Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 24, 2016

முஸ்லிம் சகோதரிகளுக்கு ஒரு விண்ணப்பம் !

பர்தா அணிந்து கொண்டு டூ வீலரில் பயணிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.: 
உங்கள் மத, குடும்ப பாரம்பரியப்படி பர்தா அணிகிறீர்கள். பர்தா அணிந்துகொண்டு டூ வீலரில் செல்லும்போது சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். 
நேற்று நான் வீட்டிலிருந்து தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆட்டோ ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தேன். காலை 9 மணிக்கும் முன்பான நேரம். வாகனங்கள் கண்மண் தெரியாமல் ரோட்டில் பறந்து கொண்டிருந்தன. அப்போது நானிருந்த ஆட்டோவைக் கடந்து எதிர் திசை யில் செல்வதற்காக ஒரு முஸ்லிம் சகோதரி டூ வீலரில் வந்தார். பள்ளிச்சீருடையில் அவருக்கு முன்னும் பின்னுமாக இரண்டு சிறுவர்கள். 8 வயதுக்கு மேலே இருக்கும். கடைசி ஆளாக ஒரு லேடி. வண்டி ஒட்டிய பெண்ணைவிட வயதில் சற்று முதிர்ந்தவர். ஒரு டூ வீலரில் நான்கு பேர். ஆட்டோவைக் கடந்து இவர் எதிர்த் திசையில் வரவேண்டிய நேரத்தில் பலத்த காற்று அடித்ததில் அவரது பர்தா அவரது முகத்தை முற்றிலுமாக     மூடி கழுத்தையும் சுற்றிக் கொண்டது. நல்ல வேளையாக ஆட்டோ ட்ரைவர் வண்டியை நிதானித்து ஓட்டினார். அந்தப்பெண்ணும் வண்டியை நிறுத்தி முகத்திலிருந்து துணியை விலக்கி விட்டுக் கொண்டிருந்தார். இரண்டு பேரும் வண்டியை நிறுத்தாமல் சென்றிருந்தாலோ, கழுத்தை சுற்றியுள்ள துணியை எடுப்பதற்காக ஒரு கையால் வண்டியை பேலன்ஸ் பண்ணியபடி மறு கையால் எடுக்க முற்பட்டிருந்தாலோ அந்த இடத்தில் ஒரு விபத்து நடந்திருக்கும். இவரை நம்பி இவர் பின்னால் மூன்று ஜீவன்கள் வேறு உட்கார்ந்திருக்கிறார்கள். நேற்று காலையிலிருந்தே வேகமான காற்றும் சிறிது தூறலும் இருந்தது. இரண்டு வண்டிகளும் எதற்காக நிற்கிறார்கள் என்பது தெரியாமல் பின்பக்கமிருந்து வேறு ஏதாவது வாகனங்கள் வந்திருந்தால் விளைவு மிக மோசமாக இருந்தி ருக்கும். 
உங்களுடைய , உங்களை நம்பி வருகிறவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதனை பதிவு செய்கிறேன்.   
தயவு செய்து டூ வீலரில் பயணிக்கும் போது நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்கள் பார்வையை மறைக்காதபடி கவனமாக செல்லுங்கள். 

No comments:

Post a Comment