( நான் எழுதிய இச்சிறுகதை ஆனந்த விகடன் 08.12.2002 இதழில் வெளியாகி
யுள்ளது )
அம்மா வரப் போறா !
" பத்மா, இன்னிக்கு அண்ணா போன் பண்ணினார் " என்றான் சுகுமார் , அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதுமே
" என்னவாம் ? "
" அண்ணிக்கும் அம்மாக்கும் சரிப்பட்டு வரலையாம். நேத்து நடந்த
சண்டையை ஊரே கூடி நின்னு வேடிக்கை பார்க்கும்படி ஆயிடுச்சாம் .."
" என்னிக்குத்தான் அம்மாக்கும் மத்தவங்களுக்கும் சரிப்பட்டு வந்திருக்கு ?
வயசாக ஆக பக்குவம் வரணும் . ஆனா , அம்மாக்கு அகம்பாவம்தான்
அதிகமாகிப் போச்சு.. வயசாச்சா.. வெந்ததைத் தின்னோமா, ஒரு மூலையில்
விழுந்து கிடந்தோமானு இருக்கணும் . அதை விட்டுட்டு எல்லா விசயத்திலும் ' நான், நான்'ன்னு முந்திகிட்டு நாட்டாமை பண்ணப் போனா
தகராறு வரத்தான் செய்யும். அண்ணா வேறே என்ன சொன்னார் ? "
" இன்னிக்கு ராத்திரி பஸ்சில் அம்மாவை ஏத்தி அனுப்பறாராம் .நான்
நாளைக் காலையில் பஸ் ஸ்டாண்ட் போய் அம்மாவை அழைச்சிட்டு
வரணும். "
" உடனே கோயில் மாடு மாதிரி 'சரி. சரி'ன்னு தலையை ஆட்டிட்டிங்களா? "
" பிறகு என்ன செய்யணும்கிறே ? ஒரு மாசத்துக்குதான் . அங்கே
நிலவரம் சரியானதும் திரும்பவும் அழைச்சிட்டுப் போயிடுவார் ! "
" அது என்ன கலவர பூமியா ... நிலவரம் சரியானதும் திரும்பிப் போக ?
இதோ பாருங்க ... நானும் வேலைக்குப் போறேன். வீட்டுலே ஒன்னும்
சும்மா உட்கார்ந்திருக்கலே ..வர்றவங்க போறவங்களுக்கெல்லாம் வடிச்சுக்
கொட்டி உபசாரம் பண்ணிட்டு இருக்க என்னாலே முடியாது.
அம்மாவை அனுப்ப வேண்டாம்னு உடனே போன் பண்ணிச் சொல்லிடுங்க.."
" பாவம்டி .. வயசானவங்க ..."
" ஏன் சொல்ல மாட்டீங்க ? என்னைத் தவிர , ஊர் உலகத்தில் இருக்கிற
அத்தனை பேரும் உங்க கண்ணுக்குப் பாவமாத்தான் தெரிவாங்க.."
" அதுக்கில்லேடி ... ஒரே ஒரு ஆள் வந்து தங்கறதாலே , அவங்களுக்குப்
பசிக்கு ஒரு வேளை சாப்பாடு போடறதாலே, நாம எதுலே கொறஞ்சிடப்
போறோம் ? அவங்களுக்குன்னு தனியா ஏதாவது செய்யப் போறோமா ?
நாம சாப்பிடற சாப்பாட்டில் அவங்களுக்கும் ஒரு வாய் ! அவ்வளவுதானே ? நாமளும் மாட்டோம்னு சொல்லிட்டா, பாவம் .. வயசானவங்க .. எங்கே
போவாங்க? இதோ பாருடி .. நம்மைப் பெத்தவங்களை நாம எப்படிப்
பார்த்துக்கிறோமோ, நடத்தறோமோ ,அதே மாதிரிதான் நம்ம குழந்தைங்க
நம்மை நடத்தும். அதை நினைவில் வச்சுக்கோ .."
" இதோ பாருங்க, உங்க சமாதானம் எதுவும் எனக்குத் தேவையில்லை.
இப்பவே அண்ணாக்கு போன் பண்ணி அம்மாவை அனுப்ப வேண்டாம்னு
சொல்றீங்களா.. இல்லே நான் கிளம்பி எங்க அம்மா வீட்டுக்குப்
போகட்டுமா ?"
" அம்மா வீட்டுக்குப் போகப் போறீயா ? "
" ஆமாம் ! ஏன் ..போகக் கூடாதா ? "
" அதுக்கில்லே .. நாளைக்கு அவங்களே இங்கே வரப் போறாங்களே ! "
" என்னது ? "
" ஆமாம்... அம்மாவை அனுப்பி வைக்கிறதா போன் பண்ணினது உங்க
அண்ணன்தான் ! " என்றான் சுகுமார் நிதானமாக
" எங்க அண்ணனா போன் பண்ணினார் ? சரியான கழிசடை ! பொண்டாட்டியை அடக்கி வைக்கத் துப்பில்லாமே , அம்மாவை பஸ்
ஏத்தி அனுப்பறானாமா ? சரி .. சரி.. உங்க வேலையை எல்லாம் சீக்கிரம்
முடிச்சிட்டு, நேரத்தோட படுத்துத் தூங்குங்க .. அப்பத்தான் நாளைக்குக்
காலையில் எழுந்திரிச்சு , சீக்கிரம் பஸ் ஸ்டாண்ட் போக வசதியா இருக்கும் ! "
என்றாள் பத்மா.
No comments:
Post a Comment