Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 30, 2012

Scanning of inner-heart ( Scan Report No. 51 )

                 ஆ ... சாமி குத்தம் !!   ஆசாமி குத்தம் ?

ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, கோழிக் கூண்டின் இடுக்கு வழியாக கோழிகளின் எண்ணிக்கையை சரி பார்த்தாள் செல்லாயி .  ஒன்னு குறையுத மாதிரி தெரியுதே ...  மறுபடி எண்ணினாள் ..  சிவப்பைக் காணுமே ....  ஆங் .. அதோ  மூலையில் முடங்கிக் கிடக்குது .. என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். 

" ம்ம்மா " என்ற குரல் கேட்டதும், மாட்டுக் கொட்டகையில் எட்டிப் பார்த்த செல்லாயி " வச்ச வைக்கோல் அப்பிடியே இருக்கு...பொறகு என்னத்துக்கு குரல் குடுக்குதே.  தின்னு.   தின்னுட்டு  தண்ணியைக் குடி என்றபடி மாட்டின்  முதுகை நீவி விட்டாள்.  கண்களை மூடியபடி அசையாமல் நின்று கொண்டிருந்தது மாடு.... இன்னிக்குப் பூரா தடவிக் குடுத்தாலும் நீ முதுகைக் காட்டிட்டு நிற்பேதான். எனக்கு உள்ளே வேலை இருக்குது என்றபடியே  வீட்டுக்குள் வந்த செல்லாயி, முழங்காலில் தலையைப் புதைத்துக் கொண்டு கைகளால் சாப்பாட்டுத் தட்டை அழவிக் கொண்டிருந்த இசக்கியைப் பார்த்து எரிச்சலடைந்தாள்.  இந்தப் பய நடவடிக்கை ஒரு வாரமா சரியில்லையே . எப்பவும் எதையோ பறிகொடுத்தாப்லே இருக்கானே.  ஏன் ? எதுக்குன்னு தெரியலையே .. ஒருவேளை ஊருக்குப் போன பொண்டாட்டி நெனைப்லே இப்படி இருக்கிறானோ .. இவன் லேசில் ஓய்வா உட்காருத ஆள் இல்லையே.என்னவா இருக்கும் என்று நினைத்தபடியே " ஏலேய் ,,, இசக்கி ஏம்முலேய்  இப்படி உட்காந்திருக்கே ? உடலுக்கு சீரில்லையா இல்லாட்டி ஏதாவது வயக்காட்டு  தகறாரா ? எதுக்கு இப்படி எப்பவும் கூனிக் குறுகி முழங் காலுக்குள் மூஞ்சியைக்  கவுத்துகிட்டு இருக்கே ..நீ வாய் விட்டு சொன்னாதானே எனக்கு தெரியும் " என்றபடி  அவனருகில் சென்று முகத்தை நிமிர்த்தி, முகத்தில் பரவி கிடந்த முடிகளை கைகளால் கோதி விட்டாள்.

