"என்ன ராஜு ஸார்.. பயங்கர டல் மூடில் இருக்கிறீங்க ? என்ன பிரச்னை?"
"ஒரு பூஜைக்கு கோமியம் வேணும். அதுபத்தி பேச வழக்கமா எங்க வீட்டுக்கு பால் சப்ளை பண்றவர் வீட்டுக்குப் போனேன். அங்கே ஒரு பசுமாடு பிரசவ வழியில் துடிச்சுக்கிட்டு இருந்துச்சு. மனுஷங்கன்னா உடம்புக்கு என்ன பண்றதுனு சொல்லவாவது செய்வோம். பாவம் வாயில்லா ஜீவன். அது படற வேதனை கண் முன்னயே நிக்குது. பறவைங்க முட்டை போட்டு குஞ்சு பொரிக்கிற மாதிரி மிருகங்களுக்கும் முட்டை போடற வசதியை கடவுள் ஏன் செய்யலே? இதுதான் என் மனசுக்குள்ளே ஓடிட்டே இருக்குது?" என்றான் வருத்தமான குரலில்.
"மிருகங்கள் ஏன் முட்டை போடறதில்லேன்னு நாம யாரிட்டே கேட்க முடியும். யாரைக் கேட்டாலும் 'அது இயற்கை'னு ரெடிமேடா ஒரு பதில் சொல்வாங்க."
அதுவரை அங்கு நடந்த உரையாடலை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த பியூன் "ஸார் இதெல்லாம் ஒரு மேட்டரா ? உங்க வீட்டு பசங்க கிட்டே கேளுங்க. நாம அசந்து போறமாதிரி ஒரு பதில் சொல்வாங்க" என்றான்.
அன்று இரவு வீடு திரும்பியபோது டீவி முன்பாக உட்கார்ந்து டிஸ்கவரி சேனல் பார்த்துக் கொண்டிருந்த மகனின் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டி, "ஹோம் ஒர்க் எதுவும் இல்லியா?" என்று கேட்டவன், காலை நிகழ்ச்சி நினைவுக்கு வர, "கண்ணா.. பறவைங்க முட்டை போட்டு குஞ்சு பொரிக்கிற மாதிரி மிருகங்கள் செய்றதில்லையே அது ஏன் ?" என்று கேட்டான்.
"ஓ .. அதுவா டாடி.. குஞ்சு வெளியிலே வர முட்டை மேலே பறவைங்க உட்கார்ந்து இருக்கும்தானே. அந்த மாதிரி மிருகங்கள் உட்கார்ந்தா முட்டை உடைஞ்சிடுமே .. அதான் " என்று ரொம்பவும் கேஷுவலாக சொன்ன எல் கே ஜி படிக்கும் மகனின் பதிலைக் கேட்டு அசந்துபோய் நின்றான் ராஜு
No comments:
Post a Comment