இதை தவிர்ப்பது எல்லாருக்குமே நல்லதுதானே!!
கலைத்துறையைச் சேர்ந்தவரா நீங்கள்? கதைக்கான ‘கரு’ மற்றும் சூழ்நிலைக்கேற்ற வசனத்தை உணர்ச்சிகரமாக எப்படி சித்தரிப்பது என்றெல்லாம் தடுமாறிக் கொண்டிருப்பவர்களா நீங்கள்?
கவலையை விடுங்கள்... உங்கள் பிரச்னை தீர குறைந்தபட்சம் ஒரே ஒரு வாரம் உங்கள் பெண்உதவியாளர்களை எலெக்ட்ரிக் ட்ரைனில் பயணிக்க சொல்லுங்கள். நீங்கள் போதும் போதுமென்று சொல்லுமளவுக்கு நிறைய டிப்ஸ் கிடைக்கும்.
நேற்றைய டாபிக் - அப்பன்காரனே ஆள் வச்சு பொண்ணைக் கொலை பண்ணிட்டு என்னமா நாடகம் ஆடறான்!
இன்றைய எலெக்ட்ரிக் ட்ரைன் பட்டிமன்றம் - நேற்று ஒளி பரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றியது. ரெகுலராக அந்த ப்ரோக்ராம் பார்க்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. ஒரு சேனலின் விளம்பர இடைவேளையில் மற்ற சேனல்களுக்கு மாறும்போது ஒரு சில சீன்கள் பார்த்ததுண்டு அவ்வளவுதான்.
நேற்று ஒளிபரப்பான சீன் நிறைய பேரைக் கோபப்படுத்தி இருக்கிறது என்பது தெரிந்தது. ட்ரெயினில் ஒரு பெண் அதுபற்றி பேச்சை ஆரம்பிக்க, பக்கத்திலிருந்து மற்ற பெண்களும் அழையா விருந்தாளிகளாக அந்தப் பேச்சில் பங்கு பெற்றதிலிருந்தே அவர்களின் கோபமும் அதிலுள்ள நியாயமும் புரிந்தது.
அந்த ப்ரோக்ராமை நான் பார்க்காததால் அதிலுள்ள முழு விவரமும் எனக்குத் தெரியவில்லை.ஓரளவு நான் கெஸ் பண்ணிக் கொண்டேன்.
டாபிக் - ஃபேஸ் புக்கில் பலரை நண்பராக்கிக் கொண்டு, ஒருவர் மாற்றி ஒருவராக பலரைக் கல்யாணம் செய்துகொண்ட பெண்ணை அந்த சேனல் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
அந்த ப்ரோக்ராம் பற்றிய பேச்சு நமக்குத் தேவையில்லாத ஒன்று. ஏனென்றால் ஒரு சிலருக்கு இந்த ப்ரோக்ராம் மூலம் தீர்வு கிடைத்திருப்ப தாக சொல்கிறார்கள். சாட்சிகளே இல்லாத கொலையில், கொலையாளி யை அவனது வாக்குமூலத்தின் மூலமே அடையாளம் காட்டியிருக்கிறார் கள். பாராட்டப்பட வேண்டிய சங்கதி.
ஆனால் நாலு சுவருக்குள் நடந்த தவறை வெளிச்சம் போட்டுக் காட்டி வியாபாரமாக்குவது சரியா? இது பொழுதுபோக்கும் நிகழ்ச்சியல்ல. சமுதாயத்தினைப் பழுது பார்க்கும் நிகழ்ச்சி என்றால், ஒரு சில விஷயங்களை சென்ஸார் செய்து ஒளிபரப்பி இருக்க வேண்டும். மாறாக ஹைலைட் பண்ணுவது நியாயமா?
