"நோ.. நோ மோர் ஆர்க்யூமென்ட் ..ப்ளீஸ் நான் சொல்றதைக் கேளுங்க... உங்க அம்மா அப்பாவுக்குச் செலவு பண்றதில் கணக்கு வழக்கெல்லாம் பார்க்காதீங்க. என்னோட ஒட்டு மொத்த சம்பளப் பணத்தையும் அவங்களுக்காக செலவு பண்ண நான் ரெடி" என்று நீரஜா சொல்வதைக் கேட்டுவிட்டு, வீட்டுவாசலிலேயே அசந்து போய் நின்றார்கள் அவளைப் பார்ப்பதற்காக வந்த அவளின் தாய்தந்தையர்.
"உன் மகளா இப்படிப் பேசறது? கல்யாணமாகி ரெண்டு மாசத்துக்குள் இவ்வளவு பெரிய மாற்றமா? நம்பவே முடியலியே .. எடுத்தோம் .. கவிழ்த்தோம்னு எதையும் செஞ்சுதானே இவளுக்குப் பழக்கம்... இவகிட்டே ஒரு ரூபா காசு கேட்டால் கூட ஏன்? எதற்கு? அது இல்லாமல் சமாளிக்க முடியாதானு ஆயிரம் கேள்விக்கணை எதிராளியைத் துளைக்கும். அவளா சம்பளப்பணம் மொத்தத்தையும் தர்றதா சொல்றா? நம்பமுடியவில்லை .. நம்ப முடியவில்லை என்று செல்வம் திரைப்பட சிவாஜி ஸ்டைலில் மனைவியின் காதருகே ரகசியக் குரலில் கிசுகிசுத்தார் குமரவேல்.
"அதுதான் மஞ்சள் கயிற்றின் மகிமை" என்று சந்தோஷக் குரலில் பதில் சொன்னாள் சுந்தரி காலிங் பெல்லை அழுத்தியபடி.
கதவைத் திறந்த பாஸ்கர், அவர்களை ஆச்சரியக்குறியுடன் வரவேற்றான்.
"ஸர்ப்ரைஸ் விசிட் கொடுக்கணும்னுதான் முன்அறிவிப்பு செய்யாமல் வந்தோம்.. ஏதோ காரசாரமான சப்ஜெக்ட் ஓடுதுனு நினைக்கிறேன். என்ன மேட்டர் ?" என்று கேட்டார் சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தபடி.
"நீங்களே சொல்லுங்க டாடி. இவரோட அம்மா அப்பா இங்கே வந்து எங்களோடு இருக்கிறோம்னு சொல்றாங்களாம். அதெல்லாம் வேண்டாம். கிராமத்திலேயே இருக்கட்டும். இல்லே..கண்டிப்பா இங்கே வந்துதான் ஆகணும்னா ஹோமில்தான் கொண்டு போய் விடணும்னு சொல்றேன். பணம் செலவாகுமே; பட்ஜெட் கையை மீறிப் போயிடுமேனு .இவர் கவலைப்படறார். என் சம்பளப்பணம் முழுக்க தர்றேன்னு நானே சொல்றேன். இவர் ஆயிரத்தெட்டு யோசனை பண்றார். பணமா முக்கியம்.. பீஸ் ஆஃப் மைண்ட் தான் முக்கியம். சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறார் " என்று விளக்கம் சொன்னாள் நீரஜா.
அதானே பார்த்தேன். தங்கம் வச்சு தேய்ச்சா கூட எருமை நிறம் வெளுக்காது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார் குமரவேல்.
No comments:
Post a Comment