Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 21, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 095 )

                      ஒண்ணுமே புரியலே உலகத்திலே !
"ஸார்,உங்க மொபைலில் இருந்துதான் ரிங் வருது போலிருக்கு. என் னோட மொபைலிலும் இதே  ரிங் டோன்தான் " என்றார் ஒருவர் தன்னு டை ய மொபைலை சரி பார்த்தபடியே 
" என்னுதுதான்னு எனக்குத் தெரியும் ஸார். முதல் ரிங் வந்ததுமே நான் ட்ராபிக்கில் மாட்டிட்டு நிற்கிற விஷயத்தை இன்பார்ம் பண்ணியாச்சு . அதுக்குப் பிறகும் மாறி மாறி நம்பரை அழுத்திகிட்டே இருந்தால், நான் என்ன பறந்தா போக முடியும் ? " என்றான் சரவணன் அலுப்புடன் 
"அப்படின்னா சுவிச் ஆப் செய்றதுதானே ? "
"வேறு ஏதாவது முக்கியமான கால் வந்தால், தெரியணுமே. அதுக்காகத் தான் சுவிச் ஆப் பண்ணலே . என்ன காரணத்துக்காக நிற்கிறோம் என்பது தெரியாமலே நிற்கிறோமே, கொடுமை சார் இது " என்று அருகிலிருப்பவ ரிடம் அலுத்துக் கொண்ட சரவணன், வண்டியை விட்டு இறங்கி எட்டிப் பார்த்தான். கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை வண்டிகளின் வரிசை மட்டு மே தெரிந்தது.
அந்த இடத்தை விட்டு மாற்று வழியில் போக யோசித்தாலும்   வண்டியை ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியாதபடி சரவணனின் வண்டிக்குப் பின்பாக வண்டிகள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. இதே ரோட்டில் தான் குருவின் மாமனார் கடை இருப்பது நினைவு வந்தது. செல் போனில் குருவை அழைத்தான்
"குரு, நான் வடபழனி பக்கம் ட்ராபிக்கில் மாட்டிட்டு நிற்கிறேன். எங்களுக்கு முன்னாலே ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வண்டிகள் நிற்குது. என்ன காரணம்னு தெரியலே. உன்னோட மாமனார் கடை பிரிட்ஜ் பக்கத்தில்தானே இருக்கு. அவருக்குக் காரணம் தெரியுமான்னு கேட்டு சொல்லேன் "
" ஓஹோ. காரணம் தெரிஞ்சா வழி கிடைச்சிடுமா ? "
"கடுப்பேத்தாதே. இன்ன காரணத்துக்காக நிக்கிறோம் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கலாமே, அதுக்காகத்தான் "
" சரி . டென்சன் ஆகாதே. ரெண்டு நிமிசத்தில் நானே உன்னைக் கூப்பிட றேன் "
மொபைலை ஆப் பண்ணிவிட்டு பொறுமை காத்தான். சொன்னபடியே ரெண்டு நிமிடத்தில் சரவணனை அழைத்த குரு, " ஏதோ இலவச மிக்ஸி கிரைண்டர் கொடுக்கிறாங்களாமே. அது சிலருக்கு சரிவர கொடுக்கலே ன்னு   தகராறாம். அதுக்காக சாலை மறியலாம் " என்றான் 
" ச்சே. இலவசப் பொருளுக்காக கால் கடுக்க ஜனங்க க்யூவில் நிற்கிறது என்றைக்கு மாறுதோ,  அன்றைக்குத்தான் இந்த நாடு உருப்படும் "
"சத்தமா சொல்லாதேடா. உன் மேலே கேஸ் போட்டுடப் போறாங்க "
"ஒரு பெரிய மனுஷன் சொல்லியிருக்கிறாருடா, "எந்த நாட்டில் இனா மாகக் கிடைக்கும் பொருளுக்காக  மக்கள் காத்து நிற்கிறார்களோ அந்த நாடு பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு காணாத நாடு "ன்னு. இங்கே  உழைச்சு பிழைக்க ஜனங்க ரெடியாக இருக்காங்க. அதுக்கான முயற்சிதான் எதுவும் இல்லே. பவர் கட் என்ற பெயரில் இருக்கிற தொழிலுக்கும் மூடுவிழா நடந்துகிட்டு இருக்கு "
"இதோ பாரு, உன் பேச்சில் உள்ள அர்த்தத்தை, நியாயத்தைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு எல்லாரும் பக்குவப்படலே. ஓரங்கட்டி உன்னா லே   மூவ் ஆக முடியும்னா என் மாமனார் கடையில் வண்டியைப் போட்டு ட்டு நீ  எலெக் ட்ரிக் ட்ரைன்  பிடிச்சு வந்து சேரு.
