Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 09, 2015

Scanning of inner - heart ( Scan Report Number - 137 )

                    ஏடு கொண்டலவாடா உனக்கே வெளிச்சம் !                          
"ஸ்ரீதர், வெளியே எங்கேயாவது கிளம்பறியா ?"
"ஏம்மா, என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது ?. இப்படி டீக்கா டிரஸ் பண்ணிட்டு படுத்துத் தூங்கவா போகமுடியும் ?"
"இந்த நக்கல் பேச்செல்லாம் வேண்டாம் . உன்கிட்டே கொஞ்சம் பேசணும் "
"ஓ .. பேசலாமே ... சாயங்காலம் ..."
"எனக்கு இப்போ பேசியாகணும் "
"எனக்காக பிரெண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க "
"அதைப் பத்திதான் பேசணும் "
"இப்போ என்னதான் பிரச்சினை உங்களுக்கு ?" என்றான் ஸ்ரீதர் கடுப்பான குரலில்.
"நீதான் .. உன்னோட நடவடிக்கைகள்தான் இப்போ பிரச்சினை எனக்கு "
"என்ன சொல்றீங்க ?"
"முன்னெல்லாம் உனக்கு ஆபீஸ் இல்லாத நாட்களில்தான் உன்னோட பிரெண்ட்ஸ்களைப் பார்க்கப் போவே... இப்போ நீ ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு பிரெண்ட்ஸ்களைப் பார்க்கப் போறே ... ராத்திரி நேரங் கெட்ட நேரத்தில் மணிக்கணக்கா போனில் யாரோடோ பேசறே. எப்பப் பார்த்தாலும் ஏதோ டென்சனில் இருக்கிறே .. காபி வேணுமான்னு கேட்டால் கூட சிடுசிடுன்னு எரிஞ்சு விழறே.. ஆபீஸில் ஏதாவது பிரச்சினையா ? இல்லே வேறு ஏதாவது விவகாரமா ?" என்று கேட்டாள் பார்வதி.
பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்றான் ஸ்ரீதர் .
"சொல்லு ... என்ன விஷயம் ?"
"ஒண்ணுமில்லே " 
"ஒண்ணுமில்லேங்கிற இந்த ஒரு வார்த்தையில் எத்தனையோ விஷயம் இருக்கு. எதுவா இருந்தாலும் மனம் விட்டுப் பேசு " 
சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, "கொஞ்சம் வருஷம் முன்னாடி நம்ம ஊர்  ராமசாமியோட  பொண்ணாலே ஊரில் பெரிய பிரச்சினை வந்துச்சே  ஞாபகமிருக்கா ?"
"அந்தப் பொண்ணு அவ வீட்டு வேலைக்காரனோட ஓடிப் போச்சு "
"ஓடிப் போனவங்களைக் காட்டிக் குடுத்தது யாரு ? வெளிநாட்டில் இருந்த ராமசாமியோட சொந்தக் காரன்தானே !"
"வீட்டை விட்டு ஓடிப்போன கழுதைங்க, வெளிநாட்டில் இருக்கிற அவளோட சொந்தக்காரன் உதவி பண்ணுவான்னு நினைச்சு அவனுக்குப் போன் பண்ணி பேசியிருக்குதுங்க. அவன் உதவி பண்ணாமே இதுக இருக்கிற இடத்தைக் காட்டிக் குடுத்துட்டான். ராமசாமி போய் அதுகளை இழுத்துட்டு வந்து கட்டி வச்சு அடிக்க, அந்தப் புதுமாப்பிள்ளையோட ஜாதி சனம் ஆட்களைக் கூட்டிட்டு வந்து இவங்களை அடிக்க   ஊரே ரெண்டு பட்டுப் போச்சு. தெருவில் போனவன் வந்தவனுக்கெல்லாம் அடிஉதை. எத்தனை வீடு தீயில் வெந்து போச்சு.. எத்தனை உசிர் போச்சு.  அதை யெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா. அதுக்குப் பிறகு ராமசாமி வீட்டைக் காலி பண்ணிட்டு வேறே ஊருக்குப் போயிட்டாரே  ?" என்ற பார்வதி, "அதை நினைச்சா இப்போ நீ கவலைப் படறே ?" என்றாள்.
