பிளாஸ்டிக் அரிசி விவகாரம் எங்கும் விவாதிக்கப்படுகிறது. இன்றைய எனது சந்தேகமே அது சம்பந்தமாகத்தான் .
கொஞ்சநாளைக்கு முன்பாக டீவியில் பார்த்த ஒரு காட்சி. இந்திய மாநிலம் ஒன்றில் பிளாஸ்டிக் அரிசி விற்பது தொடர்பான ஒரு காட்சி. பிளாஸ்டிக் அரிசியில் சமைத்த சாதத்தை சிறு உருண்டையாக உருட்டி அதை கீழே போட்டால் அந்த உருண்டை பந்து போல் துள்ளும் என்ற படமும் செய்தியும் பார்த்தேன்.
தமிழக அதிகாரி ஒருவர் சொன்னதாக ஒரு தகவல் டீவியில் வெளியானது. அதில் அவர் பிளாஸ்டிக் அரிசி கொதி நீரில் கரைந்து விடும் என்று சொல்லி இருந்தார்.
இப்போ உதாரணமா ஒன்றை பார்ப்போம். எல்லாமே பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் அது கரைந்து விடும். அது பற்றிய உண்மைத் தன்மையை நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் 100 கிராம் அரிசியில் 10 கிராம் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளது என்று வைத்துக் கொள்வோம். சமைக்கும்போது பிளாஸ்டிக் அரிசி மட்டும் கரைந்து போயிருந்தால், தண்ணீர் சற்று அதிகமாகிவிட்டது போலும் என்று நினைத்துக் கொண்டு அதை சாதத்தின் கஞ்சி என்றுதான் நினைப்போம். அப்படியிருக்க பிளாஸ்டிக் அரிசியைக் கண்டுபிடிப்பது எப்படி?
இரண்டு மாதம் முன்பாக எங்கள் வீட்டு குக்கர் சாதத்தில் தண்ணீர் அதிகம் கட்டி இருந்தது. அதை வடித்து எடுத்துவிட்டு சாப்பிட்டோம். அன்று கவனக் குறைவாக தண்ணீர் அதிகம் வைத்தது எனக்கு நன்கு புரிந்தது.
ஆனால் இனியொரு முறை அப்படி நடந்தால் அதை எனது கவனக்குறைவாக நினைக்க மனம் இடங்கொடுக்காது. சமைத்தது பிளாஸ்டிக் அரிசியோ என்ற பயம் ஏற்படும்.
அதனால் இது விஷயத்தில் தெளிவான தகவலை யாராவது தெரிவிக்க எனது இருகை கூப்பி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தமாதிரி வேலை செய்கிறவர்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடுரோட்டில் நாயை அடிப்பது போல் அடிக்க வேண்டும்.
(பழந்தமிழ்ப் பாடல் ஒன்றில் உள்ள அவலச்சுவை கொண்ட நகைச்சுவை வரிகள் : வறுமையால் வாடும் புலவர் சொல்கிறார் :
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைதான் எனக்குத்தான்
கொடுத்துதான் ரட்சித்தானா?)
நாட்டில் மழை என்பது நிறைய பேருக்கு மறந்து போய்விட்டது.
விவசாயம் பொய்த்து விட்டது. ஏழைகள் மட்டுமல்ல பணக்காரர்கள் நிலையும் அரிசி விஷயத்தில் என்ன ஆகுமோ என்ற கவலை எல்லாருக்குமே இருக்கிறது.
இதுபற்றி தீவிரமாக சிந்தித்த யாரோ ஒரு பைத்தியக்கார பொதுநலவாதிதான் மக்கள் மண்ணை கல்லை தின்பதற்குப் பதில் பிளாஸ்டிக் அரிசியை தின்னட்டும் என்ற நல்லெண்ணத்தில் (???!!!!!) பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறானோ ?
No comments:
Post a Comment