Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 22, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 32

( நான் எழுதிய இச்சிறுகதை 27.11.1992 குங்குமம் வார இதழில் ' பரிசு பெறும் 
  நட்சத்திர சிறுகதையாக வெளியாகி உள்ளது )

                              சொந்தக்கதை .... சோகக் கதை ...

" ஏட்டீ .. அடுப்பிலே இன்னும் அஞ்சாறு சுள்ளியை ஒடிச்சு வை. தீ ஒரு பக்கமா 
எரியுது பாரு. பானைலே ஒரு பக்கமுள்ள நெல்லு மட்டும் வெந்து , மத்தது 
அப்பிடியே  வேகாமே இருந்திடப் போகுது " என்று சொல்லிக் கொண்டே
புறவாசல் பக்கம் விரைந்த அழகம்மா, வாசலில் வில் வண்டி வந்து நிற்கும்
சத்தம் கேட்டு, வாசற்புறம் பார்த்தாள் .

" யாருளா  அது ? " என்று நெல் அடுப்பு அருகில்  நின்ற நாச்சியார் கேட்டாள் .

" ஆள் வண்டியை விட்டு இறங்கினாத்தானே  வாறவுக  யாருன்னு தெரியும் .
அதுக்குள்ளே நீ கெடந்து பறக்குறியே " என்றவாறே முற்றத்துக்கு விரைந்தாள் 
அழகம்மா .

இதற்குள் வண்டியை விட்டு இறங்கின பெண், இரண்டு கைகளிலும், இடுப்பிலும் 
சாமான்களை எடுத்துக்கொண்டு, வேலிப்படலில் இருந்த கதவைக் காலினால் 
எட்டித்  திறந்து    கொண்டு  உள்ளே வந்தாள் .

" யாரு அது ? கோமதியக்கா மாதிரியில்லா தெரியுது. அடடா .நம்ம.
  கோமதியக்காவே தான். ஏட்டீ . நாச்சியாரு . இங்க வா.யாரு வந்திருக்காகன்னு பாரு...
ஏளா , இம்புட்டு வருசத்துக்குப் பொறவாவது உனக்கு வர்றதுக்கு வழி தெரிஞ்சுதே. உங்கிட்டேயிருந்து ஒரு  தகவலும் இல்லையே..! ஏன் ? நாட்டாமைக்காரக  வாடகைப்
பணத்தை அனுப்பி வச்சா, பணம் கிடைச்சதுன்னு பதில்
வர்றதோடு  சரி .இப்ப எப்படிக்கா இருக்கே. ?
 தனியாவா வந்தே ? கீழே ஏன் உக்காருதே. அதான் பாய் விரிச்சிருக்கேனே.
 பாயில் உக்காரு. " என்றவாறே கோமதியக்கா இறக்கி வைத்த சுமைகளை
 சரி செய்வதில் முனைந்தாள்  அழகம்மா.

" ஏட்டீ .. நாச்சியாரு , அந்தப் பொடி அடுப்பைப் பத்த வச்சு ரெண்டு தம்ளர் 
 தண்ணி ஊத்து. கருப்பட்டியைத் தட்டிப் போடு. நான் அதுக்குள்ளே
 நாட்டாமைக்காரக வூட்டுக்குப்  போய் பால் வாங்கியாறேன்.  "

" அட நீ ஒண்ணு  ... எனக்குப் பாலெல்லாம்  வேணாம்மா . சும்மா ஒரே ஒரு 
வாய் கடுங்காப்பி குடு போதும்!  நீ எங்கியும் போவேணாம் "

" ஏம்ளா ,  காசிக்குப் பக்கத்திலே எங்கியோ இருக்கேனு சொன்னாகளே . நீ 
தனியாவா வந்தே ? "

" ஆமாம் போ. வெள்ளைக் கோயில்லே கொண்டு போய்  வைக்கிற வயசாச்சு.
இன்னும் என்ன துணை வேண்டிக் கிடக்கு ? உன்னையும் என்னையும் 
அசலூரில் எவனாவது கையைப் பிடிச்சு இழுத்துருவானா  என்ன ? " என்று 
எதிர்க் கேள்வி போட்டாள்  கோமதியக்கா.