"வண்டியை ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியாதுடா. நம்ம ஆபீஸ் ஸ்டேஷனேரி மூட்டை வேறே வண்டியில் வச்சிருக்கிறேன். வந்து சேர உருப்படியான வழி இருந்தால் சொல்லு  "
"உன்னைக் கடவுள் காக்கட்டும். நான் மானேஜர் கிட்டே நீ ட்ராபிக்கில் நிற்கிறதை இன்பார்ம் பண்ணிடறேன். நீ டென்சன் ஆகாமே பொறுமையா வந்து சேரு "
"ஒரே இடத்தில் மணிக்கணக்கா நின்னு தலையே சுத்துது. மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. ஒரு ட்ராப் தண்ணீ தொண்டைக்குள் இறங்கினால் உயிர் வந்த மாதிரி இருக்கும். அதுக்குக் கூட வழியில்லேடா "
"உனக்கு என்ன சொல்றதுன்னே எனக்குத் தெரியலே " என்ற குரு போனைக் கட் பண்ணினான்.
கிட்டத் தட்ட இரண்டு மணிநேரம் கழித்து போக்குவரத்து சீரானது. அந்த இடத்தை விட்டு நகர்ந்த சரவணன், கண்ணில் பட்ட பெட்டிக்கடை அருகில் வண்டியை நிறுத்தி விட்டு கூல் ட்ரிங்க் குடித்துக் கொண்டிருந் தான்.
"ரெண்டு சிகரெட் " என்ற மழலைக் குரல் கேட்டு, திரும்பிப் பார்த்தான். பரட்டைத் தலை. அழுது சிவந்த கண்கள். வீங்கிப் போன முகம். கிழிந்த ஆடை மறைக்க வேண்டிய இடத்தைக் கூட இலைமறைவு காய் மறை வாக  வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தது 
"இந்த வயசிலேயே சிகரெட்டா ? " என்று அதிர்ச்சியான குரலில் கடைக் காரனைக் கேட்டான் சரவணன்  
"ஊஹூம். நல்ல பையன் சார். அவனோட ஓனருக்கு வாங்கிட்டுப் போவான் " என்றார் கடைக்காரர் 
" ஓனரா ? ஹவுஸ் ஓனரா ?"
"இல்லே சார். இந்தப் பையன் பக்கத்துத் தெருவிலுள்ள ஒரு  மெக்கானிக் கடையில்  வேலை செய்றான் "
"இந்தப் பையன் வேலை செய்றானா ? இவனுக்கு ஆறு வயசு இருந்தால் அதுவே அதிகம். இவனை வச்சு என்ன வேலை வாங்கிறாங்க " என்றான் ஆச்சரியத்துடன் சரவணன்  
"அங்கே இருக்கிறவங்க 'டேய் ஸ்பேனரை எடு , சுத்தியை எடு'ன்னு கேட்டால் எடுத்துக் கொடுப்பான். இந்த மாதிரி சிகரெட், டீ, காப்பி வாங்கிட்டுப் போய்க் கொடுப்பான். அவங்க ஒன்னு கேட்டால், இவன் வேறே எதையாவது நீட்டியிருப்பான். அதாலேயே இவன் கையில் ரெண்டு  போட்டிருப்பாங்க. அதான் வலி தாங்காமே அழறான் " என்று கடைக்காரார் வெகு கேஷுவலாக சொல்ல அதிர்ந்து போனான் சரவணன்  
"என்ன சார் இது ? ஒரு குழந்தையைப் போயா ?"
"உங்க பார்வைக்கு அவன் குழந்தை. அவங்க பார்வைக்கு இவன் வேலையாள்"
"ச்சீ .. மிருக ஜென்மங்கள் " என்ற சரவணன், கடைக்காரரிடமிருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டையும், இரண்டு பைவ் ஸ்டார் சாக்கலேட்டும் வாங்கி அந்தப் பையனிடம் நீட்டினான்  
இதைப் பார்த்த கடைக்காரர் " இனாமா யார் எது கொடுத்தாலும் வாங்க மாட்டான்  " என்றார் 
"என்ன சார் இது, அதிர்ச்சிக்கு மேலே அதிர்ச்சியான செய்தியா சொல்லிட்டே போறீங்க  ?"
