தன்னைச் சுற்றி நின்றவர்கள் தங்கள் மனதில் இருக்கும் பாரத்தை ஒருவர் பின் ஒருவராக துறவியின் முன்பாக சொல்ல / இறக்கி வைக்க, முகத்தில் எந்தவொரு சலனமும் இல்லாமல் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த துறவி அனைவருக்கும் பொதுவான பதிலாக "இயற்கையாக இருங்கள்!" என்று அமைதியான குரலில் சொன்னார்.
"அப்படின்னா மேக்கப் போட்டுக்கக் கூடாதா ?" என்று இளம் பெண்ணொருத்தி கேட்டாள்.
"அப்படியல்ல மகளே .. இயற்கை தனது கடமையை செய்யும்.. எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப்படாது. அது போல இருக்க பழகிக் கொள்ளுங்கள் . உங்கள் மனம் சஞ்சலப்படாது " என்றார் துறவி
"புரியலே" என்றாள் இளம்பெண்.
"மேலிருந்து தரையை நோக்கிப் பாயும் அருவி, "எல்லாரும் நல்லா குளிச்சாங்களா ? ரொம்ப குளிரா இருந்துச்சோ ? இந்த வேகம் போதுமா? இவன் மேலே என் தண்ணீர்த்துளி கொஞ்சங் கூட படக்கூடாது" என்று யோசிக்காது. ஆறுகள், அனைத்து நீர் நிலைகள், சூரியன் சந்திரன், காற்று அனைத்துமே எதைப் பற்றியும் யோசிக்காது "கொட்டுவது என்கடமை", "ஓடுவது என் கடமை", "உதிப்பதும், மறைவதும் என் கடமை, வீசுவது மட்டுந்தான் என் வேலை" என்று அதனதன் வேலை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை. அது போல உங்கள் கடமையை மட்டும் செய்யுங்கள் என்றேன். இதை அன்றைக்கே கீதை சொன்ன கண்ணன் "கடமையைச் செய்: பலனை எதிர்பாராதே " என்று சொல்லி இருக்கிறான். அதை நான் வேறு விதமாக வழிமொழிந்தேன் "என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் துறவி.
No comments:
Post a Comment