" நாச்சியாரு..தண்ணி கொதிச்சுதா பாரு.. கொதிச்சுதுன்னா ரெண்டு கரண்டி 
காப்பித் தூளைப் போட்டு அது தலைலே தண்ணிய தெளிச்சு இறக்கு . மசமசனு  
நிக்காமே, மளமளன்னு வேலையைப்பாரு. அப்படியே நெல் அடுப்பையும் 
பாரு " என்று விரட்டினாள்  அழகம்மா. 

" இந்தப் புள்ளே யாருளா  ? எனக்கு அடையாளம் தெரியலியே "

" இந்த வூட்டுப் பெரிய பய மவ .மூத்தவ. சமஞ்சு நாலு வருஷம் ஆகுது. நல்ல 
இடமா வந்தா கழுதையை தள்ளி விட்றலாம்னு  பார்த்தா ஒண்ணும்  இசைவா
வர மாட்டேங்குது. ..ஹூம் .... இனிமேத் தானா இவளுக்குன்னு ஒருத்தன் 
பொறக்கப் போறான் . நேரம் வந்தா, கழுதை தன்னைப் போல தேடி வர்றான் .
அவ்வளவுதான் ! " 

" ஆமாம் நேரம் கூடி வந்தா, நாம நிறுத்தினாக்கூட நின்னுடுமா என்ன ?"

" பெரிய புள்ளே கூடத் தானே இருந்தே ? ஏம்ளா  திடுதிப்புன்னு வந்துட்டே ?"

" வெறுவாக்கெட்ட பய புள்ளை  . வேலை பாக்குற பொண்ணு வேண்டாம்னு 
சொன்னேன்.. கேட்கலே. ஒத்தக்கால்லே நின்னு கட்டிக்கிட்டான். அவனுக்கு 
வடக்கே மாத்தலாகவும் பொண்டாட்டிக்கும் சேர்த்து மாத்தல் வாங்கிக்
கிட்டான். அதுதான் ஒழிஞ்சு போச்சுன்னு சும்மா இருந்தானா?  என் மவராசன்
கட்டி வச்ச வூட்டுலே, வயலு வேலை, நாத்து நடவு வேலையைக் கவனிச்சு 
கிட்டு நிம்மதியா இருந்தேன். அப்படியாவது இருக்க விட்டானா?  தானும் 
பொண்டாட்டியும் வேலைக்குப் போயிட்டா புள்ளைகளைப் பார்த்துக்க ஆள் 
இல்லே.நீயும் வந்துருன்னு  சொல்லி ராவோடு ராவா என்னைக் கூட்டிட்டுப் 
போயிட்டான்.  புள்ளைக வளர்ற  வரை நான் தேவையாயிருந்தேன். இப்போ 
அதுக வளர்ந்து போச்சு..என்னைப் பாரமா நினைச்சேன். மருமகப் பொண்ணு
சொல்லியே  போட்டா ,வயசான காலத்திலே வாயை மூடிக்கிட்டு ஒரு ஓரமா 
விழுந்து கிடங்கன்னு . அது ஏன்  அங்கே விழுந்து கிடக்கணும் ? என் மவராசன்
கட்டி வச்ச வீடு வாசல் இருக்கு .. அங்கேயே போய் விழுந்து கிடக்கிறேனு
சொல்லிட்டு வண்டி ஏறிட்டேன். " என்றாள்  சடவாக
 
அழகம்மா வாயடைத்தபடி   அவள் சொல்வதைக்  கேட்டுக் கொண்டிருந்தாள்.

 "   யப்பா, ராவெல்லாம் தூக்கமில்லாமே வுக்காந்தே வந்ததுலே 
இடுப்பெல்லாம் வலிக்கிது . செத்த நேரம் கட்டையைக் கீழே  சாய்க்கிறேன் "
என்று சொல்லிக் கொண்டே கைகளை சோம்பல் முறித்துக்கொண்டு 
படுத்தாள்  கோமதியக்கா. 

காப்பித்தண்ணி வந்தது. காப்பியை வாயில் ஊற்றிக்  கொண்டே , " யக்கா
சாயங்காலம் நாட்டாமைக்காரக வூடு வரை போயாறலாம் . வூடு   முழுக்க 
வேண்டாம். ஏதாவது ஒரு ரூமை  மட்டும் ஒழிச்சு  வுட்டாகன்னா  அதுலே
இருந்துக்குவேன் . வாடகைப் பணம் வரும்.. . வயக்காட்டு நெல்லு வரும்.
என் கட்டைக்கு அதுவே  போதும் " என்றவள் பழைய நினைவுகளில்
ஆழ்ந்தவள் போல் காணப்பட்டாள் .

