கேட் கதவைத் தாண்டி நடுவீதியில் வந்து சுருண்டு விழுந்தவனைத் தூக்கி விட்ட, அந்த வழியாக சென்று கொண்டிருந்த சிலர் "என்ன ஆச்சு ?" என்று கேட்டார்கள்.
தலையை ஆட்டியபடி நிதானத்துக்கு வந்த சுரேஷ் "என்ன ஆச்சு ?" என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டான்.
காலையில் சீனியர் ரிப்போர்ட்டர் கூட நடிகை மாலாஸ்ரீ வீட்டுக்குப் போனப்போ, "இதோ பாருப்பா.. நீ இன்னிக்குதான் வேலைக்கு சேர்ந்திருக்கிறே. முன் அனுபவம் கிடையாது. நான் எப்படி தூண்டில் போடுறேனு கவனிச்சு பாரு. சாயங்காலம் லதாஸ்ரீ வீட்டுக்கு நீ மட்டுந்தான் போறே. அவங்களை இன்டெர்வியூ பண்றே. நம்ம வாய் ஜாலத்தில்தான் அவங்க கிட்டே இருந்து வார்த்தையை கொண்டு வரணும். ஒரு பைசாவுக்கு லாயக்கில்லாத ஆள்னு தெரிஞ்சாலுங்கூட "உன்னை மாதிரி உலகத்தில் இன்னொருத்தர் உண்டா"னு புகழணும் தத்ரூபமா நடிச்சிருக்கீங்க.. முன் அனுபவமா?" அப்படி இப்படினு ஐஸை அள்ளி வைக்கணும்"னு சொல்லியிருந்தார். அவர் சொன்னதை அப்படியே ஃபாலோ பண்ணினேன். அந்த பொம்பளை நல்லாத்தான் பதில் சொல்லிட்டு இருந்துச்சு. கடைசியா சீனியர் சொன்ன மாதிரி "தத்ரூபமா நடிச்சிருக்கீங்க.. முன் அனுபவமா ?"னு கேட்டது மட்டும் நினைவிருக்குது. எப்படி வெளியில் வந்து விழுந்தேன் என்று யோசிக்க ஆரம்பித்தான் சுரேஷ்.
இதில் சுரேஷ் மறந்துபோன ஒரு விஷயம் மாலாஸ்ரீ நடித்தது "தாயன்பு" என்ற திரைப்படத்தில். லதாஸ்ரீ நடித்ததோ "கடை வீதி " என்ற படத்தில் விலைமாது வேடத்தில்.
No comments:
Post a Comment