"ஏன்டா .. கையில் பாட புக்கை வச்சுகிட்டு வாசலை பார்த்துகிட்டே எவ்வளவு நேரந்தான் உட்கார்ந்திருப்பே? அப்படி என்னதான்டா யோசனை?" என்று கேட்ட படி மகனின் தலையில் குட்டினார் அப்பா.
"முயற்சி மட்டும் இருந்தால் போதும். கடவுள் அருள் இல்லாட்டாலும் எதை யும் செஞ்சு முடிச்சிடலாம்னு ஒருத்தர் சொல்றார். 'எல்லாம் அவன் செயல்.. அவன் விளையாட்டுனு பக்கத்து வீட்டு அங்கிள் அடிக்கடி சொல்றார். அட .. சாமியாவது பூதமாவதுனு அண்ணா சொல்றார் .."
"அதுக்கு என்ன இப்போ ?"
"சாமியை நம்பாதவன் சாமி இல்லவே இல்லைனு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க. சாமி இருக்கிறரார்னு சொல்றவங்க கூட அவங்கவங்களோட தேவைக்குதான் கும்பிடறாங்க. சாமி இல்லாமே மனுஷன் வாழ்ந்திடலாம். மனுஷங்க இல்லாமே சாமியாலே வாழ முடியுமானு யோசனை பண்ணிட்டு இருந்தேன்."
"ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்துச்சு ?"
"மனுஷங்களே இல்லாட்டா அவர் யாரை சோதிப்பார். யாருக்கு அவரோட அருளைக் கொடுப்பார். எல்லாம் என் திருவிளையாடல்னு யார்கிட்டே சொல்வார். நாம அதாவது மனுஷங்க யாருமே இல்லாட்டா கடவுளுக்கு ரொம்ப போரடிக்கும் தானே ?"
"நீயும் உன் சித்தாந்தமும் .. படிடா " என்று சொல்லி விட்டு வெளியில் கிளம்பி வந்தாலும், 'மனிதர்கள் இல்லாமல் கடவுளால் வாழமுடியுமா ? அவருக்கு போரடிக்குந்தானே!" என்ற கேள்வி அவரைக் குடைய ஆரம்பித்தது. யோசித்த படியே நடக்க ஆரம்பித்தார்.
No comments:
Post a Comment