Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, December 10, 2015

Dear Viewers,

                                                         மாமழை போற்றுதும் !!
எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறேன். எந்தவொரு விஷயத்துக்குமே எதிர்மறையான ஒரு கருத்து உண்டு. ஒவ்வொரு பொருளுக்கும் மறுபக்கம் உண்டு. எனக்கு சரி என்று  தோன்றுவது உங்களுக்குத் தப்பான ஒன்றாக தோன்றலாம். எனது கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்கள் இஷ்டம்.
மழை நிலவரத்தை 2015, நவம்பர் 30க்கு முன், நவம்பர் 30க்குப் பின் என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். 18.11.2015 ல் இதே ப்ளாக்கில் என்னுடைய மழை நாள் அனுபவங்களைப் பதிவு செய்திருந்தேன். அதன் ஒரு தொகுப்பு 15.12.2015 அவள் விகடனிலும் வெளியாகியுள்ளது. டிசெம்பர் மாத மழையில் எங்கள் பிழைப்பு நாய்ப் பிழைப்பாக இருந்தது. அதைக் compare பண்ணும்போது 18.11.2015ல் பதிவான விஷயங்கள் அனைத்துமே ஒரு தூசிக்கு சமம்.
கீழே வருவது எனது எண்ணங்கள் : 
1. இதே ப்ளாக்கில் 07.12.2015 அன்று ஒரு புகைப்படத்துடன் எனது நன்றியைப் பகிர்ந்திருக்கிறேன். அந்தப் படம் எடுக்கப் படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாக தாம்பரம் சானடோரியத்திலிருந்து எங்களைத் தேடி வந்த எனது தம்பியும், எனது மூத்த சகோதரியின் பையனும் சிரித்துக் கொண்டே சொன்ன ஒரு விஷயம். "அக்கா, நானும் சிவாவும் டூ வீலரில் வந்தோம். உங்க ஏரியாவுக்குள் வர முடியலே. வண்டியை ஒரு ஓரமா போட்டுட்டு படகுக்கு காத்திருந்தோம். படகு வந்ததும் கையில் காமிரா வச்சிட்டு நின்னுட்டு இருந்த ஒருத்தன் முதலில் ஏறினான். அவன் பத்திரிக்கைக்காரனா இல்லாட்டா ஏதாவது சேனல் ஆளா என்பது தெரியலே. அவன்   ஏறினதும், கீழே நின்னுட்டு இருந்த ஒருத்தன் , 'நாங்க இங்கே சாகிறோம். உனக்கு படந்தான் முக்கியம்மா போச்சான்னு கேட்டு அவனை அடிக்கவே போயிட்டான். உடனே மற்ற கூட்டமும் கத்த ஆரம்பிச்சதும் அவனும் பயந்து போய் கீழே இறங்கிட்டான். "
அந்தப் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே பரிசல் கொண்டு வந்து முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்கள் எங்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றார்கள். கிட்டத் தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம். நாங்கள் பரிசலில் உட்கார்ந்து வர, 10 பேருக்கும் மேலாக பரிசலைத் தள்ளியபடி வந்தார்கள். நாங்கள் கீழே இறங்கி வரும்போது எடுக்கப்பட்டதுதான் 07.12.2015 அன்று நான் பதிவு செய்திருந்த படம். அந்தப் படம்தான் நாங்கள் உயிரோடு இருப்பதை எங்கள் உறவுகளுக்கு அடையாளம் காட்டி இருக்கிறது .
(ஒருத்தரைக் காணும்னு தேடும்போது அவர் கிடைத்து விட்டால் கிடைப்பது ஒருவித சந்தோசம்.  ஏதாவது விபரிதம் நடந்து முடிந்து  விட்டது என்கிற விஷயம் தெரியவந்து விட்டால் அது ஒருவித சோகம். இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமல் மனம் அலை பாய்வதை வெறும் வார்த்தைகளால்  விவரிக்க முடியாது. போனில் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் எனது தங்கையும் எனது மூத்த சகோதரியும் இரவு முழுக்க பரிதவித்துப் போயிருக்கிறாங்க . மறுநாள் காலையில் எனது அக்கா வீட்டுக்குப் போய் "நாங்கள் இருக்கிறோம்"னு அட்டெண்டென்ஸ் கொடுத்துட்டோம். தினமலரில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் எனது தங்கை நிம்மதி அடைந்திருக்கிறாள்.
இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் , "அறிவு ஜீவிகளே, உங்கள் பகுதி சம்பவங்களை ஒருவன் படம் பிடிக்க வருகிறான் என்றால், அது அவர்களுக்கு லாபமோ நஷ்டமோ அதை விட்டுத் தள்ளுங்கள் . பொது மக்களாகிய நமக்கும் அது பலவிதத்தில் நன்மை செய்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.  
2. அனைத்து மத கடவுளர்களும் சேர்ந்து ஒரு மீட்டிங் போட்டார்கள். அந்த மீட்டிங்கில் ஒவ்வொரு கடவுளும் சொன்னவொரு விஷயம், கவலைப் பட்டவொரு விஷயம் என்னவென்றால் : இந்த மனிதர்கள் எல்லோரும் நம்மை  நம்புகிறார்கள் . வழிபடுகிறார்கள். நம்முடைய பெயரை சொல்லி ஏன் இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லையே என்பதுதான். கடவுளர்கள் மனிதர்களுக்காக கண்ணீர் விட்டார்கள். அந்தக் கண்ணீர், மாமழையாகப் பொழிந்து அனைத்து மனித இதயங்களையும் ஒன்று சேர்த்து விட்டது. மழையைக் கண்டு மனிதர்கள் அழுதார்கள். ஆனால் மனிதர்களுக்கு ஏற்பட்ட நேசத்தை நினைத்து கடவுளர்கள் சந்தோசப் பட்டார்கள். யார் யார் எந்த மதம் எந்த ஜாதி என்றெல்லாம் கவலைப் படவில்லை. அழுகிற விழிகளைத் துடைத்து விட வேண்டும் என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் எழுந்தது. இயற்கை, தனது வலிய கரங்களால் மனிதர்களை அடிக்கும் போதுதான் மனிதர்கள் ஒன்று படுவார்கள் என்றால்  "ஏ மாமழையே  நீ அவ்வப்போது வந்து உன் வேகத்தைக் காட்டி விட்டுப் போ. மாமழை போற்றுதும் யாம் !!"
3.இந்த மழை நிறைய விஷயங்களை நமக்குப் புரிய வைத்துள்ளது. விவசாயிகள் ஏழை பாழைகள் வயிற்றில் நெருப்பைக் கொட்டிய மழை, கூலித் தொழிலாளிகள் வாகன ரிபைர் செய்கிறவர்கள் வயிற்றில் பாலை வார்த்து விட்டுப் போயிருக்கிறது.  எங்களை பரிசலில் கொண்டு வந்து சேர்த்தவர்களிடம் (முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்கள்) 500 ரூபாயைக் கொடுத்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்கள்."தப்பாக நினைக்காதீங்க. நீங்க என் பிள்ளை மாதிரி. மழைத் தண்ணீரில் நிக்கிறீங்க. சூடா ஒரு வாய் காபி குடிக்க வச்சுக்கோங்க " என்றேன். "இல்லேம்மா. எங்களுக்கான சாப்பாடு தனியாக தயாராகிறது . வேண்டாம் " என்று சொல்லி வாங்க மறுத்து விட்டார்கள்.  அவர்கள் எங்களை இறக்கி விட்ட இடத்திலிருந்து எனது சகோதரியின் வீடு 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. "இங்கேயே இருங்க. வீட்டில் போய்க் காரை எடுத்துட்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு எனது தம்பி அங்கிருந்து சென்று விட்டார். தாம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கோவில் முன் நின்றோம். கோவிலுக்கு இருபுறமும் பழக்கடை . நாங்கள் தள்ளாடி வருவதைப் பார்த்த ஒரு பழக்கடைக்காரர், பழம் வைக்கும் பிளாஸ்டிக் கூடையைக் கவிழ்த்துப் போட்டு எனது அம்மாவை அதில் உட்கார சொன்னார். சிறிது நேரத்தில் மழை ஆரம்பித்து விட்டது. அம்மா குளிரில் நடுங்க ஆரம்பித்து விட்டாள். அருகிலிருந்து மற்றொரு கடையில் கூடாரம் இருந்தது. அங்கு மழைத்தூறல் விழவில்லை. நான் அவனிடம் போய் " இந்த அம்மாவை கொஞ்சநேரம் இங்கு உட்கார வைக்கிறேன் .