நண்பேண்டா!!
நம்பேண்டா !!
"டேய், கோபி நான் உன் நண்பன்தானே " என்று கேட்டான் சரவணன் கோபமாக.
"அதிலேன்னடா சந்தேகம் ?" என்று எதிர் கேள்வி கேட்டான் கோபி.
"அப்படின்னா நீயும் ராஜுவும் ரொம்ப நேரமா ரகசியமா என்ன பேசிட்டு இருந்தீங்கனு சொல்லு"
"அது உனக்கு தேவையில்லாத விசயம்டா.உனக்கு தெரியனும்னு நினச்சிருந்தா ராஜூ உன்னையும் கூட வச்சிட்டுதானே பேசியிருப்பான். அதை செய்யலே. அப்படின்னா அதை கண்டுக்காமே ஒதுங்கிகிறதுதான் நாகரீகம் " என்றான் கோபி.
"ஆமாம், நாகரீகம். பொல்லாத நாகரீகம். நண்பனிடம் எதையும் மறைப்பதுதான் நாகரீகமா?"
"கோபபடாதே சரவணா. நாம என்னதான் நண்பர்களா இருந்தாலும் ஒருசில விஷயம் எல்லாருக்கும் தெரிய வேண்டாம்னு நினைப்போம்தானே? அப்படி ஒரு விசயத்தைதான் நாங்க பேசினோம்னு நினைச்சுகோயேன்."
"போடா. உன்னை எல்லாம் நண்பன்னு சொல்லிக்கவே எனக்கு வெட்கமா இருக்கு" என்றான் சரவணன் வெறுப்பாக.
"அப்படின்னா சொல்லிக்காதே " என்றான் கோபி சர்வ சாதாரணமாக.
"விளையாடாதேடா. என்னதான் சொன்னான் அவன் ?"
"எதையோ சொன்னான்"
"பார்த்தியா, இதுதானே வேண்டாங்கிறது. என்ன பேசிட்டு இருந்தீங்க ? ஸ்கூல் மேடரா ?" என்று கேட்டான் சரவணன் ஆர்வமாக.
"இருக்கலாம் "
"நம்மோட மத்த ப்ரண்ட்ஸ் பத்தின மேட்டரா ?"
"இருக்கலாம் "
"ஒருவேளை அவங்க வீட்டு விசயமா?"
"இருக்கலாம் "
"என்னடா நீ! எதை கேட்டாலும் இருக்கலாம் இருக்கலாம்னே பதில் சொல்றே. சீரியஸா கேட்கிறேன். விளையாடாமே பதில் சொல்லுடா."
"சரி சொல்றேன். நீ அதை யாரிடமும் சொல்ல மாட்டேதானே?"
"கண்டிப்பா சொல்ல மாட்டேன்"
"உனக்குன்னு தனியா ஒரு ப்ரண்ட்ஸ் சர்கிள் இருக்குமே . அவங்க கிட்டே ?"
"சொல்ல மாட்டேன்"
"நம்ம டீச்சேர்ஸ் யாராவது உன்னை அடிச்சு கேட்டா?"
"அப்பவும் சொல்லமாட்டேன்"
"உங்க வீட்டிலே இருக்கிறவங்ககிட்டே?"
" அட, உயிரே போனாலும் யாரிடமும் சொல்ல மாட்டேன். நீ பீடிகை எல்லாம் போடாமே விசயத்துக்கு வாடா " என்றான் சரவணன் எரிச்சலுடன்.
" அடேயப்பா. உயிரே போவதாயிருந்தாலுங்கூட நான் சொல்றதை நீ யாரிடமும் சொல்ல மாட்டே. அப்படிதானே?"
"ஆமாம்டா"
"அப்படி நம்பிதானே ராஜூ ஒரு விஷயத்தை, அது பைசா பெறாத விசயமாகவே இருக்கட்டும், அதை என்கிட்டே சொல்லியிருப்பான். அதை எல்லோரிடமும் நான் சொல்லனும்னு நீ ஏன் எதிர்பார்க்கிறே?" என்று கேட்டான் கோபி அமைதியாக..
இதை கேட்டதும் சிறிது நேரம் அமைதியாக இருந்த சரவணன், " சாரிடா. நீதான் உண்மையான நண்பன். உனக்கு நண்பனா இருப்பதில் எனக்குத்தான்டா பெருமை. இனிமே நான்கூட நண்பர்களோட நம்பிக்கைக்கு ஏற்ற ஆளா இருப்பேன். " என்றான்.
"தட்ஸ் குட். அதுதான் நாம ப்ரண்ட்ஸ்க்கு குடுக்கிற மரியாதை! வா போகலாம் "
No comments:
Post a Comment