குழந்தைகள் ரொம்பவும் கேஷுவலாக எதையாவது சொல்வார்கள். அல்லது கேள்வி கேட்டு நம்மை மடக்குவார்கள். அந்த நேரத்தோடு அது அவர்களுக்கு மறந்துவிடும். ஆனால் நமக்கோ அது சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்றைப் பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, வருடங்கள் பல சென்றாலும் அவர்கள் சொல்லிய அந்த சொல்தான் நினைவுக்கு வரும்.
சில வருடங்களுக்கு முன்பு, வெளியூர் போவதற்காக சென்னை, சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போனோம்.எந்தெந்த பிளாட்பார்மிலிருந்து எந்தெந்த ஊருக்கு ரயில் புறப்படும் என்பதற்கான அறிவிப்பு ஒலித்துக் கொண்டிருந்தது.
ரயிலுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தோம். என் சகோதரியின் பையன், ‘ரயில்காரங்க ஏன் ராவணனைக் கும்பிடறாங்க. எப்பவும் ‘ராமா, ராமா’னு சொல்லணும்னு நீ சொல்வே. இவங்க ராவணன்னு சொல்றாங் களே’ என்று கேட்டான்.
எனக்கு எதுவும் புரியவில்லை. ‘அவங்க ராவணனைக் கும்பிடறதை நீ எப்ப பார்த்தே?" என்று கேட்டேன்.
அப்போது ரயில்வேயின் அறிவிப்பு வெளியாகிக் கொண்டிருந்தது. ‘இதோ நல்லா கேளு. இப்போ கூட ராவணன்னு சொல்றாங்க!’ என்றான். அப்புறம் நான் கவனித்தேன். எனக்கு சிரிப்பு வந்தது.
‘பதில் தெரியலைன்னா உடனே சிரிச்சே சமாளிப்பியே’ என்றான்.
‘அவங்க ராவணன்னு சொல்லலேடே. ‘ரவாணா ஹோகி’னு ஹிந்தியில் சொல்றாங்க. அப்படின்னா ‘புறப்படும்’னு அர்த்தம் என்று அவனுக்குப் புரிய வைத்தேன்.
இன்றைக்கும் சரி; நான் ரயில்வே ஸ்டேஷனில் நிற்கும்போது ‘ரவாணா ஹோகி’ என்கிற வார்த்தை காதில் விழும்போதெல்லாம். அன்று கேட்ட குழந்தைத்தனமான கேள்விதான் என் நினைவுக்கு வரும். (இன்றைக்கு அவன் ஐ.டி.கம்பெனியில் வேலையில் இருந்து கொண்டு, டெக்னாலஜி, சயன்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசுவதைக் கேட்கும் போதெல் லாம், அவனுடைய சிறுவயது சந்தேகக்கேள்விகள்தான் எனக்கு நினைவு வரும்.
திருநெல்வேலியிலிருந்து எனது கஸின், தனது பையனுடன் வந்திருந் தாள். இருவரையும் அழைத்துக்கொண்டு வள்ளுவர்கோட்டம் போயிருந் தேன் . திருவள்ளுவர் சிலையைக் காட்டி, "இவர்தான் திருவள்ளுவர்" என்றேன்.
’தெரியுமே. இவர் எங்க ஊரில் நிறைய பஸ் விட்டுருக்கிறார்!’ என்றான்.
‘என்னடா சொல்றே?’ என்று கேட்டேன் திகைப்புடன்.
‘எங்க ஊரிலே ஓடற எல்லா பஸ்ஸிலும் இவர் போட்டோதான் இருக்கும். அப்படின்னா அது எல்லாம் அவர் பஸ்தானே!’ என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு அருகில் நின்றிருந்தவர்களும் சிரித்தார்கள். (இப்போ அவன் தன் மனைவி, மகளுடன் அமெரிக்காவில் இருக்கிறான்)
No comments:
Post a Comment