நேற்று (16.09.2016) வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை. அனைத்துக் கட்சி போராட்ட நாள் என்பதால்.
டீவி ஒன்றே கதி என்று "ஒருநாள் வாழ்க்கை" முடங்கிப் போனது.
பழைய பாடல் காட்சிகளைப் பார்ப்பதும், செய்திகளைக் கேட்பதுமாக பொழுது கழிந்து கொண்டிருந்தது.
"போராட்டம் வெற்றி!" என்று ஒருவர் சொல்ல, "அப்படியா! தண்ணியைத் திறந்து விட்டுட்டாங்களா ?" என்று அப்பாவித்தனமாக கேள்வி கேட்டது அறிவு.
ஒருநாளில் முடங்கிப் போன பணிகள் எத்தனை? விசேஷங்களுக்கு நாள் குறித்துவிட்டு அல்லாடியவர்கள் எத்தனை பேர்? வியாபாரம் முடங்கிப் போன தால் ஒருநாள் நஷ்டத்தால் துவண்டு போனவர்கள் எத்தனை பேர் ?
கர்நாடகாவில் தமிழ்நாட்டுப் பேருந்துகள் வாகனங்கள் எரிக்கப்பட்டன. அடித்து நொறுக்கப் பட்டன. அவர்கள் வெறுப்பைக் காட்டிய விதம் அப்படி !அதற்கு கண்டனம் தெரிவிக்கும் நாம், நமது எல்லையில் நாம் அன்றாடம் பயணிக்கும் பஸ், ரயில் மீது ஏறி நின்று கொண்டுதானே ஆர்ப்பரித்தோம். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?!
முன்பொரு முறை ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி படித்த ஞாபகம் . மேலை நாடுகளில் குறிப்பாக ஜப்பானில் வேலை மறுப்பு போராட்டம் என்றால் அன்று விடுமுறை என்று அர்த்தமில்லையாம். அன்றைய தினம் எல்லாரும் பணிக்கு வந்து அவர்கள் வேலையை செய்வார்களாம். எப்படி ?
உதாரணமாக செருப்புக் கம்பெனி என்றால் வலது காலுக்கான ஷூவை மட்டுமே தயாரிப்பார்களாம். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப் பட்டதும் அதனுடைய ஜோடி ஷூ தயாராகுமாம்.
யாரையும் குறைகூறியோ போராட்டமே தவறு என்றோ இதை நான் பதிவு செய்யவில்லை. யாரும் பாதிக்காதபடி நமது மறுப்பை தெரிவிக்க வேறு வழியே இல்லையா என்ற கேள்வி மனதில் எழுந்தது. அதற்கு விடை தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இதனை பதிவு செய்கிறேன்.
சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !
No comments:
Post a Comment