" ஒண்ணுமில்லே ஆத்தா "
" ஒன்னுமில்லாததுக்கா இப்படி  இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கே ? "
" ஆத்தா ..போன வாரம் நான் ஒரு பாம்பைக் கொன்னுட்டேன் ? "
" என்னலேய் சொல்லுதே ? நம்ம குல தெய்வத்தையா கொன்னே ? "
" ஆத்தா நான் வேணுமின்னு கொல்லலே  "
" பாவி  .. பாவி  படுபாவி செய்றதையும் செய்றதையும் செய்ஞ்சு பிட்டு  பேச்சு வேறயா ? " 
" ஐயோ ஆத்தா .. நான் சொல்றதை முழுக்க கேளேன் ..  நான் வயக்காட்டுக்கு வண்டி கட்டிட்டு போறப்போ ..  வண்டி சக்கரத்துலே மாட்டிகிட்டுது .. வழிலே குறுக்காலே போச்சு ..  சாமி போகட்டும்னு நினைச்சு நான் வண்டியை நிப்பாட்டும் மின்னாடியே , வண்டி அவக மேலே ஏறி இறங்கிட்டு ஆத்தா "
" சாமி . எஞ்சாமி பகவானே இந்த  கருமத்தை நான் எங்கிட்டு போய் தொலைப்பேன் ? "
" ஆத்தா சாமி குத்தம் ஒரு பக்கம் இருக்கட்டும் ... பயமும் கவலையும் என்னை அரிச்சு தின்னுது ஆத்தா ..   என் சேக்காளி ரெட்டை மண்டை ரகுப் பய இருக்கானே  ..."
" யாரு ? .. மேலப்பாளையத்துக் காரனா ? "
" ஆமாம் ஆத்தா ..  அவன் ஆத்தா  வயித்துலே அவன் இருக்கிறப்போ அவன் ஆத்தாக்காரி ஒரு தவக்களையை அடிச்சுக் கொன்னுட்டாளாம் . அந்தப் பாவம்தான்  இவனுக்கு தவக்களை மாதிரி ரெட்டை மண்டை அமைஞ்சு போச்சுன்னு  என்கிட்டே சொல்லி இருக்கிறேன் . அவன் உருவ அமைப்பை வச்சு ஒவ்வொருத்தக கேலி பேசும் போதும் என்னமா கூனிக் குறுகிப் போயிருக்கிறான் தெரியுமா ? வாய் விட்டு அழுதிருக்கிறான்....இசக்கி அண்ணே  நாட்டுலே கொலைகாரன் கொள்ளைக்காரன் எல்லாம் தலை நிமுத்தி நடக்கிறான். அவனுகளைக் கண்டு ஊரு   உலகம் ஒதுங்கிப் போகுது ..ஏண்ணே .. இந்த உருவத்தை நானா விரும்பிக் கேட்டு வாங்கியாந்தேன். நான் தெருவிலே நடந்தாலே பார்க்கிற அத்தனை கண்ணும் என்னை இளக்காரமாப் பார்க்குதேன்னு  சொல்லி சங்கடப் படுவான்.  அவனுக்கு என்ன சொல்றதுன்னு தெரியாமே அவன்கூட சேர்ந்து நானும் அழுதிருக்கிறேன்.  என் பொண்டாட்டி பிரசவத்துக்கு தாய் வீடு போயிருக்கிறா ... நான் பாம்பை ... நம்ம குலதெய்வத்தை கொன்னுருக்கிறேன்.  சாமி குத்தமாகி, பாம்பு முகத்திலே எனக்கு புள்ளையோ பொண்ணோ பொறந்துட்டா, அதைத் தாங்க என்னாலே முடியாது ஆத்தா " என்று இசக்கி சொல்லும் போதே கண்கள் ஆற்று வெள்ளமாக  கண்ணீரை வழிய விட்டது 
" எனக்கு  என்ன சொல்றதுனே தெரியலே .. சங்கடப் படாதேலேய் .. சோத்தைத்  தின்னு .  நாளைக்கு விடிஞ்சதும் நம்ம கோயில்  குருக்கள் அய்யா கிட்டே கேட்போம் . அவக சொல்றபடி செய்வோம் "
" சரி ஆத்தா ..  எனக்கு பசிக்கலே .. சாப்பாடை எடுத்துட்டுப் போயிடு "
" ஏலேய் . ராத்திரி வெறும் வயித்தோட படுக்கக் கூடாதுலேய் "
" ஐயோ .. வேண்டாம் ஆத்தா "
வேறு வழியின்றி பாத்திரங்களை உள்ளே எடுத்துப் போனாள் செல்லாயி
மறுநாள் கோயில் குருக்களை பார்க்கப் போனார்கள் இருவரும் .  இவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்ட , இவர்கள் பயத்தைப் புரிந்து கொண்ட குருக்கள், " ஏம்ம்ப்பா நீ திட்டம் போட்டு எதையும் செய்யலே . ஏதோ தவறு நடந்து போச்சு. ஒரு மனுஷனுடைய சந்தர்ப்ப சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு அவன் செஞ்ச தப்பை மனுசங்களும் கோர்ட்டும் மன்னிக்கும்போது தெரியாமே நடந்த ஒரு தப்புக்கு தெய்வம் தண்டிக்குமா ? ஒரு நாளும் தண்டிக்காது . அப்படி ஒரு உயர்ந்த குணம் இருக்கிற ஒன்றைத்தானே நாம தெய்வமா கும்பிடறோம்  உன் பொண்டாட்டி நல்லபடியா உனக்கொரு ஆம்பிளைப் பிள்ளை பெத்துக் கொடுப்பா தைரியமா போ " என்றார். தலையாட்டி விட்டு இருவரும் வெளியேறினார்கள்.
