"என்னப்பா... நடக்கிறது பட்டிமன்றமா இல்லே விவாதமேடையா ?" என்று கேட்டபடி பேரனுடன் வீட்டுக்குள் நுழைந்தவரிடம், "அதெல்லாம் இல்லேப்பா .. நம்ம அர்ஜுன் ஃ ப்யூஷர் பத்தி பேசிட்டு இருந்தோம். சொஸைட்டியில் நாலு பேர் மதிக்கிறமாதிரி அவனை உருவாக்கி கொண்டு வரணும். அதுக்கு இப்பவே விதை போடணுமே .. ஒரு டாக்டர்..ஒரு கலெக்டர்.. ஒரு ஐ.பி.எஸ் ஆபீஸரா அவனை கொண்டுவரணும்" என்ற மகனிடம், "மூணு ரோலையும் ஒருத்தர் எப்படி பண்ண முடியும்?" என்று அப்பா கேட்க, "இதிலே ஏதாவது ஒரு ரோல் " என்றான் மகன்.
"உன் பிள்ளை ஒரு அரசியல்வாதியா வருவான்."என்று சொன்ன தந்தையை ஆச்சரியமாகப் பார்த்தான் மகன்.
"ஆமாம்டா.. நீங்க ஆசைப்படறது ஒரு பக்கம் இருக்கட்டும். விளையும் பயிர் முளையிலே தெரியும்னு சொல்வாங்க. இப்போ நாங்க கோயிலுக்குத்தானே போயிட்டு வரோம். எல்லா சன்னதி முன்னாலேயும் நின்னு ஒரு கும்பிடு போட்டுட்டு அங்கிருந்து உடனே வெளியில் வந்த உன் பிள்ளை, ஆஞ்சநேயர் சன்னதியை விட்டு பிரிந்து வர மனமில்லாமே வந்தான். 'உனக்கு ஆஞ்சநேயர் மேலே அவ்வளவு பக்தியா'னு கேட்டதுக்கு, 'மத்த சாமியை எல்லாம் நாம்தான் கைகூப்பி கும்பிடறோம். ஆஞ்சநேயர் ஒருத்தர்தான் அவர் முன்னாடி நிக்கிற வங்களுக்கு வணக்கம் சொல்றார். அது எனக்குப் பிடிச்சிருக்கு.. நாம கும்பிடறது இருக்கட்டும். நம்மளை மத்தவங்க கும்பிடணும்னு சொல்றான். அதனால்தான் சொல்றேன் உன் பையன் ஒரு அரசியல்வாதியா வருவான் " என்று பெரியவர் சொல்ல மகனும் மருமகளும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
No comments:
Post a Comment