இதற்குள் நாச்சியார் வந்து   எட்டிப் பார்த்துவிட்டு . " ஆச்சி, அந்த மச்சுவீட்டு 
தெறவல் எங்கன  இருக்கு ? " என்றாள் .

" கெடியாரம் இருக்கு பாரு . அங்ஙனே தான் வச்சேன் " என்ற அழகம்மா 

" கோமதியக்கா நீ படுத்திரு . நான் ஆத்துலே போய் துணியெல்லாம்  துவைச்சு 
எடுத்துட்டு வந்துருதேன் " என்றாள் 

" இரு புள்ளே , நானும் வர்றேன் " என்று எழுந்தாள் கோமதியக்கா.

இருவரும் ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் . போகும் வழியில் தென்
பட்டவர்களுக்கு கோமதி அக்காவை அறிமுகம் செய்து வைத்தாள்
அழகம்மா . " எல்லாம் நம்ம ஊர்க்காரகதான் . பட்டணத்திலே போய் ரொம்ப
நாள் தங்கிட்டாக ... இப்ப வூரோடு வந்துட்டாக " என்று பெருமையாக
சொன்னாள் .

வழியில்  ஆல மரத்தடிப்  பிள்ளையாரைக் கண்டதும் கன்னத்தில் போட்டுக்
 கொண்டாள் கோமதியக்கா.

" எக்கா , இந்த வூர் கொஞ்சம்கூட மாறவே  இல்லியே, அப்படியேதானே 
இருக்கு. ஒரு ரோடு கூடவா இன்னும் இந்த ஊருலே போடலே ! வடக்கே 
அப்படி இல்லே . நேத்து நாம பார்த்த இடமா இதுன்னு நினைக்கிறாப்லே 
இருக்கும் "

" இங்கயாவது  , ரோடாவது போடறாதாவது ! போன  வெள்ளைக்காரன் 
திரும்பி வந்து ரோடு போட்டாதான் உண்டு .. ஹும்ம் " என்று அலுத்துக் 
கொண்டாள்  அழகம்மா

ஆற்றங்கரை மேட்டில் தாடியும் மீசையும் , கிழிந்த உடையுமாக , தன்னையே
வெறித்துப் பார்க்கும் மனிதனைக் கண்டு சற்றே தயங்கினாள் கோமதியக்கா .
" யாருளா  இது ? மூஞ்சியெல்லாம் முடியை வளர்த்துக்கிட்டு !..
 கோட்டிக் காரனா ? சீக்கிரம் எட்டி நட, அவனைப் பார்த்தாலே பயமா இருக்குது "

" அவனை அடையாளம் தெரியலையா ? நம்ம வூருலே காரைவூட்டுக்காரக
இருந்தாகளே , அவக மகன் செந்தில்தான் !"

" ஏளா .. அவனாளா இது ?..  நம்பவே முடியலியே . ..அவன் ஆளு  நல்லா
கட்டுக் குட்டுன்னு இருப்பானே ! "

" அவனேதான் . அவனுக்குத்தான் நம்ம பண்ணை வீட்டுக்காரக மூணாவது
 பொண்ணைக் கட்டுனாக."

" யாரு ? நல்லா சிவப்பா .. குதிரை மாதிரி இருப்பாளே அவளையா ? "

" அவளைத்தான் .. இவனைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லி ஒத்தக்காலில்
நின்னு   அந்த  சிறுக்கி கட்டிக்கிட்டா. செல்லமா வளர்ந்த பொண்ணாச்சேன்னு
பண்ணை வூட்டுக்காரகளும் அந்தஸ்து அது இதுன்னு பார்க்காமே அவனுக்குக்
கட்டி வச்சாக. "

" பொறவு ? "

" கல்யாணம்   ஆன கையோடு பிசினஸ் பண்ணப் போறேன்னு சொல்லிட்டு
பொண்டாட்டியைக் கூட்டிட்டு பட்டணம் போய்ட்டான் . அங்கே போய்  மருந்து
கடை  வச்சான் . நல்லா கொழுத்த துட்டு. போய்க் கொஞ்ச நாள்லேயே
பெரிய மனுஷன்னு பேர்  வாங்கிட்டான் ... "