ஒரு பெண்ணோ ஆணோ சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்த தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் அவர்கள் வாழ்வு மேலும் சீரழியுமே தவிர, சீர்ப்படாது. ஏனென்றால் இது மனங்கொத்தி மனிதர்கள் வாழும் சமுதாயம். வாய் நமத்துப்போய் இருக்கிறது. மெல்வதற்கு என்ன விஷயம் கிடைக்கும் என்று தேடியலைகிற வக்கிரபுத்தி கொண்ட கூட்டம் எங்கும் நிறைந்து வியாபித்திருக்கிறது. மனிதன் என்ற போர்வையில் மிருகங்கள் வாழும் உலகம் இது. அவல் தேடி அலைகிறவர்களின் வாய்க்குள் ஏன் அவலை நாமே கொண்டுபோய் வைக்க வேண்டும்?
சந்தர்ப்ப சூழ்நிலையால் கணவன் குழந்தையை விட்டுப் பிரிந்து வந்த பெண் வாழ வழி தெரியாமல், தனக்குத்தானே ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு (ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு) தனது வாழ்க்கையை நடத்தி இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்கள் அதுபற்றிநீதி கேட்கும் போது நாலு சுவர்களுக்குள் விசாரித்து முடிவு சொல்லி இருக்கவேண்டும். காவல் நிலையங்களில் அதைத்தானே
செய்கிறார்கள்.
செய்கிறார்கள்.
அதை விட்டுவிட்டு ஒரு பெண்ணை உட்கார வைத்து ஏகப்பட்ட கேலி கிண்டலோடு இளக்காரம் பண்ணி படம் பிடித்துக் காட்டும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது?
ஏற்கனவே அவள் தப்பானவள் என்பது தெரிந்துவிட்டதால் இனி அந்தப் பெண்ணை யாராவது வேலையில் சேர்த்துக் கொள்வார்களா? வீட்டில் சேர்த்துக் கொள்வார்களா? இவங்க ரிப்போர்ட்டர் போய் அந்தப் பொண்ணோட புருசன் கிட்டே ஒருநாள் பேசிட்டு வந்துட்டா பிரச்னை அதோடு தீர்ந்துடுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவன் குத்திக் காட்டிப் பேசினாலோ அல்லது அக்கம் பக்கத்தினர் அந்தப் புருசன்காரனை குத்திக் காட்டிப் பேசினாலோ அந்தக் குடும்பம் ஒரு தவறான முடிவைத்தானே எடுக்கும். ஏமாத்திப் பிழைக்கிறதை தொழிலா வச்சிருந்தவ, அதுவும் முடியாதபோது விபசாரத்தொழிலுக்குத்தானே போவா. அந்த சூழ்நிலை க்கு அவங்களைத் தள்ளுவது சேனல்கள்தானே. அவ வயித்துப் பொழைப்புக்குக் கேவலமா எதையோ செய்து பிழைக்கிறானு சொன்னா, அந்தக்கேவலத்தைப்படமாக்கிக் காசுபண்றவன்தானே படு அயோக்கியன் என்பதுதான் ட்ரைனில் பட்டிமன்றம் நடத்திய பெண்களின் வாதம்.
ஒரு குடும்பத்திலே வருஷக் கணக்கா இருக்கிற பிரச்சினை இவங்க கிட்டே உட்கார்ந்து பேசினாலே தீர்த்துடுமாம். செட்டுக்குள்ளே தலை யாட்டிட்டு கிடைச்ச காசை கையில் வாங்கிட்டு வெளியில் போனதும் அவனவன் பழையபடிதான் இருப்பான்.
‘கோர்ட்டில் கேஸ் நடந்தால் ரெண்டு பக்கம் உள்ளவங்க சொல்றதயும் ஜட்ஸ் அய்யா அமைதியா கேட்பார். அவர் முகத்திலே எந்த உணர்ச்சியுமே இருக்காது. இங்கே ஜட்ஜ் அம்மா துள்ளுறாங்க. துடிக்கிறாங்க. ஆவேச ஆட்டம் போடறாங்க. ரொம்ப நல்லா ஆக்ட் பண்றாங்க ’ - இதுவரைதான் என்னால் கேட்க முடிந்தது. அதற்குள் நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதால் முழுப்பேச்சையும் கேட்க முடியவில்லை.
No comments:
Post a Comment