" அட ஆமாம் சார். உங்க கையிலிருக்கிறதை அவன் வாய்க்குள் திணிச்சா கூட அதை துப்பிடுவான். ஆனா அவனிடமிருந்து ஏதாவது வேலை வாங்கிகிட்டு எதையாவது கொடுங்க. சந்தோசமா வாங்கிக்குவான் "
"இவனுக்கு என்ன வேலையை குடுக்க முடியும் ?"
"ஏன் ? உங்க வண்டியை துடைக்க சொல்றதுதானே "
"சரி " என்ற சரவணன், வண்டி பாக்சிலிருந்த பழைய துணியை எடுத்துக் கொடுத்தபடி " கொஞ்சம் தூசியை தட்டி விடுப்பா " என்றான் 
கண்ணிமைக்கும் நேரத்துக்குள்ளாக அந்தத் துணியை வாங்கி துடைக்க ஆரம்பித்தான் அந்த சிறுவன்  
"சார். கடைக்கு அனுப்பின பையன் இன்னும் வரலையேன்னு ஓனர் கோபிக்க மாட்டாரா  ?"
"ச்சே ச்சே . கோபிக்க மாட்டார். தலையில் ரெண்டு தட்டு தட்டுவார் "
அதைக் கேட்டதும் " போதும்ப்பா போதும். தூசி போயிட்டுது " என்று சரவணன் சொல்ல அதைக் காதில் வாங்காமல்  வண்டி முழுக்க தூசியை துடைத்து எடுத்த பையனிடம் பிஸ்கட் சாக்லேட்டை  சரவணன் நீட்ட, அதை ஒரு கையில் வாங்கி  ட்ரோசர் பையில் திணித்துக் கொண்டு, கடைக் காரர் கொடுத்த சிகரெட்டை எடுத்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஓடிப் போனான் அந்த சிறுவன் 
"இவ்வளவு சின்னக் குழந்தையை வேலைக்கு அனுப்ப எப்படி மனசு வருதோ தெரியலை "
"இவனுக்குத் தம்பி ஒருத்தன் இருக்கிறான். நாலு வயசு. அவனை வேலைக்கு சேர்த்துக்க இன்னும் யாரும் முன் வரலே.  அதனால்தான் வீட்டில் இருக்கிறான் "
"கஷ்ட ஜீவனத்தில் கூட, இனாமாக யாரிடமும் எதையும் வாங்கக் கூடாதுன்னு சொல்லி இவனை வளர்த்திருக்கிறாங்களே, ரியலி வெரி கிரேட்" என்று சரவணன் சொல்ல அவனைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த கடைக்காரர்,  பிறகு," கொஞ்ச வருஷம் முன்னே,கர்ப்பிணிப் பெண்களுக் கு இலவச முட்டை வழங்கப்படும்னு ஒரு அறிவிப்பு வந்துதே அந்த முட்டையை வாங்கறதுக்காக ஒரு குழந்தையை பெத்துக்கிட்டவ இந்தப் பையனோட அம்மா. அப்பா அம்மா குணம் இந்தப் பிள்ளையிடம் இல்லே . இவன் என்ன அவதாரமோ தெரியலே  " என்றார் 
"நான் கிளம்பறேன் சார். பேசிகிட்டே நின்னு உங்க வேலையைக் கெடுக் கிறேன் " என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான் 
வீட்டுக்குத் தேவையான ஒரு பொருளை  காசு கொடுத்து வாங்க வசதி இருந்தும் சும்மா கிடைக்கிறது என்பதற்காக காத்துக் கிடந்து வாங்கும் கூட்டம் ஒரு புறம். தனக்குக் கிடைக்காத ஒன்றுக்காக மற்றவர்கள் வழியைத் தடை செய்யும் கூட்டம் ஒரு புறம். இனாமாக எதையும் வாங்க மறுக்கும் ஏழை சிறுவன். இனாமுக்காக எதையும் செய்யத் துணியும் சிலர் அப்பப்பா என்னவொரு மாறுபட்ட மனிதர்கள் ... மாறுபட்ட உலகம். இங்கே நடப்பதெல்லாம் நிஜமா அல்லது மாயையா  என்ற சிந்தனையு டன் " ஒண்ணுமே புரியலே உலகத்திலே ; என்னமோ நடக்குது மர்மமா இருக்குது " என்ற பாடலை மனதுக்குள் "ஹம் " செய்தபடி  அலுவலகம் நோக்கி விரைந்தான் சரவணன்  

No comments:

Post a Comment