"அந்த வெளிநாட்டுக்காரன்   ராமசாமியைப் பார்க்க அடுத்த வாரம் அவன் வீட்டுக்கு வர்றானாம். ராமசாமி இப்போ இருக்கிற ஊரில்தான் அவன் குலதெய்வம் கோவில் இருக்குதாம்"
"உனக்கெப்படி இது தெரியும் ?"
"பிரெண்ட்ஸ் சொன்னாங்க ... அதுமட்டுமில்லே ... அங்கே வர்ற அவனுக்கு அவன் மறக்கவே முடியாதபடி ஒரு பாடம் கத்துக் குடுக்கணும்  . அவனை சும்மா விடக் கூடாது.  கோவில் பக்கமே அவன் வரக்கூடாது ".
"இதோ பாரு ஸ்ரீதர் .. கோவிலுக்கு நாயும் வரும் .. நரியும் வரும் .. அதைத் தடுக்க நீ யார் ? எப்பேர்ப்பட்ட அயோக்கியனாக இருந்தாலும் கடவுளைக் கையெடுத்துக் கும்பிடும்போது 'எனக்கு நல்ல நினைப்பைக் குடு .. நல்ல வாழ்க்கையைக் குடுன்னுதான்   கும்பிடுவான் .. அப்படி அவன் வந்து கும்பிட்டுட்டுப் போகட்டுமே .. அந்த சாமி அவனுக்கு நல்ல புத்தியை குடுக்கட்டுமே "
"கிண்டலா ? அவன் மூச்சுக் காற்றே இந்தப் பக்கம்படக் கூடாது. அதான் அவனை எப்படித் தடுக்கணும்னு யோசனை பண்றோம். கறுப்புக் கொடி காட்டலாமா  ...."
"ஓ .. நீ கறுப்புக் கொடி காட்டினால் ... அய்யய்யோ மானம் போச்சேன்னு அவன் அப்படியே போயிடுவானா  .. அசடு ... கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலர்னு சொல்லி உங்க கையிலிருக்கிற துணியை வாங்கிட்டுப் போயிடுவானுக"
"அவன் வர்றது தெரிஞ்சா நாம போய் தகராறு பண்ணுவோம்னு ராமசாமிக்கு நல்லா தெரியும்.. நம்ம ஊர் பிரச்சினைக்கு காரணம் அவன்தானே .. நாம வெறியில் இருக்கிறோம் என்கிறதும் அவனுக்குத் தெரியும். அதனாலே அவன் மேலே தூசு கூட படமுடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடு செய்றானாம் "
"ஆமாம் ... நீங்க போய் வந்தவனை அடிப்பீங்க .. அடி அவன் மேலே மட்டுமா விழும்? அதை வச்சு தேவை இல்லாமே எத்தனை பிரச்சினை வரும்? அந்த ஊரில் பிறந்து வளர்ந்தவங்க இப்போ அவன் இருக்கிற நாட்டில்  இருக்கிறாங்க.. நீ இவனை அடிச்சா .. இந்த சண்டைக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவங்க பாதிக்கப் படுவாங்க. அந்த பாதிப்பு இங்கே பிரதிபலிக்கும் .. இதையெலாம் யோசிச்சுதான் ராமசாமி அப்படியொரு முடிவெடுத்திருக்கணும். அவன் இங்கே வாங்கின அடி அவனுக்கு இன்னும் மறந்திருக்காது .. இப்பவாவது அவனுக்குப் புத்தி வந்ததேன்னு நினைச்சு சந்தோசப்படாமே  முடிஞ்சுபோன ஒரு விசயத்து க்கு இப்போ ஏன் பிள்ளையார் சுழி போடறே  ?"
"என்னம்மா நீங்க ! கொஞ்சம் கூட மனித நேயமே இல்லாமல் .."
