வரணுமா ? "
அதன்பிறகு ரமேஷை ஸ்கூலில் சேர்ப்பதில் ஆரம்பித்து, காலேஜில் அவன் எந்த  படிப்பில் சேரவேண்டும் என்பது வரை கமலாதான் முடிவு எடுத்தாள்.
ரமேஷ் ஸ்கூலில் படிக்கும்போது ஒவ்வொரு ஆண்டும் ... பேரன்ட்ஸ் டே நடக்கும் போதும்.. "டாடி .. என்னோட பிரெண்ட்ஸ் அவங்க டாடி மம்மி யை அழைச்சிட்டு வருவாங்க.  நீங்களும் வாங்க டாடி ... ப்ளீஸ் .." என்று கெஞ்சுவான்.
"அதுக்கெல்லாம் எனக்கு நேரம் கிடையாது "
"இல்லே டாடி ..இதுவரை நீங்க எங்க ஸ்கூலுக்கு வந்ததே கிடையாது . இந்தத் தடவை நீங்க கண்டிப்பா வருவீங்கன்னு நான் பிரெண்ட்ஸ் கிட்டே சொல்லியிருக்கிறேன் "
"ஓஹோ .. என்னை எதிர்த்துப் பேசி ஆர்க்யூ பண்ற அளவுக்கு ரொம்பப் பெரிய ஆளா ஆயிட்டியா நீ  .. இன்னொரு தடவை இப்படி ஆச்சுன்னா முதுகுத் தோலை  உரிச்சிடுவேன். செவன்த் ஸ்டாண்டர்ட் தாண்டலே. அதற்குள் இத்தனைத் திமிரா ? " என்று சொல்லி பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்ததைக்  கண்டு கமலா துடித்துப் போய் விட்டாள். அந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் எதிரில் கூட நின்றதில்லை ரமேஷ்.
"ஏங்க .. நீங்க ஓடி ஓடி உழைக்கிறது எங்களுக்காகத் தான்னு எனக்கு நல்லா தெரியும். வாழ்க்கைக்குப் பணம் தேவை. அது இல்லாவிட்டால் உலகத்தில் எதுவுமே இல்லைங்கிற உங்களோட நம்பிக்கையும் எங்களுக்குத் தெரியும். ஆனா  உங்க கிட்டே  நாங்க எதிர் பார்க்கிறது அன்பான நாலு வார்த்தைகள்தான்னு நீங்க எப்போ புரிஞ்சுக்கப் போறீங்க குழந்தையோட அன்பை, உங்க மேலே அவனுக்கிருக்கிற தவிப்பை எப்போதான் புரிஞ்சுக்கப் போறீங்க"ன்னு  கேட்க நினைத்து, அந்த கேள்வி யைத் தனக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்ட நாட்கள் எத்தனை எத்தனை !
படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்தபின் கல்யாணப் பேச்சை ஆரம்பித்த போது "அம்மா, கண்டிப்பா கல்யாணம் பண்ணித்தான் ஆகணுமா ? " என்று குழந்தைத் தனமாகக் கேட்டான் ரமேஷ்.
"என்னடா கேள்வி இது ? உனக்கு எங்களோட ஏற்ப்பாட்டில் விருப்பம் இல்லையா? நீ மனசுக்குள் யாரையாவது நினைச்சிட்டு இருக்கிறியா ? "
"இல்லேம்மா .. கல்யாணத்துக்கு வர அப்பாவுக்கு நேரம் இருக்கணும் .. அந்த சம்பவங்களினால் அப்பாவோட டிரஸ்  அழுக்காகாமே இருக்கணும்  " என்று சொன்னபோதுதான் அவன் அடிமனசிலிருந்த காயம் , அந்த ரணம், அது ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வலி கமலாவுக்குப் புரிந்தது.
அந்த மனுஷனுக்கு உன் மேலே அன்பு இருக்குடா .. அதை வெளிக் காட்டும் விதம்  அவருக்குத் தெரியலே. நமக்குத் தேவையான எந்த ஒன்றிலாவது அவர் நமக்கு எந்தவொரு குறையாவது வைத்திருக்கிறா ரா. அவர் வேலையில் அவருக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கும். அவர் ஒரு சூழ்நிலைக் கைதியா அங்கே இருந்து கொண்டிருப்பார். என்ன இருந்தாலும் நாம எல்லோரும் மனுஷ ஜென்மங்க தானே. நம்மோட கோப தாபங்களுக்கு ஒரு வடிகால் வேண்டும்தானே? அதை அவர் நம்ம வீட்டில் நம்மிடம்தானே காட்ட முடியும். அப்படிப் பண்றதாலே அவருக்கு ஒரு ரிலாக்ஸ்  கிடைக்கும்னா அதை நாம தாங்கிக்கிடலாமே " என்று கமலா சொல்லும்போது"அம்மா, நீங்க அப்பாவை விட்டுக்கொடுக்காமே பேசறீங்க.. சரி .. நானும் நீங்களும் அப்பாவைப் புரிந்து கொண்டதாகவே இருக்கட்டும். அவரோட இந்த இன்சல்ட்டை   வேறொரு வீட்டிலிருந்து வரும் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியுமா ? " என்று கேட்டான் ரமேஷ்   
