உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்.
சேனல்களில் வெளியான ஒளிபரப்பு செய்திகளை நம்பி எங்கள் வசமுள்ள 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற நாய் படாத படுகிறோம். எங்களுக்கென்று வங்கிக் கணக்கு இருக்கிறது. நாங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். நீண்ட வரிசையில் நிற்கும் சக்தி எங்களுக்குக் கிடையாது. அதனால் இன்னும் பத்து பதினைந்து நாள் கழித்துப் போகலாம் என்ற முடிவில் இருந்தோம்.
ஒரு அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமே என்று உங்கள் அறிவிப்பை நம்பி அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்க்கு போய்க் கேட்டால் எங்கள் முகத்தைப் பார்த்து பதில் சொல்லக் கூட முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை குற்றம் சொல்லவில்லை. அவர்கள் வேலைப் பளு அப்படி. "சரிம்மா.. எங்களுக்குத் தேவையான இன்பர்மேசனை யாரிடம் கேட்கலாம்" என்று கேட்டேன். "அதற்கெல்லாம் தனி கவுன்டர் கிடையாது" என்ற அறிவிப்பு அலட்சியமாக வந்தது.
"ஒரு வாரத்துக்குப் பிறகு வாங்க" என்றார்கள்.
ஒரு வாரம் அல்ல ஒரு மாதம் கூட காத்திருக்க நாங்க ரெடி. ஆனால் எங்களது உடல்நிலை சூழ்நிலை காத்திருக்காதே.
ஐயா நாங்கள் பிச்சை கேட்கவில்லை. மாற்று ஏற்பாடு கேட்கிறோம். அதை சொல்ல செய்ய சம்பந்தப்பட்ட நபர்கள் தயாராக இல்லையே.
அதனால் தாமரையின் மலர் பாதம் பணிந்து இந்த வேண்டுகோளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
உங்களது கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்களுக்கு மிகச்சரியான விவரங்களை சரியானபடி நீங்கள் தெரிவித்தால் அதை அவர்கள் எங்களுக்கு சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
No comments:
Post a Comment