" அப்புறம் ? "

" அவனுக்கு அங்கே ஒரு சிநேகிதன்.  சிறுசிலேருந்து  அவக ரெண்டு பேரும்
ஒண்ணாப் படிச்சாகளாம். ஒரே  ரூமுலே சேர்ந்திருந்து  படிச்சாகளாம். அவன்
பேரும்  செந்திலாம் . ஏதாவது  கடுதாசி "செந்தில்"னு   போட்டு வந்தாக்கூட
யாருக்கு  வந்து இருக்குனு தெரியாமே ரெண்டு பேரும் சேர்ந்தே படிப்பாகளாம்"

"இவன் பொண்டாட்டியைக் கூட்டீட்டு அவன் ஓடிப் போயிட்டானாமா ?" என்று
இடை வெட்டினாள்  கோமதியக்கா

" அதுதான் இல்லே.. அவன் சிநேகிதன் வேறே ஒரு பொண்ணு கூட பழக்கம்
வச்சிருந்திருக்கிறான். அந்தப் பொண்ணு நல்ல வேலையில் இருந்தாளாம் .
இவன் ஏதோ சீட்டுக் கம்பெனியிலே மேனேஜரு வேலை பார்த்துருக்கிறான் .
இந்த வேலைலே  இருக்கிறவனுக்குப் பொண்ணைக் கொடுக்க மாட்டேன்னு
அப்பா சொல்லுவாருனு அந்தப் பொண்ணு சொல்லி இருக்கு ."

"  ஏனாம் ? "

" அது வூட்டுக் கதை அப்படி ! அதுக்கு ஒரு அக்காவாம் .அவளை நல்ல
இடத்திலே கட்டிக் குடுத்தாகளாம் . ஆனா , அவ புருசன் தினமும் குடி ,
சீட்டுன்னு கடனாளி ஆயிட்டு,  ஊரை விட்டு ஓடிட்டானாம். அவ பெத்த
புள்ளைக ரெண்டையும் கூட்டிட்டு தகப்பன்  வூட்டுக்கே வந்துட்டாளாம் .
அதிலேருந்து அவ அப்பா முன்னாடி நின்னு  யாரும் பாத்திரச்சீட்டு , நகை
சீட்டுன்னு கூட பேச மாட்டாகளாம் .பேசினா அவருக்கு அந்த அளவுக்கு
கோபம்  வருமாம். இந்த பொண்ணு  பார்த்து வச்சிருந்த பயலோ , " இந்த
வேலையை விட முடியாது . நானும் படிச்சு முடிச்சிட்டு எல்லா இடத்திலேயும்
அலைஞ்சு பார்த்துட்டு   கிடைக்காமே தான்  இங்கே வந்து ஒட்டிக்கிட்டு
இருக்கேன். உங்க அப்பனுக்காக கிடைச்ச வேலையை விடமுடியாது"ன்னு
கண்டிப்பா சொல்லி இருக்கான்.
இந்த சேதி தெரிஞ்சதும் நம்ம வூரு  செந்தில், " இந்த சின்ன விசயத்துக்காக
நீங்க ரெண்டு பேரும்  ஏன் சண்டை  போடணும் ? ஏன் பிரியணும்?  நான் , என்
பேரில்  'செந்தில் மருந்துக் கடை' நடத்தறேனே . அதை   உன்னுதுன்னு
சொல்லி அவ அப்பாகிட்டே பொண்ணு கேளுன்னு சொல்லி இருக்கான்."

" அடப்  பாவிப் பயலே ! அவ அப்பா சம்மதிச்சானாமா ? "

"  படிச்ச பயலுகள்லாம்  சேர்ந்து ப்ளான் போட்டுருக்கானுகளே , நடக்காமே
இருக்குமா ? இவன் சொல்லிக்  குடுத்தாப்லேயே, பொய் சொல்லி அவ
அப்பாகிட்டே பொண்ணு கேட்டுருக்கான்...கூட்டம் சேர்த்து கல்யாணம்
பண்ணினா எங்க வூட்டுக்கு ராசியா  இராது. நானும், என்   வூட்டு ஆளுகளும்
நீங்களும்  உங்க வூட்டு ஆளுகளும் மட்டும் வச்சு கல்யாணம்  பண்ணணும்னு
சொல்லி இருக்கான்.   பையனைப் பிடிச்சுப் போகவும் அவ அப்பாவும் இவன்
சொன்னதுகெல்லாம்  ' சரி'ன்னு சொல்லிட்டாக. ஆனா கல்யாணத்துக்கு கூட
நம்ம ஊரு செந்தில் இருக்கலே "

