கீழே வருவது face book நண்பருக்கு நான் கொடுத்த comment . அது உங்கள் பார்வைக்கும் :
MGR நடித்த ( பழைய ) படங்களில் பாடல்கள் அத்தனையும் அருமையாக இருக்கும். சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகள் பாடல்களில் விமரிசிக்கப் படும். "கேளம்மா சின்னப் பொண்ணு கேளு " என்ற பாடலில் வரும் "ஏழை மனம் கோபப் பட்டால் என்னென்னவோ நடக்கும் " என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நடிப்பில் நம்முடைய சிவாஜியை மிஞ்ச ஆள் கிடையாது.emotional song அவருடைய படங்களில் அதிகம் இருக்கும். MGR, சிவாஜி என்ற இந்த இரண்டு துருவங்கள் திரை உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் தனக்கென்று ஒரு பாணியை வைத்திருந்த ஜெமினியை மிகவும் பாராட்ட வேண்டும். இவர்கள் இருவரின் படங்களுக்கு ஈடு கொடுத்து ஜெமினி நடிப்பில் வெளியான படங்களும் வெற்றி நடை போட்டது. MGR, சிவாஜிக்கென்று தனியாக ரசிகர்கள் இருந்த கால கட்டத்தில் இவர்கள் இருவரின் ரசிகர்களும் ஜெமினி கணேஷின் படங்களை ரசித்தார்கள். அவர் நடித்த படங்களில் இடம் பெற்ற "காலங்களில் அவள் வசந்தம் ", " சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ " , "நிலவே என்னிடம் நெருங்காதே " போன்ற பாடல்கள் காலத்துக்கும் அழியாதவை. A.M RAJA, P B ஸ்ரீநிவாஸ் -இவர்கள் இருவரின் குரலும் ஜெமினிக்கு ரொம்பவும் suit ஆகும்.
MGR, சிவாஜி, இருவரையுமே அவர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் நான் நேரில் பார்த்திருக்கிறேன்.ஜெமினியை பார்க்கவில்லை என்ற குறை இருந்தது. எனது உறவினர் ஒருவரை G G HOSPITAL ல் சேர்த்திருந்தார்கள். அவரைப் பார்க்க சென்ற நானும் எனது சகோதரியும் அந்த campus உள்ளே நுழைந்து விட்டோம். ஆனால் கிளினிக் உள்ளே போக வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். அங்குள்ள பங்களாவில் ஒருவர் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் எழுந்து வந்து என்னவென்று விசாரித்தார். நாங்கள் விஷயத்தை சொன்னதும், "இது வீடும்மா . ஆஸ்பத்திரிக்கு பாதை அங்கே இருக்கிறது. இப்போ நீங்க இந்தப் பக்கம் வந்திட்டதாலே இந்த gate வழியாக போயிடுங்க. இனிமே வரும்போது அந்தப் பாதை வழியாக வாருங்கள்" என்று சொல்லி விட்டுப் போனார். சரி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைக் கடந்து வந்ததும், எனது சகோதரி " ஏய் ... அவர் ஜெமினி கணேஷ். G G hospital கமலா செல்வராஜோடது . அவங்க இவர் பொண்ணு தானே . இது ஜெமினியே தான் " என்றாள். அதைக் கேட்டதும் மீண்டும் ஓடிப்போய் அவரிடம் பேசும் ஆசை இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று போக விடாமல் தடுத்தது. அந்த சந்திப்பு முடிந்த சில நாட்களில் அவ்வை ஷண்முகி படம் வெளியானது.
ஆனால் எனக்கு ஜெமினியை பிடிக்காது. பிறகு என்னங்க, எந்த நேரமும் சரோஜாதேவியை ஏமாற்றுவதையும் அழவைத்து வேடிக்கை பார்ப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தால் யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்? (கல்யாண பரிசு, தாமரை நெஞ்சம் , ஆடிப் பெருக்கு என்று நீள பட்டியல் போடலாம். ) எனக்கு சரோஜாதேவி என்றால் உயிர். ஆனால் நான் அவரை நேரில் பார்த்ததில்லை. சக்தி விகடன் மூலமாக திரு.இறையன்பு I A S அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது முடிந்த பின், சரோஜாதேவியை சக்தி விகடனுக்காக சந்திக்கும் எண்ணம் இருந்தால் அதில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லி வைத்தேன்.
ஸ்கூலில் படிக்கிற காலத்தில், ஒருநாள் "நீங்க எல்லாரும் என்னவாக வரணும்னு ஆசைப் படறீங்க ?ஒவ்வொருத்தரா சொல்லுங்க " என்று டீச்சர் சொல்ல, சக தோழி ஒருத்தி ,"டீச்சர் .. இவ சரோஜா தேவி வீட்டுக்கு வேலைக்காரியா போகணும்னு சொல்வா .. அப்பத்தான் அவங்க வீட்டிலிருந்துகிட்டு அவளை தினமும் பார்க்க முடியுமாம். எங்ககிட்டே தினமும் இதைத்தான் சொல்லுவா" என்று சொல்ல, டீச்சர் பிரமித்துப் போய்விட்டார்கள் . "அப்படியா ?" என்று என்னிடம் கேட்க "ஆமாம் " என்ற நான் வெட்கத்தில் நெளிந்தேன்.
ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களில் என்னுடைய தோழி ஒருத்தி அவளுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் " சரோஜாதேவி யோட பழைய படம் ஒண்ணு இருக்குது. நீ இத செஞ்சு தந்தால்தான் அதை நான் உனக்குக் காட்டுவேன் " என்று சொல்லி சொல்லியே தனது காரியத்தை சாதித்துக் கொள்வாள். எத்தனை முறை ஏமாந்தாலும் எனக்கு புத்தி வராது. அவ சொல்வதை செய்து கொடுப்பேன்.
அதிலும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்தது.
No comments:
Post a Comment