இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்..!
"ச்சே .. என்னம்மா இது அசடு மாதிரி அழறே ! கண்ணைத் துடைச்சுக்கோ. நான் என்ன சிரியா, கொரியா நாட்டுக்கா போறேன்.. இதோ இருக்கிற மைலாப்பூர் .. என்னைப் பார்க்கணும்னு தோணுனா ஒரு போன் பண்ணு . நினைச்சா ஒரு மணி நேரத்தில் உன்னைப் பார்க்க வந்துடுவேன். ப்ளீஸ். அழாதேம்மா ..."
"வழக்கமா பொறந்த வீட்டை விட்டு புருஷன் வீட்டுக்குப் போகிற பெண்ணை, அம்மா ஆறுதல் சொல்லி வழி அனுப்புவா.. இங்கே எல்லாம் உல்ட்டாவா இருக்குது. நீ அழறே .. அவ ஆறுதல் சொல்றா.." என்று வியந்தார் பெண்ணைப் பெற்றவர்.
"இல்லீங்க.. பையன் நல்லவனா தெரியறான்னு கொஞ்சமும் யோசிக்காமே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டோம். ஆனா அது சரியான ராட்ஷசக் கும்பல் மாதிரி தெரியுது. பொண்ணு பார்க்க வந்தப்பவே அந்த பேச்சு பேசினா. நேத்து தாலி கட்டி தாரை வார்த்துக் கொடுக்கிறவரை என்னவொரு ஆட்டம்..அங்கே இவ எப்படி சமாளிப்பாளோ தெரியலே. அதை நினைச்சா மனசு தாங்கலே. இவளை ஆண்டவன்தான் காப்பாத்தணும் "
"அட விடும்மா. ஒரு மருமகளா என்னோட டூட்டியை நான் கரெக்ட்டா செய்வேன். அந்த மரியாதையை அவங்களுக்கு காப்பாத்திக்கத் தெரியலைன்னா எங்காவது ஒரு ஹோமில் கொண்டுபோய் தள்ளிடுவேன். "
"நடக்கிற காரியமா? உன் புருஷன் உன்னை சும்மா விட்டுடுவானா ?"
"ஓஹோ. அப்படி ஒண்ணு இருக்குதா ? அப்படியொரு சூழ்நிலை வந்தா, "உங்க குடும்பத்தோட நீங்க இருங்க. நான் ஹாஸ்டலில் போய் தங்கிக்கிறேன்"னு சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போயிட்டே இருப்பேன். மூலையில் உக்கார்ந்து அழ மாட்டேன்" என்றாள் மகள் தெளிவாக.
அம்மா திகைத்துப்போய் நிற்க, "அந்தக் குடும்பத்தை ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு வேண்டிக்கோ " என்றார் பொண்ணோட அப்பா.
No comments:
Post a Comment