" ஏனாம் ? "

" மருந்துக்கடை விசயமா, வெளியூருக்கு , வடக்கே போறேன். திரும்பி  வர
ஒரு  மாசம் இல்லே ரெண்டு மாசம் ஆகலாம் . எனக்காக நீ  எதையும்  தள்ளிப்
போட  வேண்டாம் . நான் போய் திரும்பி வர்ற வரை என் பொண்டாட்டி
தனியா இருக்க வேண்டாம்னு  அவளை அவ அப்பா வீட்டுக்கு ரயில் ஏத்தி
அனுப்பிட்டேன். நான் திரும்பி வர்ற அன்னிக்கு அவளை தந்தி குடுத்து  இங்கே
வரச்சொல்லிடுவேன்.அன்னிக்கு நம்ம   எல்லாருக்கும் என் வீட்டில் விருந்து
தான்னு சொல்லி இருக்கான். சொல்லிட்டு  வடக்கே போயிட்டான் ."

" அங்கே போய் வேறே யார் கூடவாவது சிநேகிதம்  ஆயிட்டானா ?" என்று
கவலையுடன்  கேட்டாள் கோமதியக்கா .

" அதுதான் இல்லே, இன்னிக்கு இந்த வண்டியிலே நான் வர்றேன்.  நீயும் 'இந்த
வண்டியிலே கிளம்பி  வந்திடு. வந்து இந்த இடத்திலே நில்லு'ன்னு அவன்
பொண்டாட்டிக்கு  ஒன்றரை மாசம் கழிச்சு கடுதாசி போட்டிருக்கான். அவளும்
இவன்  சொன்னாப்பிலே கிளம்பி வந்திருக்கா . இவ வந்த வண்டியிலே
ரெண்டு பொம்பளைக  அவக வூட்டுக் கதையை   பேசிட்டு  வந்திருக்கிறாக " .

"  போச்சுடா , அது வேறே தனிக் கதையா? "

" கேளு , ரெண்டு பொம்பளைகளில் ஒருத்தி, அந்தப் பட்டணத்துப் பொண்ணுக்கு
  சொந்தக் காரியாம் . கூட வந்தவ , இவகிட்டே ஒரு ஜாதகம் பத்தி பேசி இருக்கா
 அதுக்கு  "  நீ இன்னும் நான் சொன்ன அந்தப் பொண்ணை மனசிலேயே
வச்சுகிட்டு இருக்காதே.  அதுக்குக் கல்யாணம் ஆகி ஒன்றரை மாசம் ஆகுது.
சொந்தக்காரங்க , ஜாதி ஜனம் யாரையும் கூப்பிடலே . ஏதோ  திருட்டுக்
கல்யாணம் பண்ற மாதிரி காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை
முடிச்சிட்டாங்க. என்ன வில்லங்கம்ன்னு தெரியலே"ன்னு சொல்லி இருக்கா.
கூட வந்தவ , " மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமோன்னு கேட்க, அவ,
பதிலுக்கு 'மெட்ராசில் செந்தில் மருந்துக் கடை'ன்னு ஒரு கடைஅவர் பேருலே
கோடம்பாக்கத்தில் இருக்கு. அந்த ஏரியாவில் அந்தக் கடையை
தெரியாதவங்க கிடையாது . அவருக்குக் கூட சொந்த ஊர் திருநெல்வேலி
தான்னு சொல்லி இருக்கா
.
 உடனே நம்ம வூர்  செந்தில் பொண்டாட்டி நினைச்சுகிட்டா, இவ புருசன்தான்
இவளை ஏமாத்திட்டு  வேறு யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு .
இவதான் முன் கோபக்காரி ஆச்சே... வெளியூருக்குப் போறதா சொல்லிட்டு
தன்னை தாய் வூட்டுக்கு அனுப்பிட்டு இவன் வேறே கல்யாணம்
பண்ணிட்டான்னு  நினைச்சுகிட்டா. ரயிலில் கூட வந்த பொம்பளைக
பேசினதைக் கேட்டுட்டு கோவமா வீட்டுக்கு வந்திருக்கா. டேசனில் அவன்
நிற்கிறதா  சொல்லி இருந்த இடத்தில் அவன் இல்லே. அவ்வளோதான் ....
வெறி பிடிச்ச மாதிரி வூட்டுக்கு வந்திருக்கிறா. பக்கத்து வீட்டுக் காரக ,
இவளை  பார்த்துப்  பேசி சிரிச்சதுக்கும் இவ பதிலே சொல்லலே..  வீரா வேசமா
வூட்டுக்குள் வந்தவ, அவன் வியாபாரத்துக்காக வாங்கி வச்சிருந்த தூக்க
 மாத்திரையை மொத்தமா எடுத்துப்போட்டு முழுங்கி இருக்கா"