இப்போ கார் வந்துடும். நாங்க போயிடுவோம் " என்றேன். "வியாபாரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் " என்று சொல்லி மறுத்து விட்டான். தம்பி வருவதற்குள் அம்மா போய்ச்சேர்ந்துவிடக் கூடாதே என்ற பயத்தில்  ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தோம். 3 கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு நான் கொடுத்த பணம் 500 ரூபாய். (ப்ளைட் செர்விஸ் இருந்திருந்தால் அதில் போயிருந்திருக்கலாம்).ஒரு சில நிமிட நேரங்களுக்குள்ளாக இருவேறு மாறுபட்ட குணமுடைய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பை மாமழை தந்தது
வீட்டை சரியாகப் பூட்டினோமா இல்லையா என்பதுகூட தெரியாமல் பரிசலில் ஏறிவிட்டதால்  (நான் எங்கே ஏறினேன். சிறுகுழந்தையை தூக்குவது போல எங்களைத் தூக்கி பரிசலில் வைத்தார்கள். என் காலில் இருந்த செருப்பு கழண்டு ஓடியது. அதை எடுக்கக் குனிந்தேன். "இருங்க." என்று சொல்லி கொஞ்சமும் கூச்சப்படாமல் அதைக் கைகளால் எடுத்துக் கொடுத்தார்கள். என்னுடைய அம்மா செருப்பைக் கைகளில் தூக்கக் கூட நான் அறுவெறுப்பு அடைவேன். நமக்கு கொஞ்சம் கூட ரத்த சம்பந்தம் இல்லாத யாரோ ஒருவர் இப்படி செய்கிறார்களே என்று நினைக்கும் போது  மனதில் ஒரு பாரம் ஏறியது.) மறுநாள் வீட்டைப் பார்ப்பதற்காக வந்தோம். சிறிது நேரம் சுத்தம் செய்யும்போதே, ஏரித் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. எல்லாரும் இந்த இடத்தை விட்டு ஓடுங்க என்ற அறிவிப்பு வந்ததும்  ஒரே ஓட்டமாக பஸ் ஸ்டாப் வந்தோம். எல்லா ஆட்டோவும் full  லோடு. அந்த வழியாக வந்த ஒரு "குட்டி யானை " எங்களுக்கு இடம் கொடுத்தது. தாம்பரம் வந்ததும் பணம் கொடுத்தோம். வாங்க மறுத்து விட்டார்கள்.
இன்று காலையில் முஸ்லிம் நண்பர்கள் சிலர் வந்து ஒவ்வொரு வீட்டுக்கும் போர்வை கொடுத்தார்கள். அவர்களிடம் "நீங்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கேட்டேன். "ஏன் ?" என்ற கேள்வி வந்தது.  என்னுடைய ப்ளாக்கில் இதை பிரசுரித்து நன்றி சொல்வேன் என்றேன். உங்கள் நன்றி எங்களுக்கு தேவையில்லை என்று சொன்னார்கள். நான் ரொம்பவும் வற்புறுத்தியபோது,"மீனம்பாக்கத்தில் இருந்து வருகிறோம்"என்றார்கள்.கோவிலுக்கு  ஒருtube light வாங்கிப் போட்டால் கூட  அந்த லைட்டின் ஒளியே தெரியாதபடி அதை வழங்கிய வரின் முகவரி அங்கு பதிவு செய்யப்பட்டிருக்கும். வீடு தேடி வந்து உதவி விட்டு பேரைக் கூட சொல்லாமல் ஓடுகிறார்கள். இப்படியும் சில மனிதர்கள்.  இந்த இரண்டு நாட்களில் ஆட்டோவுக்கு 12 கிலோ மீட்டர் தூர பயணத்துக்கு நான் செலவு செய்தது 1250 ரூபாய். 
