உலகில் இரண்டு விதமான மனிதர்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்று தன்னைசுற்றி தனக்குத்தானே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு வாழ்பவர் சிலர்.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம். மொத்தத்தில் வாழ்ந்தாக வேண்டும் என்ற நினைப்பில் பலர்.
ஒருசில விஷயங்களில் அந்த முதலாவது குரூப்பில்தான் இன்றும் நான் இருக்கிறேன். இப்படித்தான் என்று ஏதாவது ஒன்றை முடிவு செய்து விட்டால் அதை விட்டு மாற மாட்டேன். அது சாதகமா பாதகமா என்பது பற்றி கவலைப்பட மாட்டேன். நாம்தான் இப்படியா இல்லே நம்மளப் போலவும் சிலர் இருப்பாங்களா என்று அடிக்கடி யோசிப்பேன்.
என்னுடைய பழக்கங்களில் ஒன்று : நான் மிகவும் நேசிக்கும் யாராவது இறந்து விட்டால், அந்த வீட்டிற்குப் போவதை மிகவும் தவிர்ப்பேன். (பொதுவாக யாராவது இறந்து போன நியூஸ் வந்தால் அவங்களை, அவங்க முகத்தைப் பார்த்தே ஆகணும்னு ஓடுபவர்கள் பலர். நானோ, சாவு சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்குப் போகக் கிளம்பினால் கூட, " கடவுளே ..நான் போவதற்குள் "பாடி" அங்கிருந்து போய் இருக்க வேண்டும் " என்று வேண்டிக் கொள்வேன்.
எனது சித்தி சித்தப்பா, செல்வம் அண்ணா, தம்பி நடராஜ், எனது அலுவலக தோழி மீது எனக்குள்ள பாசம் என் வீட்டினருக்குத் தெரியும். ஆனால் இவர்கள் இறப்புக்கு நான் போகவில்லை.
காரணம் - அவர்களை நினைக்கும்போது அவர்களோடு பேசிப் பழகிய நாட்கள்தான் எனக்கு நினைவுக்கு வரவேண்டுமே தவிர "பிணக்கோலம்" நினைவுக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இப்படி எனக்கு ஒரு எண்ணம் உண்டு என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. இறப்புக்குக் கூட போகாதது பற்றி கெட்ட பெயர் வாங்கி இருக்கிறேன்.
ஒருவர் இறந்து பல மாதம் ஆகி இருக்கும். ஏதாவது வேலையாக அந்த குடும்பம் இருக்கும் ஊருக்கு செல்லும் சிலர், துக்கம் விசாரிப்பதை ஒரு வேலையாக செய்வார்கள். (கிட்டத்தட்ட அந்த குடும்பம் அதை மறந்து மீண்டு வந்திருப்பார்கள். இவர்கள் போய் அதை நினைவு படுத்துவார்கள்). இப்படியொரு வேலையை நான் எந்த சூழ்நிலையிலும் செய்ய மாட்டேன்.
இது சரியா பைத்தியக்காரத்தனமா நம்மளப்போல வேறு யாரவது இதே போல பீலிங்கில் இருப்பார்களா என்று அடிக்கடி யோசிப்பேன்.
நேற்று ஒரு சேனலில் திரைப்பட நடிகர் S.V.சேகர் நம் அம்மாவின் மறைவு குறித்தும் அங்கு போகாதது பற்றிய அவர் சூழ்நிலை பற்றி பேசும்போது, " எங்க வீட்டிலேயும் நெருங்கிய உறவினர் இறந்து விட்டார். இன்னொரு காரணம் இறந்துபோனவர்களை பார்க்க நான் விரும்புவதில்லை. அவங்க நினைப்பு வரும்போது இந்த இறப்பு எனக்கு நினைவுக்கு வரக்கூடாது என்பதால் தவிர்ப்பேன் என்றார்.
அவர் பேசினதை நான் முழுமையாகக் கேட்கவில்லை. தற்செயலாக சேனல் திருப்பும் போது இதைக் கவனித்தேன்.
ஆஹா....நம்மளப் போலவே யோசிக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து ஒரு சந்தோசம் (அல்ப சந்தோசம்). நீங்களெல்லாம் எந்த ரகம் ?
No comments:
Post a Comment