" சரி ,டேசனுக்கு வர்றேன்னு சொன்னவன் ஏன் வரலே ?" என்று கேட்டாள் 
கோமதியக்கா கவலையாக .

" அன்னிக்குப்  பார்த்து அவன் வந்த வண்டி தாமசம் ஆயிட்டுதாம். இவன் போய்
அவளை நிக்க சொன்ன  இடத்திலே தேடியிருக்கான். காணும்னதும்
டேசன்லே விசாரிச்சிருக்கான் . தூத்துக்குடி வண்டி வந்துட்டுப் போய்  ரொம்ப நேரம்  ஆயிட்டுன்னு சொல்லி இருக்காங்க. உடனே அந்த செந்தில் வூட்டுக்குப்
போய் பொண்ணு மாப்பிள்ளையை கையோடு விருந்துக்குக் கூட்டிட்டு
வந்திருக்கான். கதவைத் திறந்து பார்த்தா அவ பொணமா கிடக்குறாளாம்.
பக்கத்திலேயே ஒரு கடுத்தாசி.
" வூருக்குப்  போறதா சொல்லி என்னை ஏமாத்திட்டு வேறே பொண்ணைக்
கல்யானம் பண்ணிக்கிட்டியா ? உன் கூட குடும்பம்  நடத்தப் பிடிக்கலே . நான்
செத்துப் போறேன்னு 'ன்னு எழுதி வச்சிருந்தாளாம். விசயத்தைப் புரிஞ்சு கிட்ட
புது மாப்பிள்ளை, 'ஏண்டா, பாவி, எனக்கு உதவி பண்ணி நான் விரும்பின
பொண்ணோட என்னை சேர்த்து வச்சியே. உன் கதை இப்படியாயிட்டுதே'னு
சொல்லி நெஞ்சிலே நெஞ்சிலே அடிச்சுகிட்டு கீழே விழுந்திருக்கான் . புரட்டிப்
பார்த்தா அவனும் பொணமாக்    கிடக்கிறானாம் . டாக்டர் வந்து பார்த்துட்டு
மாரடைச்சு உசிர் போயிட்டுன்னு சொல்லிட்டுப் போயிட்டாராம் . ஒரே
நாள்லே  பொண்டாட்டியையும் , உசிருக்கு உசிரா பழகின சிநேகிதனையும்
பறி குடுத்ததில் இவன புத்தி பேதலிச்சுப் போச்சு. காரைவூட்டுக்காரக
உசிரோட இருந்தவரை இவனை வூட்டுக்குள்ளேயே வச்சிருந்தாக. அவகளும்
போய்ச் சேர்ந்ததும் இந்தப் பய இப்படிக் காடுமேடுன்னு அலையுதான் " என்று
நடந்த  கதையை சொல்லி முடித்தாள்  அழகம்மா.

நீண்ட பெருமூச்சு கோமதியக்காவிடமிருந்து வெளிப் பட்டது." அந்தப் பய  .. .
.அதான் செத்துப் போன செந்திலோட பொண்டாட்டி  என்ன ஆனா ? " என்று
 கேட்டாள் கோமதியக்கா

" யாருக்குத் தெரியும் ? "  என்ற அழகம்மாவிடம் , " ஒவ்வொரு வூட்டுக்
கதையைப் பாக்குறச்சே நம்ம வூட்டுக் கதை எவ்வளவோ தேவலாம்
போலிருக்கு.வெயில் உச்சிக்கு வந்துட்டுது. நடையை எட்டிப் போடு !" என்று
கோமதியக்கா சொல்ல வேகமாக நடையைப் போட்டாள்  அழகம்மா





 

No comments:

Post a Comment