வீட்டுக்கு அருகிலேயே உள்ள கிறிஸ்தவ அமைப்பும் token கொடுத்து அங்கிருந்த பொருட்களை  எல்லோருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது. நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் சிலர் தவிக்க, (குறிப்பாக பால் பாக்கெட்) வீட்டுக்குள் யாராவது இருக்கிறார்களா இல்லையா என்பது தெரியாமல்  வீட்டு வாசலில் பால் பாக்கெட்டைப் போட்டு விடுகிறார்கள். எனது சகோதரியின் வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு நான் வரும்போது எனது வீட்டு வாசலில் 3 பாக்கெட் பால் கிடந்தது. ஆனால் எதையும் use பண்ண முடியாமல் இருந்தது.  அந்தந்த ஏரியாவுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்கள் கூட பாதிக்கப்பட்ட இடங்களில் நின்று கொண்டு   பொருட்களை வாங்கி செல்லும் கொடுமையும் நடக்கிறது.  
4.அரசு ஊழியர்களை அனைவரும் குறை சொல்வதை டீவீயில் பார்த்தேன். ஒருசில இடங்களில் அவர்கள் இருந்திருக்கிறார்கள். பலருக்கு அது தெரிய வரவில்லை. எங்கள் குடும்ப நண்பர் ஒருவரிடம் முன்பின் தெரியாத ஒரு முஸ்லிம் அமைப்பு உதவிக்கு வருகிறது. இந்த பகுதி   government officials  யாரும் கண்ணிலேயே படவில்லையே என்றேன். அதற்க்கு அவர், உங்களை பரிசல் இறக்கிவிட்ட இடத்தில் நின்று கொண்டு இருந்தது ஒரு I.A.S. OFFICER. பக்கத்திலேயே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மப்டியில் நின்று கொண்டிருந்தார். அவங்க யாரும், அவங்க யாருங்கிறதை காட்டிக்கலே, அவ்வளவுதான்   என்றார். 
ஒரு சிலர், அவங்களுக்கு சம்பந்தமே இல்லாத இடத்தை   ஆக்கிரமிப்பு செய்தபோது,  இவர்களுக்கு சாதகமாக எல்லாம் செய்து கொடுத்த அரசு ஊழியர்கள் அப்போது இவர்களுக்கு கடவுளாகத் தெரிந்தார்கள். ஒரு சிலரின் பேராசையால் ஒட்டு மொத்த ஊரும் பாதிக்கப் படுகிறதே அதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. சென்னையில் எத்தனையோ ஏரிகள் இருந்ததாக கணக்கெடுப்பு சொல்கிறது. அதையெல்லாம் திரும்பவும் கொண்டு வருவோம் என்று களத்தில் இறங்கினால் அதற்க்கு எத்தனை பொது மக்கள் ஆதரவு தருவார்கள். எத்தனை கட்சிகள் ஆதரவு தரும் என்பதை யாராவது கேட்டு சொல்லுங்களேன். 
ஆறுமாதத்தில் வீணாகி விடும் லேப்டாப் , அடுப்பு லொட்டு லொசுக்கு எல்லாத்துக்கும் சாலை மறியல் பண்ணின ஜனங்களில்  எத்தனை பேர் உங்கள் பகுதியின் சுத்தம் சுகாதாரம் பற்றி கவலைப் பட்டீர்கள்? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.  
இளைய சமுதாயமே, மனித நேயம் உள்ளவர்களே,
இனிமேலாவது ஒருத்தர் மேலே ஒருத்தர் குறை சொல்லி, தான் மட்டும் தப்பிக்கிற பொழைப்பை மறந்துவிட்டு இனி வரும் காலங்களில் என்ன செய்யலாம் என்பதை யோசிப்போம்.  
பிளாஸ்டிக் பைகள் மழைநீர் தேக்கத்துக்கு ஒரு காரணமாக சொல்லப் படுகிறது. அந்த மாதிரி பைகளில் பேக் செய்யப் படும் பொருள்கள்தான் சிந்தாமல் சிதறாமல் பாதிக்கப்பட்டோர் கைகளுக்குப்போய்ச் சேருகிறது. வீடுகள் மட்டுமல்ல. வணிக வளாகங்கள், சிறு கடைகளும் பாதிக்கப் பட்டுள்ளது. அந்த இடங்களில் பிளாஸ்டிக் பைகளில் உள்ள பொருட்கள் தப்பி விட்டன. மற்றவை அழிந்து விட்டன. அதனால் பிளாஸ்டிக் பை பிரச்சினைக்கு மாற்று வழி கண்டு பிடியுங்கள்.