" ஆத்தா ... எனக்கென்னவோ இவக சொல்றது சரியாப் படலே. நம்ம ஊருலே நம்ம குல தெய்வம் கோயில்லே  மந்திரிக்கிற சாமியார் ஒருத்தக இருப்பாகளே . அவக கிட்டே கேட்கலாமா ? "
செல்லாயி மௌனமாக தலை அசைக்க வண்டி கட்டிக் கொண்டு குலதெய்வம் குடி கொண்டுள்ள கிராமத்துக்குப் போனார்கள் .  நெற்றி நிறைய விபூதியும் பொட்டும்  பளபளக்க உடுக்கை அடித்துக் கொண்டு வந்த மாந்திரிகர் இவர்கள் சொல்வதைக் கேட்டார்  பின் ஆவேசக் குரலில்  " படுபாவி ..  பாம்பு என் பிள்ளையாச்சே அதையா கொன்னே ? உன்னை விடமாட்டேன் . உன் பிள்ளையை பழி  வாங்குவேன் " என்று அலறினார்
" அய்யய்யோ அப்படி எதுவும் நடக்கக் கூடாதுன்னு தானே உங்களை தேடி வந்தோம் "
" அப்படியா ?   அப்படின்னா பரிகார பூசை பண்ணுதியா ? " என்று கேட்டார் இவர்கள் இருவரையும் ஓரக் கண்ணால்  பார்த்தபடி
" சொல்லுங்க .. மறுபேச்சு பேசாமே செய்யுதோம் "
" வர்ற பௌர்ணமிக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கணும் "
" வைக்கிறோம் "
" ரெண்டு காராம் பசுவை தானமா எனக்குத் தரணும் "
" தருவோம் "
" நான் இருக்கிற இடத்து மேல் கூரையைப் பார்த்தியா , அதை புதுசா போடணும்  "
" போடுதோம் "
" பூசை செலவு கொறஞ்சது பதினைஞ்சாயிரம் ஆகும் "
" குடுத்திடுதோம் "
" அப்படின்னா நான் கேட்டதை எடுத்துகிட்டு பௌர்ணமி அன்னிக்கு வா "
" சரி "
வீடு வந்து சேரும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அன்று நடு நிசியில் செல்லாயிக்கு  விழிப்பு வந்த போது , இசக்கி தூங்காமல் விழித்திருப்பதைப் பார்த்தாள்
 " ஏன்யா .. தூக்கம் வரலியா ? "
" பௌர்ணமிக்கு இன்னும் இருபது நாள் இருக்குதே ஆத்தா "
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாத செல்லாயி மீண்டும் குப்புறப் படுத்துக் கொண்டாள். தூக்கமில்லாமல், சோறு தண்ணீர் இல்லாமல் இருபது நாள் பொழுது கழிந்தது. பௌர்ணமி வந்தது . வாடகை வண்டி கட்டிக் கொண்டு . மாந்திரிகர் சொன்ன அத்தனை பரிகாரப் பொருளையும் எடுத்துக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்குப் போனார்கள். கோவிலில் பூஜை கோலாகலமாக நடந்தது. ஒரு பித்தளை தூக்கில் பிரசாதத்தையும், கை நிறைய விபூதியையும் வாங்கிக் கொண்டு  ஊருக்கு வந்தார்கள் .
" ஆத்தா .  நீ இறங்கிக்கோ .. சாமானை வீட்டுக்குள் எடுத்து வை. நான் வண்டியை வாடகைக்கு எடுத்த இடத்திலேயே விட்டுட்டு வந்திடறேன் " என்று சொல்லி வண்டியுடன் சென்ற இசக்கி அரை மணி நேரம் கழித்து நடந்து வந்தான்
" ஆத்தா பசிக்குது .. சோத்தை வை " என்று இசக்கி சொன்னதும், " இதான் சாமியோட மகிமைங்கிறது . இருபது நாள் எதைப் பத்தியும் நினைக்காமே இருந்த பய கோயிலுக்குப் போய்  பரிகாரம் பண்ணிட்டு வந்ததுமே பசின்னு சொல்லுதானே " என்று புளங்காகிதம் அடைந்தாள்
வயிறு நிறைய சாப்பிட்டான் . பட்டியில் ஆடுகள் இல்லை: கொட்டிலில் மாடுகள் இல்லை : கூண்டுக்குள் கோழிகள் இல்லை : வாசலில் வண்டி இல்லை .  எல்லாமே விலையாகிப் போயிருந்தன . ஆனால் இருவர் மனதிலும் நிம்மதியும் கண்களில் உறக்கமும் இருந்தது

No comments:

Post a Comment