"ரமேஷ் என்னோட சின்ன வயசிலே நான் படிச்ச ஒரு ஹிந்திக்கதையை சொல்றேன். ஒரு ஆளு .. வீட்டில் மனைவி, குழந்தைங்க. இவர் ஒருத்தர் சம்பாத்தியம்தான். வேறே எந்த சோர்ஸ்ம் கிடையாது. அவருக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க ஆசை. ஆபீஸ் .. பாங்க்ன்னு எங்கெங்கு லோன் கிடைக்குமோ அங்கெல்லாம்  அப்ளை   பண்ணி லோன் வாங்கி யாச்சு. இந்த சமயத்தில் அவருக்கு வேறொரு இடத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆகுது. இவர் ஒரு இடத்தில் .. மனைவி குழந்தைங்க ஒரு இடத்தில் .. இரட்டை செலவு.. வாங்கின கடனை வேறு அடைக்கணும். அதனால் எந்தெந்த விதத்தில் செலவை சுருக்க முடியுமோ  அந்தந்த விதத்தில் செலவை சுருக்கி  குடும்பத்தை ரன் பண்றார். லீவு நாளில் வீட்டுக்கு வந்தால் வீண்  பஸ் செலவு என்று நினைத்து வீட்டுக்கு அதிகம் வருவதி ல்லை. அந்த நாட்களில் ஓவர் டைம் வொர்க் பண்ணி பணம் சம்பாதித்தார். பண்டிகைகளை கிட்டத்தட்ட அந்த குடும்பம் மறந்தே போயிட்டுது. அவர் மனைவி, குழந்தைங்க அவரை ஆசையாக சினிமாவு க்கோ கோவிலுக்கோ கூட்டிட்டுப் போக சொல்லி கேட்பாங்க. தன்னோட கடனை சொல்லி, இவர் அதைத் தவிர்த்து விடுவார். எந்தவொரு சந்தோசமும் இல்லாமே வாழ அவரோட  மனைவி குழந்தைங்க பழக்கப் படுத்திக் கிட்டாங்க.. இப்படியே வருஷம் ஓடிப் போச்சு . இவர் ரிடைர் ஆனார். எல்லாக் கடனும் அடைஞ்சது போக கையில் பணம் இருந்தது . அதை அனுபவிக்க நேரமும் இருந்தது. அங்கே போகலாம் இங்கே போகலாம்னு எல்லாரையும் கூப்பிடறார். ஆனா யாரும் எங்கேயும் வர தயாரா இல்லே. அவங்க யாரும் இவரைப் பழி வாங்கிறதுக்காக அப்படி நடந்துக்கலே. அந்த வாழ்க்கை அவங்களுக்குப்  பழக்கப் பட்டுட்டதாலே அவங்களாலே அதை விட்டு வெளியே வர முடியலே. தண்ணியும் எண்ணையுமா தனித்து நிற்கிற நிலைமை. அதை அவராலே சகிச்சுக்க முடியலே. 'இவ்வளவு நாளும் தனியாத் தானே இருந்தேன். இனிமேலும் அப்படியே  இருந்துக்கறேன்'னு சொல்லி லெட்டர் எழுதி வச்சிட்டு அந்த வீட்டை விட்டுட்டு அந்த ஆளு  எங்கேயோ போயிடறார். உங்க அப்பா வோட செய்கை யைப்  பார்க்கிறப்போ எனக்கு இந்தக்கதைதான் ஞாபகம் வரும்  ரமேஷ் ஒவ்வொருமனுஷ குணம் ஒவ்வொரு மாதிரி ..."
"அம்மா ஒரே ஒரு கண்டிஷன். முதலில் ஒரு தனி வீடு பாருங்க எனக்கு . அப்புறமா பெண்ணைப் பாருங்க "
"சரிப்பா .. நீ இவ்வளவு இறங்கி வந்ததே போதும் " என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை கமலாவுக்கு.
ரமேஷுக்கு கல்யாணமானது குழந்தை பிறந்தது எல்லாமே தனிக் கதை. மகனிடம் காட்ட மறந்த பாசத்தை பேரனிடம் காட்ட மனசு தவிக்கிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை என்பதும் கமலாவுக்கு தெரியும்.இரண்டு பேர்  செய்வதுமே நியாயமாகப் படுகிறது அவரவர் இடத்தில் நின்று கொண்டு பார்க்கும்போது. தான் ஒரு சூழ் நிலைக் கைதியாக ஆக்கப்படும் போதெல்லாம் மனதில் தோன்றுவதை டைரியில் எழுதுவது கமலாவின் பழக்கம். டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தாள் 
" நேற்றைய நெருடல்களில் "இன்று" தொலைந்து போக 
   நாளைய  நல்வாய்ப்புகளெல்லாம் தொலைந்த அந்த 
   இன்றுக்காக அழும் ! தொலைந்த ஒன்றைத் தேடியலையும் !!!
   தேடல் ! தேடல் !! தேடல் !!!
   தேடுதல் - தெய்வ சாபமல்ல !
   மனித சுபாவம் ! "
முதுக்குப் பக்கம் ஏதோ நிழலாடுவது போல இருந்தது. திரும்பிப் பார்த்தாள். " ஏண்டி, உனக்கு கவிதை எழுதக் கூட வருமா ? தெரியுமா ? "
என்று ஆச்சரியத்துடன் கேட்டார் வாசுதேவன்.
"மனைவிக்கு என்னென்ன தெரியும் என்பது கூட தெரியாத ஒரு   மனிதரிடம் சேர்ந்து வாழ்ந்து  முப்பது வருட காலத்தை ஓட்டி விட்டாய். சபாஷ் கமலா " என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்  கமலா.