பால் இல்லாமல் தவித்தோர் பல ஆயிரம் பேர் . மூலாதாரமான பசு என்ன ஆச்சு என்பது பற்றி எத்தனை பேர் யோசித்தோம். பசுவை லட்சுமி என்போம். நம் உயிர் காக்க நாம் முனைந்த வேளையில் லட்சுமி பற்றி கவலைப் பட்டோர் எத்தனை பேர். பருவ நிலை மாற்றத்தால் இதே கதை மீண்டும் தொடரும் என்கிறார்கள் . அதற்க்கு முன்பாக லட்சுமியைக் காப்பது எப்படி என்று யோசனை செய்து வையுங்கள்.  
உதவிப் பொருட்கள் வழங்கப் படும்போது "வலுத்தவர்கள்", தங்கள் கையில் கிடைப்பதை சுருட்டிபங்கு போட்டுக் கொள்கிறார்கள். "இளைத்தவர்கள்"  மீதும் கருணை காட்டுங்கள். ஒரு பறவையிடம் உள்ள பண்பு கூட மனிதர்களிடம் இல்லை என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. 
எனக்கு நிறைய காக்கா தான் ப்ரெண்ட்ஸ். அதுங்களுக்காக snacks வாங்கி வருவேன். எங்கள் ஆபீஸ் காஷியர் பேங்க் போகும்போதெல்லாம்  பேங்க் அருகிலுள்ள அடையார் ஆனந்த் பவனில் snacks வாங்கி வர சொல்லுவேன். ஒருமுறை அவர், "இவ்வளவு ஆயில் item சாப்பிடாதீங்க. உடம்புக்கு கேடு "என்றார். அதைக் கேட்டு சிரித்த எனது தோழி, "அவங்க வாங்கி வர சொன்னது அவங்க வீட்டுக்கு வரும் காக்கா கூட்டத்துக்கு " என்றாள். அதன்பிறகு அவர்  "காக்கா கூட்டத்துக்கு பெட்டிக்கடை மிக்சேர் போதும். நான் வாங்கிட்டு வர மாட்டேன் "என்பார். இப்போதும் எங்கள் வீட்டில் காக்காவுக்கு தினமும் snacks உண்டு. மழை என்பதால் காக்கா பசியாக இருக்கும் என்று நினைத்து வீட்டிலிருந்த தீபாவளி பலகாரம் அனைத்தையும் எடுத்து வைத்தேன். ஒரு பெரிய கூட்டமே வந்தது. ஆனால் ஒரே ஒரு பெரிய காக்கா வரவும் மற்ற காகம் பயந்து போய் ஒதுங்கி விட்டன."சனியன் , இதுவே எல்லாத்தையும் தின்னுடும் போல. மற்ற காக்கைக்கு எதுவும் கிடைக்காதே" என்று நான் நினைக்கும்போதே , முதலில் வந்த பெரிய காகம், பண்டங்களை இருமுறை கொத்திவிட்டு தள்ளி நின்று கொண்டது. அடுத்தாற்போல ஒரு காகம் வந்தது. அதுவும் இரண்டு வாய் கொத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டது. இப்படியே எல்லா காகமும் செய்ததைக் கண்டு மலைத்துப் போய்விட்டேன்.  இப்பவும் கேட்கிறேன்: " காக்கா கூட்டத்தை பாருங்க !. அதுக்கு இந்தப் பழக்கத்தைக் கத்துக் கொடுத்தது யாருங்க? அது நம்ம கிட்டே இல்லாமே போனது ஏனுங்க  ?"
அடுத்த மழைக்கு முன்பாக, அது வரும் முன் நம்மை நாமே காக்க, ஏதாவது செய்வோமே. அதற்க்கு இப்போதிருந்தே யோசிக்க ஆரம்பிப்போம்.

No comments:

Post a Comment