பொறுப்பு !
கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாள் சாந்தி. வீட்டுக்குள் நுழையும்போதே, "கட்டிலிலிருந்து குழந்தை கீழே விழுந்துவிட்டான்" னு சொன்னவளை தூக்கிப்போட்டு நாலு மிதி மிதிக்காமல் "அப்படியா ? குப்புற விழுந்தானா? இல்லே மல்லாக்க விழுந்தானா"ன்னு கதை கேட்டுக்கொண்டிருந்ததும் இல்லாமல், இரவு சாப்பாட்டுக்காக வாங்கி வைத்திருந்த பூரி செட்டை ஹான்ட் பேக்கைத் திறந்து எடுத்து " இந்தா, இதை வீட்டுக்கு எடுத்துட்டு போய் சாப்பிடு" என்று சொன்ன கணவனை எரித்து விடுவதுபோல் பார்த்தாள் சாந்தி.
குழந்தை கீழே விழுந்துட்டான்னு இன்பர்மேசன் சொல்றதுக்கா ஆயிரக் கணக்கில் சம்பளம் கொடுத்து வேலைக்காரி வைத்திருக்கிறோம் என்ற எரிச்சல் வந்தது. வேலைக்காரப் பெண் மீது இவருக்கு ஏன் இவ்வளவு கரிசனம் என்ற சந்தேகமும் எழுந்தது. காதல் மோகத்தில் ஏமாந்து விட்டோமோ என்ற பயமும் எழுந்தது.
வேலைக்காரப் பெண் கிளம்பிப் போனதுமே " சாந்தி, சீக்கிரம் குழந்தையை எடுத்துட்டு கிளம்பு. டாக்டர் வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம் " என்றான் சரவணன்.
"வேலைக்காரி நடந்து போறாளே. அவளை உங்க வண்டியில் வச்சு வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு வரலாமே? அப்புறமா குழந்தையை கவனிக்கலாமே ?" என்றாள் சாந்தி இளக்காரமாக.
" உன்னோட கோபத்துக்கு காரணம் புரியுது சாந்தி. நாம ரெண்டு பேரும் பெத்தவங்களை எதிர்த்து காதல் கல்யாணம் பண்ணிட்டோம். நம்ம ரெண்டு வீட்டு சப்போர்ட்டும் நமக்கு கிடையாது. உதவி செய்ய நண்பர்கள் இருக்கிறாங்க, குழந்தையை கவனிச்சுக்கிறதைத் தவிர. உன்னாலே வேலையை விடவும் முடியாது.வேலைக்காரங்களை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை நமக்கு. குழந்தை கீழே விழுந்ததை அவ ஒளிவு மறைவு இல்லாமே சொல்லிட்டா. அதற்குப் போய் நாம அவளை திட்டினா, இனிமே எது நடந்தாலும் அதை நமக்கு சொல்லாமே மறைக்கப் பார்ப்பா. குழந்தை கீழே விழுந்ததை அவ மறைச்சிருந்தா, ராத்திரி குழந்தை வலியில் அழுதால் கூட, எதற்கு அழுகிறது என்பது தெரியாமல் அதை தூங்க வைக்கத்தான் முயற்சி பண்ணிட்டு இருப்போம். நடந்தது என்னன்னு இப்போ தெரிஞ்சு போச்சு. கீழே விழுந்ததில் குழந்தைக்கு எதுவும் ஆகாட்டாலும்கூட நம்ம திருப்திக்கு டாக்டரிடம் காட்டி விட்டு வந்திடலாம். சீக்கிரம் கிளம்பு. வர்றப்போ வெளியில் டிபன் சாப்பிட்டு விட்டு வந்திடலாம்" என்றான் சரவணன் குழந்தையை தோளில் தூக்கியபடியே..
" சாரிங்க " என்றாள் சாந்தி.
"எதற்கு?" என்று ஒன்றும் புரியாதவனாகக் கேட்டான் சரவணன்
No comments:
Post a Comment