"அட ச்சே .. மூடுடா வாயை .. மனித நேயம்னு நினைச்சு நீ செய்ற ஒரு காரியம் மனுஷங்களுக்கு சந்தோசத்தைத் தரணும்.  ஒரு கலகத்துக்குத் தீர்வு இன்னொரு கலகம்னு உனக்கு யார் சொன்னது ? வந்தவங்களை வாழ வச்சுதான் எங்களுக்குப் பழக்கம்னு அவனுக்குப் புரிய வைக்கணும் . அதை விட்டுட்டு மனித நேயம்கிற  பேரில் புதுசா ஒரு கலகமா ? தேவையில்லாத வார்த்தைகளை பேசாமல் இருந்தாலே நிறைய விஷயங்க பிரச்சனைங்க  முடிவுக்கு வந்துடும்.  கொஞ்ச நாள் முன்னாடி விஜய் டீவீயில் வேலைக்குப் போகிற பெண்கள் பிரச்சினை பத்தி நிறைய பேர் நீயா நானாவில் பேசினாங்க.  எல்லாரும் அவங்கவங்க பிரச்சினை  கவலை சந்தோசம் பத்திப் பேசினாங்க .. ஒரே ஒரு லேடி மட்டும் ... அவங்க கால் டாக்ஸி டிரைவராம் ... அவங்க சொன்னாங்க ... கடைகளில் வேலை செய்கிறவங்க பன்னிரண்டு மணி நேரம் நின்னுட்டே வேலை பார்க்கிறாங்க. பெண்களுக்கு சில நாட்களில் இது மிகப் பெரிய அசௌகரியம் .. இதுக்கு ஒரு நல்ல முடிவு வரணும்னு ஒரு கோரிக்கையை வச்சாங்க .. அதுதான் மனித நேயம் ...நான் கூட புடவை எடுக்கப் போறப்போ நோட் பண்ணியிருக்கிறேன் . அங்கே வொர்க் பண்ற ஒரு சில லேடீஸ் ரெஸ்ட் ரூமில் .... ஈரத் தரையில் உட்கார்ந்திருப்பாங்க  . மொதல் முறையா அதைப் பார்த்தப்போ " என்னம்மா இது ?'னு கேட்டேன் ."எல்லாம் எங்க தலை விதி"ன்னு சொன்ன அந்தப் பொண்ணு ,"கஸ்டமர்ஸ் வர்ற இடத்தில் உட்காரக் கூடாது . அதான் இங்கே வந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்குவோம்"னு சொன்னா. சிலசமயம் உங்க அப்பாவோடு சேர்ந்து சினிமாவுக்குப் போயிட்டு பஸ்ஸில்   வர்றப்போ பின்பக்க ஸீட்டில் ஜென்ட்ஸ் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இடம் கேட்டு உட்கார்னு உங்க அப்பா சைகை பண்ணுவார் .பொழுதுக்கும் நின்னுகிட்டே வேலை செஞ்சுட்டு வர்றவங்களா இருக்கலாம் . அவங்களை ஏன் எழுப்பணும்னு நினைச்சுகிட்டு நான் நின்னுட்டே வருவேன். அவங்க நின்னுட்டே வேலை பார்க்கிறதை நினைச்சு பச்சாதாபப் பட முடிந்தது. வேறு எதுவும் செய்ய முடியலே . ஆனால் நீயா நானாவில் அந்த லேடி அந்த டாபிக் பத்தி சொன்னப்போ மனசுக்கு நிறைவா இருந்துச்சு.ஒரு பிரச்சினைனு இருந்தால் அந்தப் பிரச்சினைக்கு சுமுக முடிவு சொல்லணும். அது மனுஷ நேயம்.    பிரச்சினையை மேலும் மேலும் வளர்க்கிறதுக்குப் பேர் ....  என் வாயால் எதையும் சொல்ல வைக்காதே .. தேவையில்லாமே இன்னொரு கலகத்துக்கு பிள்ளையார் சுழி போடாதே.. பிறகு உன் இஷ்டம்  " என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பார்வதி .
தனது அறைக்குள் நுழைந்த ஸ்ரீதர் லுங்கிக்குள் தன்னை இணைத்துக் கொண்டு கையில் ரிமோட்டுடன் டீவீ முன்பாக உட்கார்ந்தான் .
  

No comments:

Post a Comment