பக்கத்துக்கு வீட்டுப்பெண், "ஆன்ட்டி " என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வர படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்த பாட்டி, "அன்னிக்கு நீயும் உங்க அப்பாவும் படிப்பு விஷயமா வெளியூருக்குக் கிளம்பி போனீங்களே. என்னம்மா ஆச்சு ?" என்று கேட்க, "எனக்கு இடம் கிடைக்கலே" என்று பதில் சொன்னாள் அந்தப் பெண்.
"அடக்கடவுளே, காலைலே அம்புட்டு சீக்கிரமா கிளம்பிப்போயும் இடம் கிடைக்கலேன்னு சொல்லுதே. அப்படின்னா மத்தவங்க எல்லாரும் முந்தின நாள் ராத்திரியே வந்து இடம் பிடிச்சிட்டாங்களா? " என்று பாட்டி கேட்டாள் .
"அப்படி இல்லே பாட்டி .. ஒவ்வொரு படிப்புக்கும் இத்தனை ஸீட் , இடம்னு ஒரு கணக்கு வச்சிருப்பாங்க. அதை தாண்டி போயிட்டா யாருக்கும் படிக்க இடம் கிடையாது " என்றாள் அந்தப்பெண்.
"அட சண்டாளனுகளா .. எல்லாருமே உட்காந்து படிக்கிறாப்லே நிறைய சீட் போடறதுதானே. இதுவே எங்க கிராமத்துப் புள்ளைங்கன்னா பெஞ்சில் இடம் இல்லாட்டி கீழே உட்காந்து கூட படிக்குங்க. நீங்கள்லாம் பட்டணத்து புள்ளைங்க. கீழே உட்கார கூச்சப்படுவீங்க. அப்படி இருக்கக் கூடாது பாப்பா. பெஞ்சிலே உட்கார்ந்து படிக்க இடம் இல்லாட்டி கீழே உட்காந்து படிக்கேன்னு நீ சொல்லணும். நமக்கு படிப்பு தானே முக்கியம். எங்கே உட்காந்து படிக்கோம் என்கிறதா முக்கியம்?" என்று பாட்டி சொல்ல, "ஓ... கடவுளே " என்று தலையில் கைவைத்தபடி சோபாவில் உட்கார்ந்தவள், "ஆன்ட்டி..உள்ளே என்ன வேலை செய்யறீங்க? சீக்கிரமா வந்து என்னைக் காப்பாத்துங்க " என்று ரகசிய குரல் கொடுத்தாள்.
No comments:
Post a Comment